

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற 14 மாதங்களில், உலகம் ஒரு பெரும் போர்ச் சூழலுக்குள் சிக்கியுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ / அரசியல் ஆதரவுடன் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தொடரும் இன அழிப்புப் போர் 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மானுடப் பேரழிவாக உருவெடுத்துள்ளது.
ஐ.நா. சாசனம், ஐ.நா. அவையின் கண்டனங்கள், சர்வதேச நீதிமன்றத்தின் எச்சரிக்கைகள் என எதையும் பொருட்படுத்தாமல், அமெரிக்க ராணுவத் தளவாடங்களின் துணையோடு இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் ராணுவ நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்துவருகிறார். அதிகாரம் இழந்த அமைப்புகளாக சர்வதேச அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.
பேரழிவைத் தடுப்பதில் தோல்வி
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் நாள்தோறும் நடைபெறும் மனிதப் பேரழிவைத் தடுப்பதில் தோல்வி அடைந்துள்ளன.
இதற்குக் காரணம், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் உலகில் மேலாதிக்கம் செலுத்துவதுதான். அரசியல், பொருளாதாரம், ராணுவரீதியாகவும் அந்நாடுகளின் மேலாதிக்கம் வலுப்பெற்று வருகிறது. பிற நாடுகளின் உள்நாட்டு அரசியலில் இந்நாடுகளின் தலையீடுகள் அதிகரித்துவருகின்றன.
ஐ.நா. அவை, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்ற அமைப்புகளில் அமெரிக்கா அதிக வாக்குரிமையையும் வீட்டோ அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
இந்த அமைப்புகளில் பெரும்பான்மை நாடுகளின் வாக்குகளைத் திரட்டுவதன் மூலம் தனக்குச் சாதகமான உலகளாவிய கொள்கைகளை அந்நாடு நிர்ணயிக்கிறது.