

பண்பாட்டைத் தனிக் கவனம் கொடுத்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் மிகச் சமீபத்தில் தோன்றியதுதான். அந்த ஆய்வும் எப்படி இருந்தது என்றால் கலை, இலக்கியம், ஓவியம், இசை என்று சில அம்சங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அதிலும் மேல்தட்டு மனப்பான்மை இருக்கும். காரணம் இவைதான் பண்பாடு என்று வரையறுக்கப்பட்டிருந்தது.
ஸ்டூவர்ட் ஹாலின் தனித்துவம் இந்தப் படிநிலையைக் கடந்து சாமானிய மக்களை நெருங்கிச் சென்று ஆராய்ந்தது மட்டுமல்ல; பண்பாடு என்பதன் பொருளை இயன்றவரை நீட்டித்ததன்மூலம் அறிவுலகுக்குப் புது ரத்தம் பாய்ச்சியதும்தான். பண்பாட்டு ஆய்வுகள் என்னும் புதிய துறையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராகவும் ஸ்டூவர்ட் ஹால் (Stuart Hall) கருதப்படுகிறார்.
பண்பாட்டை ஆராய்வது என்பது மானுட அனுபவங்களை ஆராய்வது. இதை மூன்றாகப் பார்க்கிறார் ஸ்டூவர்ட். முதலாவது, வாழ்க்கை அனுபவங்களை வாசித்தல். ஒரு பங்களாவில் வாழும் ஒரு குடும்பத்தை ஆராயும்போது அவர்களுடைய பின்னணி, அன்றாட வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள் என்று தொடங்கிப் பலவற்றை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு தொழிலாளியின் வீடு எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரியுமா? அதன் வரவேற்பறையை யாரேனும் விவரித்து எழுதினால் அதிலிருந்து நம்மால் ஏராளமான, நுணுக்கமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் அல்லவா? அந்தத் தகவல்களைக் கொண்டு அந்தக் குடும்பத்தின் பழக்கவழக்கம், தேவைகள், குறைபாடுகள், போராட்டங்கள் அனைத்தையும் குறித்து நமக்கொரு சித்திரம் கிடைக்கும்.
வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டு வர்க்கப் பேதங்களையும் அந்தப் பேதங்களை உருவாக்கிய வரலாற்றுச் சூழலையும் தெரிந்து கொள்ளலாம். அடுத்து இந்த அனுபவங்கள் எவ்வாறு விளக்கப்படுகின்றன என்பதை ஆராய வேண்டும் என்கிறார் ஸ்டூவர்ட்.