

பிரிட்டனின் காலனியாக இந்தியா இருந்தபோது பிறந்து (நவம்பர் 1931), வளர்ந்தவர். விடுதலை பெற்ற இந்தியா தோன்றுவதைக் கண்டவர். குழந்தையாக இருந்தபோது காந்தியையும் மாணவியாக ஜவாஹர்லால் நேருவையும் சந்தித்து இருக்கிறார்.
புதிய இந்தியாவை நேரு செதுக்கிக்கொண்டிருந்தபோது, பண்டைய இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தவர். ‘இந்த உலகில் உள்ள அனைவரும் என் குழந்தைகள். அனைவரையும் நான் நேசிக்கிறேன்.
அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் ஒரு புதிய உலகை என் குழந்தைகள் எதிர்காலத்தில் படைப்பார்கள்’ என்று கனவு கண்ட அசோகர்தான், ரொமிலா தாப்பரின் தொடக்கப்புள்ளி. கிட்டத்தட்ட அதே கனவுகளைக் கொண்டிருந்த நேருவுக்குத் தனது முதல் நூலை அனுப்பி வைத்து, அவரிடமிருந்து பதில் கடிதமும் பெற்றவர்.
ரொமிலா தாப்பரின் பெயர் பிரிக்க முடியாதபடிக்கு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தோடு (ஜேஎன்யு) பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முன்மாதிரியான வரலாற்றுத் துறையை அங்கே கட்டி எழுப்பியவர்களில் ஒருவர்.
1970 தொடங்கி 20 ஆண்டுகளுக்குமேல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். கற்பித்தல், ஆய்வுகள் என ஒரு வட்டத்துக்குள் அடங்கிக்கிடக்காமல் நடப்பு அரசியலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பவர். தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.
முற்கால இந்தியா முன்பைவிடவும் ஒளி நிறைந்ததாக இன்று திகழ்வதற்குக் காரணம் ரொமிலாவின் படைப்புகள் மட்டுமல்ல, அவருடைய தனித்துவமான ஆய்வுமுறையியலும்தான். விடைகளைக் காட்டிலும் கேள்விகள் முக்கியம் அவருக்கு. எப்போதும் புதிய தரவுகள் கிடைத்துக்கொண்டே இருக்காது. ஆனால், பழைய தரவுகள்மீது புதிய கேள்விகளை எழுப்ப முடியும்.
புதிய கோணங்களில் மீளாய்வு செய்ய முடியும். புதிய வெளிச்சங்களைப் பெறவும் முடியும். ரொமிலா தனது ஆய்வுகளை அடிப்படைகளிலிருந்து தொடங்கினார். இந்தியாவுக்கு வரலாறு கிடையாது; இந்தியர்கள் வரலாற்றுணர்வு அற்றவர்கள் என்னும் காலனியாதிக்கவாதிகளின் கருதுகோளைத் தனது பணிகளின் மூலம் தகர்த்தார்.