

தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ஒரு மாவட்டத்தில் இயங்கிவரும் நூலகம் ஒன்று, அதனுடைய 150ஆவது ஆண்டு விழாவை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூரில் இயங்கும் தனியார் நூலகமான பென்னிங்டன் நூலகம்தான் அது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதராஸ் இலக்கியச் சங்க நூலகத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான நூலகம் இது.
பெரும் பங்களிப்பு: ஆங்கிலேயர் ஆட்சியில் திருவில்லிபுத்தூர் அப்போதைய பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, அம்மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஜே.பி.பென்னிங்டன். தீவிர வாசிப்பு உடைய பென்னிங்டன், ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
உப்பு வரி, சுதேசியம், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு தலைப்பிலான இவரது கட்டுரைகள் ‘ஸ்பெக்டேட்டர்’, ‘ஹிந்து பேட்ரியாட்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன.
பென்னிங்டன் காந்தியடிகளுக்கு ஜலியான் வாலாபாக் படுகொலை குறித்து எழுதிய கடிதத்துக்கு, காந்தி தனது ‘யங் இந்தியா’ இதழில் விடையளித்துள்ளார் (29.09.1920). மாவட்டத்தின் நீராதாரம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளிலும் இவருடைய பங்களிப்பு இருந்தது. இவ்வளவு பங்களிப்புகளைச் செய்துள்ள இவருடைய புகைப்படம் இன்றளவிலும் கிடைக்காதது சோகம்.
இந்நூலகம் தொடங்குவதற்கு பென்னிங்டன் அளித்த பேராதரவின் காரணமாக அவருடைய பெயரே நூலகத்துக்குச் சூட்டப்பட்டது. அதேபோல, தொடக்கத்தில் இருந்தே மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருப்பவர் இந்த நூலகத்தின் அலுவல்வழித் தலைவராக (ex-officio president) இருந்துவருகிறார்.