

ஃபூக்கோ ஒரு புதிர். அவர் வாழ்க்கை, கனவு, போராட்டம் எது குறித்தும் நம்மிடம் தகவல்கள் அதிகமில்லை. விட்டுச் சென்றவை எழுத்துகள் மட்டுமே. அந்த எழுத்துகளும் மாபெரும் சிக்கல் மூட்டைகளாகக் குவிந்து நின்று நம்மை அச்சுறுத்துகின்றன.
ஒரே நேரத்தில் எளிதில் அணுக முடியாத மனிதராகவும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத தத்துவவியலாளராகவும் ஃபூக்கோ திகழ்ந்தாலும் வரலாற்றாளர்கள், மொழியியலாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல் விமர்சகர்கள் எனப் பலரும் அவரது எழுத்துகளிலிருந்து பயன் பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
பிரெஞ்சுத் தத்துவவியலாளரான மிஷேல் ஃபூக்கோ (Michel Foucault 1926-1984) எழுதியது என்னவோ பெரும்பாலும் வரலாறுதான் என்றாலும் தன்னை ஒரு வரலாற்றாளன் என்றல்ல, சிந்தனைகளை அகழாய்வு செய்பவன் என்றே அழைத்துக்கொள்ள விரும்பினார்.
அவர் கையாண்ட வழிமுறை மட்டுமல்ல, அவருடைய தேடலும் வழக்கமான வரலாற்றாளர்களிடம் இருந்து வேறுபட்டிருந்ததே இதற்குக் காரணம். ஆளுமைகளையோ நிகழ்வுகளையோ நாடிச் சென்றதில்லை அவர்.
ஆவணக் காப்பகங்களில் அடைந்து கிடந்தவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படாத கட்டுமானங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஆராய்வதுதான் ஃபூக்கோவின் வழிமுறை.
எடுத்துக்காட்டுக்கு, மொழி. மொழி ஒரு கருவி. நம் மனதில் உள்ளதை அது வெளிப்படுத்துகிறது என்னும் எளிய விளக்கத்தை ஃபூக்கோ மறுக்கிறார்.
‘என் எண்ணங்களை உள்ளவாறே வெளிப்படுத்தும் திறனை என் மொழி பெற்றிருக்கிறதா? என் சூழலின் யதார்த்தத்தை மொழியால் பிரதிபலிக்க முடியுமா? முடியாது’ என்கிறார் ஃபூக்கோ. மொழி ஒரு சமூகக் கட்டுமானம். அதிகார அமைப்பின்கீழ் அது செயல்படுகிறது.
‘நான் நினைத்ததை எல்லாம் நான் விரும்பியவாறு என்னால் பேசிவிட முடியாது. யாரிடம், என்ன, எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு வரையறைகள் உள்ளன. என் உரையாடல் சரி, தவறுகளுக்கு உட்பட்டது.
நான் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்னும்போது, என் சிந்தனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது எனும்போது, என் மொழியால் மட்டும் எப்படிச் சுதந்திரமாக இயங்க முடியும்? எப்படி என் சூழலை நேர்மையாகப் பிரதிபலிக்க முடியும்? எனவே, மொழியை நான் ஆராய வேண்டியிருக்கிறது.