

எப்படி உயிரியல் துறையால் சார்லஸ் டார்வினை மறக்க முடியாதோ அவ்வாறே மறுமலர்ச்சி வரலாற்றால் மறக்க முடியாத ஒரு பெயர், ஜேக்கப் புர்க்ஹார்ட் என்கிறது ‘தி கார்டியன்’ கட்டுரை ஒன்று. 19ஆம் நூற்றாண்டின் இந்த இரண்டு ஆளுமைகளின் புகழ்பெற்ற நூல்களுக்கும் அடிப்படையாகத் திகழ்வது, பயணம்.
டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ நூல் பீகிள் பயணத்திலிருந்து தொடங்கியது என்றால், சுவிஸ் வரலாற்றாளரான புர்க்ஹார்ட்டின் நூல் (The Civilization of the Renaissance in Italy, Jacob Burckhardt) இத்தாலி பயணத்திலிருந்து உருப்பெற்று வளர்ந்தது.
‘செவ்வியலுக்குத் திரும்புவோம்!’ - இந்த அறைகூவல்தான் மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தின் (14-17ஆம் நூற்றாண்டுகள்) ஆதாரப்புள்ளி. நீண்ட உறக்கத்தில் இருந்த கிரேக்க, ரோமானியச் செவ்வியல் படைப்புகளைக் கண்டறிந்து, அவற்றின் தாக்கத்துக்கு இத்தாலி உள்ளானபோது கலை, இலக்கியம், அரசியல், மதம் உள்ளிட்ட துறைகளில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. பண்டைய நாகரிகம் புத்துயிர் பெற்றபோது இத்தாலி புதுப் பொலிவோடு மலர்ந்தது.
மார்க்ஸ் பிறந்த அதே 1818இல் பிறந்தவர் ஜேக்கப் புர்க்ஹார்ட். தன் தந்தையின் பாதையைப் பின்பற்றி வரலாற்றைப் பற்றிக்கொண்டவர். பண்டைய வரலாறு, கட்டிடக் கலையின் வரலாறு, அரபி வரலாறு ஆகியவற்றைப் பயின்றவர். இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியதைத் தொடர்ந்து பண்பாட்டு வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டார். செவ்வியல் உலகம் அவரைக் கட்டிப்போட்டதை அடுத்து, மறுமலர்ச்சிக் காலம் அவருடைய கரங்களுக்குள் வந்து குவிந்தது.
இத்தாலியைத் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அவர் கண்டார். இத்தாலியும் அவ்வாறே கருதி இருக்கக்கூடும். ரோமாபுரியைவிட்டு விலகினால் தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று இளம் வயதில் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார் புர்க்ஹார்ட்.
நவீன வீதிகளில் வலம் வரும்போதெல்லாம் பண்டைய ரோமாபுரியின் நினைவுகளே அவரை அலைக்கழித்தன. நாமறிந்த நவீன உலகின் இதயத்துக்குள் பண்டைய உலகமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று அவர் நம்பினார். மறைந்து கிடப்பதைக் கண்டறிவதுதானே ஒரு வரலாற்றாளரின் பணியாக இருக்க முடியும்?