

கனவுகளும் நம்பிக்கைகளும் பொலபொலவென்று உதிர்ந்துகொண்டிருந்த காலம் அது. இரண்டு உலகப் போர்களையும் இரண்டு புரட்சிகளையும் (ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி) சந்தித்து முடித்து, அவற்றின் பாதிப்புகளில் இருந்தும் தாக்கங்களில் இருந்தும் விடுபடக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தது மேற்கத்திய உலகம்.
எதிர்காலம் என்ற ஒன்று உண்டா? ஆம் எனில், அதில் இருள் தவிர்த்து வேறு ஏதேனும் இருக்குமா? கண்டிப்பாக இருக்கப்போவதில்லை என்று கட்டியம் கூறும் கட்டுரைகளும் நூல்களும் வேகவேகமாக எழுதப்பட்டு வந்தன. இவற்றை நம்பாதவர்கள்கூடப் பனிப்போரையும் பொருளாதாரச் சரிவுகளையும் வேலையில்லாத் திண்டாட்டங்களையும் நிலையின்மையையும் கண்டு மருண்டு போயினர்.
‘மருளாதீர்கள், பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டுச் சாதாரண மக்களைப் பாருங்கள்... இருள் உண்டென்றால் ஒளியும் உண்டு என்னும் உண்மையை அவர்களிடம் நீங்கள் கற்கலாம்’ என்றார், பிரிட்டிஷ் வரலாற்றாளர் ஈ.ஹெச்.கார் (EH Carr) (1892-1982).
எளிய மக்கள் பிடிப்போடு இருக்கிறார்கள். ஆர்வத்தோடு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். எதிர்காலம் குறித்த கனவுகளை வளர்த்துக்கொள்வதோடு அந்தக் கனவுகளை நிறைவேற்றவும் துடிக்கிறார்கள். காலம் முடியப்போவதில்லை. வரலாறு இறக்கப்போவதில்லை. நாம் வாழ்வோம் என்றார் கார்.
வரலாறு என்றால் என்ன? மிக எளிமையான இக்கேள்வியை முன்வைத்து மிகப் பெரும் உரையாடல் ஒன்றை 1961இல் அவர் தொடங்கிவைத்தார். வரலாறு என்பது உண்மைத் தகவல்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் சித்திரம் என்னும் எளிமையான விளக்கத்தை அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்.