

ஒரு வரலாற்றாளர் சான்றுகள் அற்ற எதையும் ஆராய முடியாது, ஆராய முடியாத எதையும் வரலாறாகக் கொள்ள முடியாது என்பதால், இதிகாசம், புராணங்களிலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டிருந்தனர். தொன்மமும் வரலாறும் இரு வேறு உலகங்களாக நீண்ட காலத்துக்குப் பிரிந்தே கிடந்தன.
இந்நிலையில், பண்பாட்டின் ஒரு முக்கியமான பகுதி என்பதால் தொன்மத்தையும் ஒரு வரலாற்றாளர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் டி.டி.கோசாம்பி (1907-1966) முதன்மையானவர். எல்லாமே வரலாறு, எதுவும் வரலாறு அல்ல என்னும் இரண்டு நிலைப்பாடுகளையும் விலக்கி, ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டதன் மூலம், இரு உலகங்கள்மீதும் கோசாம்பி வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.
ராமாயணமும் மகாபாரதமும் கற்பனைக் கதைகள்தாம் என்றாலும், அந்தக் கற்பனை தோன்றிய சூழல் நிஜம். ஒரு கதையைக் குறிப்பிட்ட வடிவில் கற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஒரு சமூகத்துக்கு ஏன் தோன்ற வேண்டும்? யாருக்காக உருவாக்கப்பட்டவை இக்கதைகள்? ஒரு கதை எந்தப் புள்ளியில் நம்பிக்கையாக மாறுகிறது? - இப்படி சாக்ரடீஸ் போலத் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பிக்கொண்டே செல்வது கோசாம்பியின் பாணி.
ஆட்சியாளர்களின் தொடர்ச்சியை ஆராய்வதுபோல் கடவுள்களின் தொடர்ச்சியையும் ஆராய்கிறார் கோசாம்பி. ஆரியர்கள் தொடக்கத்தில் வேத காலக் கடவுள்களை உருவாக்கினார்கள். பலியிடுதல் அவர்களுடைய முக்கியச் சடங்காக இருந்தது.
பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியோடு சேர்ந்து பல சமூக மாற்றங்கள் நிகழத் தொடங்கின. எடுத்துக்காட்டுக்கு, இரும்புக் கருவிகளை மக்கள் திறம்படக் கையாளத் தொடங்கியதைத் தொடர்ந்து, அடர்ந்த கங்கைச் சமவெளிப் பகுதிகளைத் திருத்தித் தங்கள் வாழிடங்களாக மக்கள் மாற்றிக்கொண்டனர் (பொ.ஆ.மு. (கி.மு.) 1000-600 வரை).
இந்தியாவின் முதல் நகரமயமாக்கல் இதுவே. இந்திய நாகரிகத்தின் பாதை சிந்து சமவெளியிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குக்கு நகர்ந்தது. இரும்பையும் வேளாண்மையையும் மையமாகக் கொண்ட சமூகப் பொருளாதார அடித்தளம் உருவானது.
அரசு உருவாக்கம் நடைபெற்றதும் இந்தக் காலத்தில்தான். ஒரு மார்க்சியராக கோசாம்பி இந்தக் கட்டமைப்புகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். சமூகப் பொருளாதாரக் கட்டுமானத்தோடு அரசின் தோற்றம், மதங்களின் தோற்றம் போன்றவற்றை இணைத்துப் பார்த்தார்.