

‘இருள் சூழ்ந்திருக்கும்போது, பற்றிக்கொள்ள எதுவும் இல்லாதபோது, பசியும் அச்சமும் குழப்பமும் போட்டியிட்டுப் பிய்த்துத் தின்னும்போது ஒரு வெளிச்சக் கீற்று தோன்றும். ஒரு நாயகன் தோன்றி வருவான். நமக்கான போரை முன்னெடுப்பான். நமக்கான நம்பிக்கையை மீட்டெடுப்பான். கொள்ளையன் என்று உலகம் அவன்மீது முத்திரை குத்தலாம். ஆனால், அவன் நம்மில் ஒரு பகுதி. நம்முடைய ராபின் ஹுட்!’செல்வந்தர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சாமானியர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் ஒரு தலைவன் என்னும் கற்பனை அழகானதுதான். ஆனால், வரலாற்றாளர்கள் பொதுவாகக் கற்பனைகளில் திளைப்பதில்லை. ராபின் ஹுட் என்றொருவர் வாழ்ந்தார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லாதபோது, அவரைப் பற்றி எப்படி ஆராய முடியும்?
எரிக் ஹாப்ஸ்பாம் (1917-2012) இதை வேறு கோணங்களிலிருந்து அணுகினார். ராபின் ஹுட் என்றொருவர் இருந்தாரா, இல்லையா என்பது முக்கியம் இல்லை. ஒரு சமூகம் அவரை நினைவில் கொண்டிருக்கிறது. காரணமின்றி நினைவுகள் உருவாவதில்லை. பலனடைந்தவர்களுக்கு அவன் ஒரு நாயகன். இழந்தவர்களுக்கு அவன் ஒரு கொள்ளையன். வரலாற்றில் இப்படிப் பல கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எல்லோரையும் மக்கள் நாயகர்களாக வழிபட்டதில்லை. தனிப்பட்ட தேவைகளுக்காக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் உதிர்ந்துவிடுகிறார்கள்.
கொள்ளையர்களைச் சட்டம் கவனித்துக்கொள்ளட்டும். ராபின் ஹுட்டுகளை நாம் கூர்ந்து கவனிப்போம் என்றார் ஹாப்ஸ்பாம். விவசாயக் கிளர்ச்சிகளை ஹாப்ஸ்பாம் ஆய்வு செய்துகொண்டிருந்த காலம் அது. நிலச்சுவான்தார்களுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் ஒன்றுகூடி நடத்திய பல கலகங்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இத்தாலி தொடங்கி ஐரோப்பாவின் பல பகுதிகளில் இத்தகைய கிளர்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.