

பொதுவாக, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது பெருநிறுவனங்கள், தொழிலதிபர்கள், வருமான வரி செலுத்துவோர் தங்களுக்குக் கிடைக்கப்போகும் லாப நஷ்டங்களை உடனடியாகக் கணக்கிட்டுவிடுவார்கள். ஆனால், வேளாண் சமூகத்தைப் பொறுத்தவரை, பட்ஜெட் அறிவிப்புகள் எப்போதும் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவே உணரப்பட்டு வந்துள்ளன.
இதனால், பட்ஜெட் மீதான ஆர்வம் விவசாயிகளிடையே வரலாற்றுரீதியாகக் குறைவாகவே இருந்துள்ளது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது.
சாகுபடிச் செலவுகளில் அதீத உயர்வு, சந்தையில் அடிக்கடி நிலவும் கடும் விலை வீழ்ச்சி, விவசாயத்தில் லாபம் குறைந்துவருவது, விவசாயத்தின் வேகமான வணிகமயமாக்கல் போன்ற காரணங்களால், பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், 2026 பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், விவசாயிகளின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா?
அதிக ஒதுக்கீடுகள்: இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி ஆதாரங்கள், அரசின் நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையைப் பறைசாற்றுகின்றன. ஒரு வலுவான பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் நோக்கில், இத்துறைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,35,779 கோடியாக 2026-27 பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது; இது கடந்த ஆண்டின் பட்ஜெட்டைவிட 21% உயர்வு.
குறிப்பாக, வேளாண் துறைக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,37,571 கோடியில் இருந்து ரூ.1,40,528 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளதுடன், ‘விக்சித் பாரத் ஜி-ராம் ஜி’ (Viksit Bharat G RAM G) என்கிற புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு - உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுக்கான நிதி ரூ.86,000 கோடியிலிருந்து ரூ.1,25,692 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.