

எல்-நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation) என்பது நிலநடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பத்தைப் பொறுத்த ஒரு மாற்றம். இதில் எல்-நினோ, லா-நினா, சமமான பருவம் என்று மூன்று அம்சங்கள் உண்டு.
இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது மாறிக்கொண்டே இருக்கும். கடலின் மேற்பரப்பு வெப்பம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால் எல்-நினோவும், குறைவாக இருந்தால் லா-நினாவும் ஏற்படும்.
இந்த இரண்டும் இல்லாத காலக்கட்டத்தைச் சமநிலை என்பார்கள். இந்த அலைவு உலகம் முழுவதிலும் உள்ள காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இந்தியாவின் பருவமழை, சராசரி வெப்பநிலை ஆகியவற்றை இது மாற்றியமைக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் குளிர் பருவமான லா-நினா தொடங்கியது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் குளிர்காலம் கடுமையானதாக இருந்தது. சில பகுதிகளில் குளிர் அலைகளும் ஏற்பட்டன.
அதிகரிக்கும் தீவிரத்தன்மை
லா-நினா சிறிது சிறிதாக வலுவிழந்துவரும் நிலையில் அடுத்ததாக நிகழப்போவது என்னவாக இருக்கும் என்று சில மாதங்களாக அறிவியலாளர்கள் கவனித்துவந்திருக்கின்றனர். அடுத்த சில மாதங்களில் எல்-நினோ காலக்கட்டம்தான் வரும் என்பது இப்போது உறுதியாகி இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பம் பிப்ரவரி மாதம் தொடங்கி மெல்ல அதிகரித்துவருகிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால் எல்-நினோவுக்கான அளவீட்டை அது விரைவில் எட்டிவிடும்.
ஜூன் முதல் ஆகஸ்ட்டுக்குள் இந்த எல்-நினோ வரும் என்றும், அதற்கு 62% சாத்தியக்கூறு இருப்பதாகவும் அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் - வளிமண்டல அமைப்பு (National Oceanic and Atmospheric Administration - NOAA) தெரிவித்திருக்கிறது.
எல்-நினோ தெற்கு அலைவு இயற்கையான சுழற்சியின் ஓர் அங்கம். ஆனால், காலநிலை மாற்றம் தீவிரமடைந்ததற்குப் பிறகு ஏற்படும் எந்தப் பருவகால நிகழ்வும் இயல்பானதாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.