

அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராகப் பணிபுரிபவர்களின் அவலம் பொது வெளியில் அதிகம் பேசப்படுவதில்லை. கடந்த ஆட்சிகளில்
தொடர்ந்து ஏமாற்றங்களைச் சந்தித்துவந்த கெளரவ விரிவுரையாளர்கள், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு மூலம் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் எனக் காத்திருக்கிறார்கள்.
அலட்சியம் செய்த அரசு
கௌரவ விரிவுரையாளர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் ஊதியம் தர வேண்டும் என 2019இல் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைத்தது. இந்த ஊதியத்தை அரசுக் கல்லூரிகளின் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு, 2024 அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கௌரவ விரிவுரையாளர்கள் யுஜிசி வரையறையின்படி பணியில் அமர்த்தப்படவில்லை என்று கூறி, பரிந்துரைக்கப்பட்ட ஊதியத்தை வழங்க மறுத்துவிட்டது அன்றைய திமுக அரசு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அரசுக் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ‘கௌரவ விரிவுரையாளர்கள்’ என்னும் பெயரை அரசு வழங்கியுள்ளது.
அதற்கு முன்பும் அரசுக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்ட அதே முறையில் பணியில் அமர்த்தப்பட்டதுடன் சம்பளமும் அவர்களுக்கு இணையாக வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தரக் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் காரணமாகவும் நீதிமன்றத் தலையீட்டினாலும் 1980களில் தற்காலிக ஆசிரியர்களை அரசு பணி நிரந்தரம் செய்துள்ளது.
1990களில் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கை கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவித்தது; கல்வி போன்ற சேவைத் துறைகளில் அரசின் செலவினங்களைக் குறைக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. உண்மையில், 1990களுக்கு முன்பே கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவித்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.
நவதாராளவாதக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததாலும் அரசும் புதிதாகக் கல்லூரிகளைத் தொடங்கியது. ஆனால், அக்கல்லூரிகளுக்குப் போதிய நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் கௌரவ விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்தியது.