

இந்திய நீதித் துறையில் பெண்களின் பங்கேற்பு என்பது போராட்டங்களாலும் அசாத்திய உறுதியினாலும் கட்டமைக்கப்பட்டது. இன்றைக்கு நாம் காணும் நிலையை அடையப் பல கட்டங்களைக் கடந்து வர வேண்டியிருந்தது.
1879ஆம் ஆண்டு சட்டத் தொழிலாற்றுநர் சட்டம் ஆண்களுக்கு மட்டுமே வழக்கு நடத்தும் உரிமையை வழங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பெண்கள் நீதிமன்றத்தில் நிற்கவே தகுதியற்றவர்கள் என்கிற மனநிலை நிலவியது.
இந்த அநீதியை வேரறுக்க 1919இல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ரெஜினா குஹா தொடர்ந்த வழக்கு ஒரு மாற்றத்தின் தொடக்கமாக அமைந்தது.
1921இல் பிரிட்டனில் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கார்னேலியா சொராப்ஜி இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகப் பதிவுசெய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஆனந்தா பாய் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் வழக்கறிஞராக வரலாற்றில் இடம்பெற்று, தென்னிந்தியாவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தார்.
சமத்துவத்தின் அடிப்படை
இந்திய அரசமைப்புச் சட்டம் பாலினச் சமத்துவத்தை மையக் கோட்பாடாகக் கொண்டுள்ளது. சட்டக்கூறு 14 அனைத்துக் குடிமக்களும் சட்டத்தின் முன் சமம் என்பதை உறுதிசெய்கிறது. சட்டக்கூறு 15 பெண்களுக்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.