

இந்தத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்களின் தெரிவு குறித்த கணிப்புகள் கவனம் பெற்றுள்ள சூழலில், ‘முதல் முறை வேட்பாளர்’ அனுபவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மறைந்த சில தலைவர்கள் ‘முதல் தேர்தல்’ களங்களை எதிர்கொண்ட விதத்தைச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.
போட்டியின்றித் தேர்வு
காங்கிரஸ் இயக்கம், 1937இல் முதன்முதலாகத் தேர்தலில் பங்கேற்க முடிவெடுத்தது. மதராஸ் மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அர்ப்பணிப்பு மிகுந்த கட்சிப் பணி, உப்பு சத்தியாகிரகப் போராட்டத்துக்காகக் கிடைத்த ஓராண்டுச் சிறைத் தண்டனை, கள்ளுக்கடை மறியல் போராட்டம் போன்றவற்றால் வட்டாரத்தில் அவருக்கெனத் தனி மதிப்பு நிலவியது.
தங்கள் வேட்பாளரை நிறுத்துவதில்லை எனப்பிற கட்சிகள் முடிவெடுத்திருந்தன. இதனால், முதல் தேர்தலில் காமராஜர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டு விடுதலைக்குப் பின்னர், அவர் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தல் வித்தியாசமானது.
ராஜாஜி பதவி விலகியதை அடுத்து, முதல்வர் பொறுப்பேற்றிருந்த காமராஜர், இடைத்தேர்தல் நடைபெறவிருந்த குடியாத்தத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.கோதண்டராமன் போட்டி. பிற கட்சிகள் காமராஜரை ஆதரித்தன.
‘உங்களுக்குத் தொடர்பே இல்லாத தொகுதி இது; கம்யூனிஸ்ட்களின் கோட்டையும்கூட’ எனச் சிலர் காமராஜரைப் பயமுறுத்தினர். இந்தச் சூழலில் காமராஜர் தன்னம்பிக்கையோடு தொகுதி முழுவதும் திறந்த ஜீப்பில் வலம் வந்து வாக்கு சேகரித்தார். காமராஜரை ஆதரித்த பெரியார் ஈ.வெ.ரா.வின் பரப்புரையும் கைகொடுத்தது. காமராஜர் 38,212 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
தோல்வியே முதல் படி...
அறிஞர் அண்ணாதுரை முதன்முதலாக வேட்பாளர் ஆனது, சென்னை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில்தான். நீதிக்கட்சி சார்பில் பெத்தநாயக்கன்பேட்டையில் போட்டியிட்ட அவர் வெற்றி பெறவில்லை. 1957 சட்டமன்றத் தேர்தலில்தான் திமுக முதல் முறையாகப் போட்டியிட்டது.