

சுயேச்சைகளைக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன மக்களின் வாக்கு என்கிற ஆயுதம் முக்கியத் தலைவர்களைக்கூட வீழ்த்தியிருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதலமைச்சராகத் தேர்தலை எதிர்கொண்டு தோல்வியடைந்தவர் ஜெ.ஜெயலலிதா.
1991இல் பர்கூர், காங்கேயம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற ஜெயலலிதா, பர்கூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
1996 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சி மீது அதிருப்தி அலை வீசியது. முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்தத் தேர்தலில் ஏற்கெனவே வென்ற பர்கூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுகவின் எஸ்.ஜி.சுகவனத்திடம் தோல்வியடைந்தார்.
அந்த வகையில் முதல்வராகத் தேர்தலை எதிர்கொண்டு ஒரு தொகுதியில் தோல்வியடைந்தவர், ஜெயலலிதா. தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த கு.காமராஜர், 1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெ.சீனிவாசன் என்கிற இளைஞரிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
1969இல் அண்ணா மறைந்த பின்னர், 1987இல் எம்ஜிஆர் மறைந்த பின்னர் என இரண்டு முறை தற்காலிக முதல்வராகப் பதவி வகித்த இரா.நெடுஞ்செழியன், 1989 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, மூன்று இலக்கத்தில் வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.
இதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகர் எஸ்.வி.சேகர், நெடுஞ்செழியனைவிட அதிக வாக்குகள் பெற்றது அந்தக் காலக்கட்டத்தில் பேசுபொருளானது. முந்தைய தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், பின்னாளில் முதல்வரான வரலாறும் உண்டு.
இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 1984, 1991ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஆயிரம்விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார். 1996, 2006இல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்தார்.
தேர்தல்களில் தோல்வி அடைந்திருந்தாலும் ஸ்டாலின், பழனிசாமி பின்னாள்களில் முதல்வ ரானார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததும் கவனிக்கத்தக்கது.