

மொழியியல் (linguistics) அறிஞரான கி.அரங்கன், மொழியின் கட்டமைப்பை ஆராய்கிற மாற்றிலக்கணத் துறையில் (transformation grammar) இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்தவர்; இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இடம்பெற்றுள்ளன.
1982இல் தமிழுக்கெனவே பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அதற்கு அடித்தளம் அமைத்த பேராசிரியர்களில் இவரும் ஒருவர். தற்போது தஞ்சாவூரில் வசிக்கும் அரங்கனுக்கு 83 வயது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
மொழியியலும் அதன் ஒரு பகுதியான மாற்றிலக்கணமும் உங்களுக்கு எப்படி அறிமுகமாகின?
பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் ஆய்வுகள் மொழியியலில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின. எனக்குக் கற்பித்த பேராசிரியர்களான வ.அய்.சுப்பிரமணியம், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம் போன்றோரும் எனது ஈடுபாட்டுக்குக் காரணம். மாற்றிலக்கணம் 1957இல் பேராசிரியர் நோம் சோம்ஸ்கி மூலம் உலகுக்கு அறிமுகமானது.
மனித நேயம், மனிதரின் படைப்பாற்றலோடு அவரது மொழிக்கொள்கை பின்னிப்பிணைந்துள்ளது. நான் 1976இல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வருகைதரு அறிவியலாளராகச் சேர்ந்தேன்.
அங்கு சோம்ஸ்கியிடம் மூன்று மாதங்களுக்கு மாற்றிலக்கணம் பயின்றேன். வேதிப் பொறியியலிலிருந்து மொழியியலுக்கு வந்தவர் பேராசிரியர் ராபர்ட் பி.லீஸ். அவர் சோம்ஸ்கியின் வழிகாட்டலில் முனைவர் பட்டம் முடித்தவர். சோம்ஸ்கியை விட வயதில் மூத்தவர்; மாணவர்களின் மனங்கொள்ளும்வகையில் பாடம் நடத்துவார். அவரிடமும் பயின்றேன்.
பிற்காலத்தில் நான் மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தில் பணிபுரிந்தேன். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் மூலம் அதில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் முதல் பேராசிரியர் ஆனேன்.
தமிழகத்தில் மொழியியல் அறிமுகமாகிற காலக்கட்டத்தில் அதில் பணிபுரிந்த சூழலைக் கூற முடியுமா?
அந்தக் காலத்தில் தமிழ்த் துறை என்றால் இலக்கிய ஆராய்ச்சி என்றே அறியப்பட்டிருந்தது. பேச்சுவடிவத்தைவிட, எழுத்து வடிவமே உயர்ந்தது என்கிற மனநிலை நிலவியது. இதனால் மொழியியல் குறைத்து மதிப்பிடப்பட்டது.
பேச்சுவழக்கு குறித்த ஆய்வு, மொழியியலில் முக்கியமான அங்கம். வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதும் படிக்கக் கடினமானது என்கிற கருத்தும் மொழியியலுக்கு இன்றும் தடையாக உள்ளன.