

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. இதற்கான சட்டம் எவ்வாறு செயல்படுகிறது, அதை நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள், எதிர்காலம் குறித்து வழக்கறிஞரும் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, தீர்வு) சட்டம் (POSH-Prevention of Sexual Harassment) குறித்துப் பயிற்சி அளிப்பவருமான ஜோதிலட்சுமியுடன் நடத்திய உரையாடல்...
போஷ் சட்டம் குறித்து எளிமையாகச் சொல்லுங்கள்...
ஆயிரம் ஆண்டுகளாகப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை, இந்த நவீனக் காலத்தில்தான் கவனம் அளிக்கப்பட்டு, அதற்கெனச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பலரும் நினைப்பதுபோல போஷ் சட்டம் அரசாங்க அலுவலகத்திலோ கார்ப்பரேட் நிறுவனத்திலோ அதிகாரத்தில் இருப்பவர்களாலோ உருவானது அல்ல.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, எளிய பின்னணி கொண்ட பன்வாரி தேவியின் போராட்டம் மூலம் உருவான சட்டம். சாமானியப் பெண் ஒருவர், சக சாமானியப் பெண்களுக்குப் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்திருக்கிறார்.
இப்படி மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு மக்களிடமிருந்தே வர வேண்டும். 10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் கண்டிப்பாக உள்புகார் குழுவை உருவாக்கியிருக்க வேண்டும். இது முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களிலேயே சம்பிரதாய அளவில்தான் இருக்கிறது.