

கோம்பை எஸ்.அன்வர்
வரலாற்று ஆய்வாளர், ஆவணப்பட இயக்குநர், தமிழ்-இஸ்லாம் ஆர்வலர் என்று பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கோம்பை எஸ்.அன்வர்.
‘தமிழரின் தொன்மைத் தொழில்களில் ஒன்று கடல் கடந்த வணிகம்’ என்று கூறும் இவர், தமிழகத்தில் இஸ்லாம் வரலாறு பொ.ஆ.
(கி.பி.) 7ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்னும் கருத்தை முன்வைத்துவருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து..
தமிழக இஸ்லாம் வரலாற்றை அறிவதற்கான முன்னெடுப்புகளை இளம்பருவத்திலேயே தொடங்கிவிட்டீர்களா?
தமிழ் சார்ந்த பெருமிதமே எங்கள் குடும்பச்சூழலாக இருந்தது. திராவிட இயக்கத் தாக்கம் அதிகமுள்ள குடும்பம். கல்லூரிக் காலத்தில் சென்னை வந்தபோது, இந்தி தெரியாத முஸ்லிம் என்றவுடன் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்.
இயல்பாகவே வரலாற்றில் ஆர்வம் இருந்தபோதும், நமது வேர்கள் என்ன என்ற தேடல் அப்போதுதான் தொடங்கியது. லயோலா கல்லூரியில் ‘காட்சித் தொடர்பியல்’ படித்துவிட்டு பத்திரிகையாளராகப் பணியாற்றியதும் அதற்கு ஒரு காரணம்.
சங்ககாலம் தொட்டு தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய பொருளீட்டலாக இருந்தது, கடல் கடந்த வணிகம்தான். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை இஸ்லாம் வந்தடைந்த பின்னர், கடல் வணிகம் காலப்போக்கில் தமிழ் இஸ்லாமியர்கள் சார்ந்ததாக மாறியது.
இதுதான் வரலாறு. ஒரு பிரபல எழுத்தாளர் இதற்கு மாறாக ஒரு வார இதழில் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. தமிழகத்தில் இஸ்லாம் வரலாறு தொடங்கியது எப்போது என்பது தொடர்பான விரிவான பதிலை நானும் மூத்த வரலாற்று ஆய்வாளர் ராஜா முகமதுவும் எழுதினோம். அது சர்ச்சையானபோது, அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட காலச்சுவடு கண்ணன் முன்வந்தார்.