

‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்கிறது பழமொழி நானூறு. வள்ளுவரும் ‘கேள்விச் செல்வம்’ குறித்துப் பதிவுசெய்திருக்கிறார். ஒரு நூலை நாமே கற்றுத் தெரிந்துகொள்வதைவிடக் கற்றறிந்தோர் சொல்லக் கேட்பது இனிமை.
அந்த இனிமையை, ‘என் பல்வண்ணக் காட்சிக்கருவி’ நூலின் மூலம் கையளிக்கிறார் இறையன்பு. தான் வாசித்துக்கொண்டிருக்கும் நூல்களை ஏற்கெனவே வாசித்த நூல்களின் பின்னணியில் எழுத விரும்பி அவற்றுள் 50 கட்டுரைகளைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கிறார்.
இறையன்புவின் வாசிப்பு நேர்வரிசையில் அமையாமல் பரந்துபட்டதாக இருக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, தத்துவம், மருத்துவம், சூழலியல், விவசாயம், காலநிலை, திரைத்துறை எனப் பலவகையான நூல்களையும் வாசித்திருக்கிறார்.