பக்தவத்சலம் இந்தியைத் திணித்தாரா?
தமிழக முதல்வராக பக்தவத்சலம் இருந்தபோது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் இன்றைய அரசியல் களத்தில் ஒரு பேசுபொருளாகி இருக்கிறது. ‘இந்திக்கு அல்ல, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரானது’ என்றுதான் அந்தப் போராட்டத்தை பக்தவத்சலம் கணித்தார்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு இரண்டு சிந்தனை அடிப்படைகள். முதலாவது, 1965 ஜனவரி 26க்குப் பிறகும் இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடருமா என்பது. இது இந்திய அளவிலான பிரச்சினை. ‘எப்போதுமே ஆங்கிலம், ஒருபோதும் இந்தி வேண்டாம்’ என்பதே போராட்ட முழக்கம். இன்றுவரை ஆங்கிலமும் இந்திய அலுவல் மொழிதான். அதன் இடத்தை இந்தி ஆக்கிரமித்துக்கொள்ளவில்லை.
இரண்டாவது சிந்தனை, தமிழகப் பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்க வேண்டுமா என்பது. பக்தவத்சலத்தின் மொழித் திட்டம் தமிழின் இடத்தில் இந்தியை வைக்கவில்லை. மாணவர் விரும்பினால் இந்தி/ தெலுங்கு/ மலையாளத்தை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம். காங்கிரஸ் ஆட்சியில், 1956ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்று சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.
எந்தக் கட்டாயத்துக்கும் எதிரானவர்: போராட்டத்தை ‘இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்’ என்று அரசியல் செப்பத்தோடு சிலர் சொன்னாலும், பொதுப் பிரக்ஞையில்
அது தமிழைக் காப்பதற்கானது என்று பதிந்துள்ளது. மாணவர்களும் அப்படித்தான் நம்பியிருப்பார்கள்.
நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக 1965 ஜூலையிலிருந்தும், மாணவர் காங்கிரஸ் தலைவராக 1969-70லும் இருந்திருக்கிறேன். அப்போது காமராஜரை இரு முறை சந்தித்தது உண்டு. பக்தவத்சலம் எனக்கு 1973இலிருந்து பழக்கம்.
நான் படிக்கும்போது பள்ளிக்கூடங்களில் மூன்றாவது மொழியோ, இந்தியோ கட்டாயமல்ல. மாணவர்களுக்கு இந்தியின் மீது ஓர் ஒவ்வாமை இருப்பதைக் கண்டு, அதை அவர்கள் விருப்பத்துக்கே விட்டிருந்தார் பக்தவத்சலம்.
தேர்வு எழுதினால் மேல் வகுப்புக்குச் செல்லக் குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெற வேண்டியதும் அவசியமில்லை. மூன்றாவது மொழியாக இந்தியைத்தான் படிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. திணிப்பு என்ற பேச்சுக்கே அவர் மொழித் திட்டத்தில் இடமில்லை.
