

காடுகளில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகளால் காட்டுயிர்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளை நாம் அறிவோம். தற்போது கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ள இரண்டு திட்டங்கள் இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. நீங்கள் வால்பாறை செல்லும்போது சமமட்டக் கால்வாய்களை (contour canals) பார்த்திருக்கலாம்.
பொள்ளாச்சி பகுதியின் குடிநீர் ஆதாரமாகவும் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற உதவும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இக்கால்வாய்கள் அமைக்கப்பட்டன. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தலைமுறைப் பொதுப்பணித் துறைப் பொறியாளர்களின் மாபெரும் சாதனை இது.
ஆனால் அதேநேரம், அந்தக் கால்வாய்கள் காட்டை எவ்வாறு பிளந்துள்ளன என்பதைக் காணும்போது பெருவருத்தம் ஏற்படுகிறது. சில இடங்களிலாவது காட்டு விலங்குகள் கடந்து போய்வரப் பாலங்களை அமைத்திருக்க வேண்டும். உயர்ந்த மலைகளில் இருந்து பெரும் குழாய்கள் (penstock) மூலமாக வேகமாக வெளியேறும் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகளைப் பல இடங்களில் பார்த்திருக்கலாம். அந்தக் குழாய்கள் காடுகளை இரண்டாகப் பிளவுபடுத்திவிடுகின்றன.
அதனால் காடுகளில் ஏற்பட்டுள்ள உயிர்ச் சூழல் பாதிப்பு மிக மோசமானது. ஒரு முயல்கூட ஒரு பக்கத்திலிருந்து இருந்து இன்னொரு பக்கத்துக்குக் கடந்துசெல்ல இயலாது. இந்தப் பின்னணியில் பெரிய வாழ்விடங்களைக் கொண்ட யானை உள்ளிட்ட காட்டுயிர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அந்தக் குழாய்களை உயர் மட்டத்திலோ அல்லது மண்ணுக்கடியில் புதைத்தோ அமைத்திருந்தால், இந்தப் பாதிப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம்.
உயிர்ச் சூழல் பற்றிய அக்கறையும் பார்வையும் இல்லாமையால்தான் இவை நிகழ்ந்துள்ளன. காடுகளைக் கிழித்துச் செல்லும் நெடுஞ்சாலைகளும் அவ்வாறுதான். காட்டு விலங்குகளின் இயல்பான நடமாட்டத்தை இவை தடுத்துவிடுகின்றன. உதகை செல்லும் சாலையை விரிவுபடுத்தும்போது யானைகள் கடக்க இயலாவண்ணம் திட்டமிடப்பட்ட அமைப்பை நீதிமன்றம் தலையிட்டுத் தடுத்தது.