

இந்தியாவில் ஒவ்வொரு 20 மணி நேரத்திலும் 450க்கும் மேற்பட்ட விபத்துகள் நேரிடுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. விபத்து மரணங்கள் தொடர்பாகவே அதிகம் விவாதிக்கப்படும் சூழலில், காயங்களால் தீவிரமான பாதிப்படைபவர்கள் மீண்டுவருவதில் அக்கறை காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.
உலக அளவில் அதிக விபத்துகள் நேரிடும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக விபத்துகள் பதிவாகின்றன. இந்தியாவில் உள்ள மொத்தச் சாலைகளில் ஏறத்தாழ 2.3% மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள்.
என்றாலும், சாலை விபத்து மரணங்களில் 36%க்கும் அதிகமானவை இங்குதான் பதிவாகின்றன. 2023இல், தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த 1,50,177 விபத்துகளில் 63,112 பேர் உயிரிழந்தனர்.
2024இல் நிகழ்ந்த 1,50,958 விபத்துகளில் 64,772 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 2025இல் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,34,304 விபத்துகள் பதிவாகி, 57,482 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த மரணங்களைவிட 11% குறைவு என்பது ஆறுதல் அளிக்கிறது.