

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகப் புதிய நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை, முதல் முறையாக வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அத்துடன், இத்தகைய குற்றங்களைக் களைய நடைமுறை சார்ந்த தீர்வுகள் அவசியம்.
அதிகரிக்கும் குற்றங்கள்: தமிழ்நாட்டில் 2023இல் 4,581 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 2024இல் இந்த எண்ணிக்கை 6,975. அதாவது ஒன்றரை மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்குச் சராசரியாக 19 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே. கணக்கில் வராதவை நிறைய இருக்கும்.