

தமிழகச் சட்டப்பேரவையில், 27.08.2026 அன்று சமூக நீதித் துறை மானியக் கோரிக்கையின்போது நடைபெற்ற விவாதத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘சமூக நீதித் துறை எனப் பெயர் மாற்றிவிட்டோம் எனச் சொல்கிறார்கள். இந்த அரசு சாதி என்கிற வார்த்தையை ஒழிக்க நினைக்கிறது. அதனால்தான் பெயரை மாற்றினோம்; வேறு எதுவும் கிடையாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சொல்வதுபோல, ‘ஆதிதிராவிடர்’ என்பது ஒரு சாதியைக் குறிக்கும் பெயர் எனில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அது அரசு ஆவணங்களில் எப்படி இடம்பெற்றிருக்க முடியும்? இன்றுவரை அரசு ஆவணங்களில் அப்பெயர்தான் பயன்படுத்தப்படுகிறது.
அது மட்டுமல்ல, தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ள - சமூக நீதித் துறையின் கொள்கைக் குறிப்பிலும் - 130 இடங்களில் ‘ஆதிதிராவிடர்’ என்கிற பெயர்தான் இடம்பெற்றுள்ளது. ‘ஆதிதிராவிடர் என்பது, ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர்’ என்று சொல்லப்படுவதைத் தவெக அரசில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்கிறதா என்கிற மிக முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது.
உரிய விளக்கம் இல்லை
‘ஆதிதிராவிடர் என்பது சாதியைக் குறிப்பதால் தான் இவ்வரசு பெயர் மாற்றம் செய்துள்ளது’ எனில், தற்போதும் ‘ஆதிதிராவிடர் ஆணையரகம்’, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்’, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்’, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்டம்’, ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினக் கலை இலக்கிய மேம்பாட்டுச் செயல்திட்டம்’, ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி’ என அதே ‘சாதி’ப் பெயரில் இவை செயல்பட்டு வருவதன் நோக்கம் என்ன என்பதையும் தமிழக அரசு விளக்க வேண்டிய தேவை உள்ளது.
ஏனெனில், ஒரு நூற்றாண்டாக அரசு ஆவணங்களிலும்; 38 ஆண்டுகளாக ‘ஆதிதிராவிடர்’ என்கிற பெயரிலும் இயங்கிவந்த ஒரு துறையின் பெயர் எதற்காக மாற்றப்படுகிறது என்று எவ்வித விளக்கமும் இன்றி, ஓரிரவில் மாற்றப்பட்டது. அந்த அறிவிப்பு வெளிவந்து 6 வாரங்களுக்குப் பிறகே அதற்கான அரசாணை (06.07.2026) வெளியிடப்பட்டது.
இருப்பினும் மேற்குறிப்பிட்ட இந்தக் காரணத்துக்காகத்தான் அப்பெயர் மாற்றப்படுகிறது என்பதற்கான எந்த விளக்கமும் அந்த அரசாணையில் இடம்பெற்றிருக்கவில்லை. தற்போதுதான் சட்டப்பேரவையில் அதற்கான காரணத்தைப் பொதுப்பணித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.