கோப்புப் படம்
தொழில் நசிவுக்குக் காரணம் தொழிற்சங்கங்களா?
பணி நிரந்தர உத்தரவு வெளியாவதற்கு ஐந்தாறு நாள் முன்பு நிகழ்ந்தது, பொதுத் துறை வங்கி ஒன்றின் தற்காலிக ஊழியராக இருந்த அந்த இளைஞரின் மரணம். தீராத வயிற்று வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், அறுவைசிகிச்சைக்குத் தயாராக வேண்டிய நேரத்தில் எப்படியோ அங்கிருந்து வெளியேறி வீட்டைச் சென்றடைந்திருந்தார்.
நிரந்தர ஊழியராக ஆன பிறகு அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வது இலகுவாக இருக்கும். கடன் வாங்க வேண்டியிருக்காது என்று நினைத்து, அவர் செய்த அந்தப் பிழை அடுத்த சில மணி நேரத்தில் அவரது உயிரைக் காவு வாங்கிவிட்டது.
வடசென்னையில் ஊரே திரண்டு நின்றிருந்தது. குழந்தைகளோடு கிட்டத்தட்ட மூர்ச்சை ஆன நிலையில் பரிதவிப்பில் இருந்தார் கணவரைப் பறிகொடுத்த இளம் பெண். வங்கியின் மேலாண் இயக்குநரிடம் இந்தப் பரிதாபத்துக்குரிய செய்தியை எடுத்துரைத்து, நிரந்தர ஊழியராகவே கருதி அவருடைய மனைவிக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட உறுதிசெய்தவர்கள் வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தினர்.
வங்கியில் மட்டுமல்ல, சிறந்த தொழிற்சங்க அமைப்புகள் தழைக்கும் எத்தனையோ நிறுவனங்களில் இப்படியான விஷயங்களைச் சங்கங்கள் சாதித்திருக்கின்றன. தொழில்கள் நசிந்துபோகத் தொழிற்சங்கங்களே காரணம் என்பது போல், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கும் தருணத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இப்படியான விமர்சனங்கள் புதிதல்ல.
தொழிலாளர் உரிமை வரலாறு: எட்டு மணி நேர வேலை கேட்டு 1886இல் பல்லாயிரக்கணக்கில் அமைதியாக அணிவகுத்த அமெரிக்கத் தொழிலாளர்கள் மீது, ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவான அரசு ஈவிரக்கமின்றித் துப்பாக்கிச் சூடு நடத்தியதுதான் சிகாகோ மே நாள் புரட்சிகர வரலாறு.
