

பொதுவாக, அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை, அவர்களின் கற்றல் திறனை அடிப்படையாகக்கொண்டு, கற்கக் கூடியவர்கள் (Educable), பயிற்றுவிக்கக் கூடியவர்கள் (Trainable), பராமரிப்புக்கு உட்பட்டவர்கள் (Custodial) என மூன்று வகையினராக வகைப்படுத்தலாம்.
இதில் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அவர்களின் பெற்றோர் / பாதுகாவலரைச் சார்ந்ததாகவே உள்ளது. அவர்களின் பொருளாதாரம் என்பது அரசு அளிக்கும் உதவித்தொகையை மட்டுமே சார்ந்திருக்கிறது.
வயது கூடும்போது அவர்களுடைய பெற்றோரின் பொருளீட்டும் சக்தியும் குறையும். அப்போது அதை ஈடுகட்டும் வகையில் அவர்களது பாதிப்பின் தீவிரம், வயது இரண்டையும் கணக்கிட்டுப் பராமரிப்பு உதவித்தொகையை அரசு உயர்த்தித் தருவது அவர்களுக்கான தீர்வாக இருக்கும். இவ்விஷயத்தில் மேலும் பல நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
பொதுப் புரிதல்
பொதுவாக, ஆட்டிச நிலையாளர்கள் செம்மை விரும்பிகளாக (Perfectionist) இருப்பார்கள். ஆட்டிச நிலையாளரான சங்கர் என்னும் இளைஞர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதி வெற்றிபெற்று, ஒரு துறையில் பணிக்கான நியமன உத்தரவும் பெற்றார்.
அதற்கான மருத்துவச் சான்று பெறுவதற்காக ஒரு மருத்துவரைப் பார்க்கத் தனது தந்தையுடன் சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த நாள்காட்டி பல நாள்களாகக் கிழிக்காமல் விடப்பட்டிருந்ததைக் கவனித்தவர், தயங்காமல் தேதித் தாள்களைக் கிழித்துக் குப்பைக் கூடையைத் தேடி அதில் போட்டுவிட்டுப் பிறகே இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.
இதைக் கவனித்த மருத்துவர் தனது உதவியாளரிடம், “வேலை கிடைத்தாலும் இப்படியானவர்கள் எப்படிப் பணியைச் சரியாகச் செய்வார்கள் எனக் கேட்டாயே? இப்போது பார்.. நீ செய்யாமல் விட்ட வேலையைக்கூடச் சரியாகச் செய்கிறார் இவர்” என்றாராம்.
சங்கரின் தந்தைக்கு ஒரு விதத்தில் பெருமையாக இருந்தாலும், பணியிடத்தில் தன் மகன் சந்திக்கவிருக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்த புரிதலும் அவருக்கு ஏற்பட்டது. அந்த மருத்துவரைப் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும், ‘ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களை வெளியில் அனுப்ப வேண்டுமா?’ ‘இவர்களையெல்லாம் வைத்து மற்றவர்கள் சம்பாதிக்க வேண்டுமா?’ எனக் கருதுபவர்கள்தான் அதிகம்.