

சங்க இலக்கியங்கள் வெறும் ஏட்டுச் சுவடிகளல்ல; அவை தமிழரின் வாழ்வியல் துடிப்புகள் என்பதைச் சான்றளிக்கும் வகையில் அமைந்தது அமுதா பாண்டியனின் ‘ஆய்ச்சியர் குரவை’ நிகழ்வு. ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை மற்றும் குயில்மொழி குழுவினரோடு இணைந்து, அரசு கலைப் பண்பாட்டுத் துறை நிதி உதவியுடன் சென்னை மியூசியத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ‘ஆய்ச்சியர் குரவை’, இளங்கோவடிகள் வடித்த சிலப்பதிகாரக் காப்பியத்தின் மதுரைக் காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு செவ்வியல் நாடகத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தீய நிமித்தங்களும் தெய்வ வழிபாடும்: மதுரையில் மாதரியின் அடைக்கலத்தில் கண்ணகி தங்கியிருந்தபோது, ஆயர்பாடியில் அடுத்தடுத்து நிகழ்ந்த அபசகுணங்கள் மாதரியைக் கலங்கச் செய்கின்றன. பால் உறையாமை, வெண்ணெய் உருகாமை, பசுக்கள் கண்ணீர் விடுதல், கழுத்து மணிகள் அறுந்து நிலத்தில் விழுதல் என இயற்கைக்கு மாறான நிகழ்வுகளால் வரப்போகும் துயரை மாதரி உணர்கிறாள். உடனே தன் மகளை நோக்கி, இத்தீய நிமித்தங்கள் நீங்கவும், கன்றுகள் மகிழவும், தன்னிடம் அடைக்கலம் புகுந்த கண்ணகி கண்டு மகிழவும் ‘தெய்வத்தைப் பாடி குரவைக்கூத்து ஆடலாம்’ எனப் பணிக்கிறாள்.