புதிய மாற்றங்களின் தொடக்கம் | 49-வது சென்னை புத்தகக் காட்சி
சென்னை புத்தகக் காட்சியில் எனக்கு முன்னால் உரையாற்றிய ஒரு பேச்சாளர் இளைஞர்கள் படிப்பதேயில்லை என்று குறைபட்டுக்கொண்டு, புத்தகம் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நான், அதை மறுத்தேன். எவ்வளவு இளைஞர்கள், புதிதாக வாசிக்க தொடங்கியவர்கள் இந்த கண்காட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினேன். உண்மையில் புத்தக வாசிப்பை நோக்கி ஒரு புதிய தலைமுறை எழுந்து வந்திருக்கிறது என்பதற்கு இந்த புத்தகத் திருவிழாவில் கண்ட காட்சிகளே சாட்சி.
சமூக வலைதளங்களின் வழியாக அவர்கள் அறிந்த எழுத்தாளர்களைத் தேடி அலையலையாய் வந்து கொண்டிருந்தார்கள். எங்கிருந்து படிக்கத் தொடங்கவேண்டும் என்ற கேள்வியை நிறைய இளைஞர்கள் என்னிடம் எழுப்பினார்கள். கடந்த சில வருடங்களில் சென்னை புத்தகக் காட்சியில் வார வேலைநாட்களில் கூட்டம் இருக்காது. பொங்கலுக்கு மக்கள் ஊருக்கு போய்விட்டால் கண்காட்சியில் விற்பனை இருக்காது என்ற நிலைதான் இருந்தது. இந்த ஆண்டு அது முற்றாக மாறியிருப்பதை காண முடிந்தது. எல்லா நாட்களும் காலை 11 மணிக்கே புத்தகக் காட்சி தொடங்கியது. தொடங்கியதிலிருந்தே வாசகர்கள் பரவலாக வந்தவண்ணம் இருந்தனர். மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன.
