

பாலியல் வல்லுறவு வழக்குகளில் ‘இரு விரல் பரிசோதனை’க்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அக்டோபர் 31 அன்று தீர்ப்பளித்தது. ஜார்க்கண்டைச் சேர்ந்த 18 வயதுக்குக் குறைவான பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம், இரு விரல் பரிசோதனை ‘பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இரு விரல் பரிசோதனை என்பது ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல்பூர்வமான பரிசோதனையல்ல. மாறாக, உடலாலும் மனத்தாலும் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளான பெண்ணை மேலும் சித்ரவதைக்கு உள்ளாக்கும் நிகழ்வாகவே அது இருக்கிறது. தவிர, பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண் ஏற்கெனவே பாலியல் உறவுக்குப் பழக்கப்பட்டவரா என்பதைத் தெரிந்துகொள்ளவே இரு விரல் பரிசோதனை பயன்படுகிறது. அதை வைத்து அவருடைய நடத்தையையும் வல்லுறவுக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையும் ஆராயப்படுகின்றன. இதைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி அடங்கிய அமர்வு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ‘இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் வல்லுறவு என வகைப்படுத்தப்பட்டுள்ளதும் ஒரு பெண் பாலியல் உறவில் ஈடுபடுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை’ எனத் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ‘ஒரு பெண் பாலியல் உறவில் ஈடுபடுபவர் என்பதற்காகவே அவர் முன்வைக்கும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை நம்பாமல் இருப்பது என்பது ஆணாதிக்கச் சிந்தனை, பாலியல் பாகுபாட்டின் வெளிப்பாடு’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது பெண்களின் அந்தரங்க உரிமைக்கு மதிப்பளிப்பதாகும்.
பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்கான கையேட்டை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனமும் இந்தப் பரிசோதனை அறிவியல்பூர்வமற்றது எனக் குறிப்பிட்டுள்ளது. 2012 நிர்பயா சம்பவத்தையொட்டி அமைக்கப்பட்ட ஜே.எஸ்.வர்மா தலைமையிலான குழுவும் இரு விரல் பரிசோதனை குரூரமானது என்று தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, 2013இல் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் (2013)இன்படி இரு விரல் பரிசோதனை சட்டவிரோதமானது என மாற்றப்பட்டது. ‘பாலினரீதியான வன்முறையைப் பரிசோதிப்பதற்கான மருத்துவ நடைமுறை குரூரமாகவும் மனிதத்தன்மையற்ற வகையிலும் இருக்கக் கூடாது’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், கலிஃபுல்லா அமர்வு 2013இல் தெரிவித்ததோடு, பாலியல் வல்லுறவை உறுதிப்படுத்த முறையான மருத்துவப் பரிசோதனையைப் பரிந்துரைக்கும்படியும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. மத்திய சுகாதார அமைச்சகம் 2014இல் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ‘பாலியல் வல்லுறவை உறுதிசெய்ய இரு விரல் பரிசோதனை பயன்படுத்தப்படக் கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால், அதை முழுமையாகத் தடைசெய்யும் சட்டம் இல்லாததால், இரு விரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுவந்தன. ஜார்க்கண்ட் வல்லுறவுவழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
இவ்வளவுக்குப் பிறகும் இரு விரல் பரிசோதனைகள் தொடர்வதைக் கண்டிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சிலவற்றை வலியுறுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் பாடப்புத்தகங்களில் இருந்து இரு விரல் பரிசோதனை குறித்த பகுதியை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறை அனைத்துவகையிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. சட்டம் இயற்றுவோரும் அதைச் செயல்படுத்துவோரும் இதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.