

சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இயற்றிய மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019ஐ அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கான அபராதம் ரூ.2,000இலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் பைக் ரேஸிங் என்னும் பெயரில் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் வகையில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் செல்வோருக்கான அபராதத் தொகை முதல்முறை தவறிழைப்போருக்கு ரூ.500இலிருந்து ரூ.5,000ஆகவும், இரண்டாம் முறை அதே தவறைச் செய்தவருக்கான அபராதம் ரூ.500இலிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, அளவுக்கு அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டுவோருக்கான அபராதமும் ரூ.400இலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விபத்து மரணங்களுக்கு முதன்மைப் பங்களிக்கும் இவ்விரு விதிமீறல்களுக்கும் அதிகபட்ச அபராதத் தொகை உயர்வு விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது சாலைப் போக்குவரத்தின் நவீன பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தத் தவறை முதல் முறை செய்பவர்களுக்கான அபராதம் ரூ.1,000 ஆகத் தொடரும் நிலையில், அதே தவறை இரண்டாம் முறை செய்கிறவர்களுக்கான அபராதம் ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைக்கவசம்அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் மூவர் பயணிப்பது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, ‘நோ என்ட்ரி’ சாலையில் வாகனம்ஓட்டுவது, பேருந்துப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது, சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது, 18 வயதுக்கு உட்பட்டவர்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது உள்ளிட்ட 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அபராத உயர்வு பொதுமக்களில் சில பிரிவினரிடையே அதிருப்தி ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. ஏழைகளால் இவ்வளவு அபராதத் தொகையைச் செலுத்த முடியுமா என்று கேள்வி எழுப்புவோர், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுகிற எவரும் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்பதை மறந்துவிடுகின்றனர். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு (15,384 உயிரிழப்புகள்) இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுவதையும் அதற்கான தவிர்க்க முடியாத ஒரு வழிமுறைதான் அபராத உயர்வு என்பதையும் அனைவரும் உணர வேண்டும். அரசும் அபராத அதிகரிப்போடு நிறுத்திக்கொள்ளாமல், விதிகள் ஒழுங்காகப் பின்பற்றப்படுவதையும் விதிமீறுவோர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அபராத உயர்வு அப்பாவி வாகன ஓட்டிகளைப் பலிகடா ஆக்குவதற்கு எந்த வகையிலும் அனுமதித்துவிடக் கூடாது. சாலைகள், சிக்னல்கள் ஆகியவற்றின் முறையான பராமரிப்பு, விதிகளை மீறும் அரசுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பது எனப் பல விஷயங்களில் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. விபத்துகள் இல்லா சாலைகள் என்னும் இலக்கை அடைய மக்களும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.