

இந்தியா விடுதலை பெற்றவுடன் மொழிவழி மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன. இந்தி ஆதரவாளர்களால் நிரம்பியிருந்த ஆளும் காங்கிரஸ் கட்சி இதை ஏற்கவில்லை. ஆங்கிலேயர் காலத்திய மதராஸ், பம்பாய், டெல்லி, வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை நிர்வாக எளிமைக்காக மட்டுமின்றி, மாநிலம் கடந்தும் இந்தியைத் திணிக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டனர். ஆங்கிலேயர் காலத்திலேயே மொழிவழி ‘பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி’ வைத்து மக்களைத் திரட்டிய கட்சி, ஆட்சிக்கு வந்ததும் இதை ஏற்காமல் இந்தித் திணிப்பில் இறங்கியது. ஒடிய மொழி பேசும் மக்கள் தனி மாநிலக் கோரிக்கையை ஆங்கிலேயரிடம் எழுப்ப, முதல் மொழிவழி மாநிலமாக 1935இல் ஒடிசா பிறந்துவிட்டது. ஆங்கிலேயர் புரிந்துகொண்டதை இந்தியத் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
பிரிந்த மாநிலங்கள்: நேரு அமைத்த (எஸ்.கே.) தார் கமிஷனும், ஜே.வி.பி. கமிஷனும் மொழிவழி மாநிலப் பிரிவுகளை எதிர்த்து அறிக்கை தந்தன (ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோரின் முதல் எழுத்துகளே ஜே.வி.பி.). இதனிடையே இந்திய அரசமைப்பு 1950இல் அமலுக்கு வந்தது.
அதன் படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழியினரை ‘தட்சிணப் பிரதேசம்’ என ஒரே மாநிலத்தில் அடக்க நினைத்ததை நான்கு மொழியினரும் எதிர்த்தனர். ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணம் தென்னிந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் விருப்பத்தைவிடவும் மக்களின் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, 1953இல் ஆந்திரத்தைத் தனி மாநிலமாக அறிவித்தார். தெலுங்கு மொழிக்குத் தனி மாநிலம் கிடைத்ததைத் தொடர்ந்து, மொழிவழி மாநிலக் கோரிக்கைகள் வலுத்தன; காங்கிரஸ் அல்லாத கட்சிகளே இதை முன்னெடுத்தன. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1956 நவம்பர் 1 அன்று, இன்றைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உருவாயின. தொடர்ந்து, 1957இல் அசாமிலிருந்து நாகாலாந்தும் 1960இல் பம்பாயிலிருந்து மகராஷ்டிரம், குஜராத் மாநிலங்களும் 1966இல் ஹரியாணாவிலிருந்து பஞ்சாபும் மொழிவழி தனித்தனி மாநிலங்களாகப் பிரிந்தன.
1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, 1967 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. விடுதலைக்குப் போராடிய ஒரு கட்சி, இருபதே ஆண்டுகளில் ஒன்பது மாநிலங்களில் தோற்றதும் தமிழகத்தில் அதன்பின் ஆட்சிக்கு வரவே முடியாத நிலையும் இந்தித் திணிப்பால்தான் என்பது வரலாறு. இதன் பின்னரும் அந்தந்த மொழி-பண்பாட்டு உணர்வின் அடிப்படையில், மதராஸ்-சென்னை ஆனது, ட்ரிவேண்ட்ரம்-திருவனந்தபுரம் ஆனது, மைசூர்- மைசூரு ஆனது, பெங்களுர்-பெங்களூரு ஆனது, பம்பாய்-மும்பை ஆனது, கல்கத்தா-கொல்கத்தா ஆனது, பாண்டிச்சேரி-புதுச்சேரி ஆனது. இந்தத் திருத்தங்களும் தாய்மொழி உணர்வின் வெளிப்பாடுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தாய்மொழியின் முக்கியத்துவம்: தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப் முதலான மாநிலங்களே இந்தியாவின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. சரி, மூன்றாவது மொழியாகவோ, பயிற்று மொழியாகவோ இந்தியை ஏற்றுக்கொண்டால் என்ன? இந்தியை ஏற்ற வடஇந்திய மாநிலங்களின் இன்றைய நிலை என்ன? ‘இந்திப் பாடத்தில் பத்து லட்சம் மாணவர்கள் தோல்வி’ என்பது 2019இல் உத்தரப் பிரதேச மாணவர்களின் நிலை; பிஹாரிலும் இதே நிலைதான். இந்தியை ஏற்றுக்கொண்ட பல மாநிலங்களின் நிலையும் இதுவே. அந்த மாநில மாணவர்கள் பூர்விக-தாய்மொழிகளை விடுத்து, இந்தியில் படிக்க நேர்ந்ததே இதற்குக் காரணம். மராத்தி, குஜராத்தி, வங்கம், பஞ்சாபி, ராஜஸ்தானி எனப் பெரிய மாநில மொழிகளே புறந்தள்ளப்படும்போது மைதிலி, போஜ்புரி, பாலி, மகதி, இன்றைய குடியரசுத் தலைவரின் சந்தாலி போன்ற ‘சிறு’ மொழிகளின் நிலை என்னாகும்? அழிந்துவரும் உலக மொழிகளில் நூற்றுக்கு மேற்பட்டவை இந்தியாவில்தான் உள்ளன என ஐ.நா. அவை குறிப்பிடுகிறது. சொந்த மொழியிலும் படிக்க முடியாமல், வந்த மொழியையும் புரிந்துகொள்ள முடியாமல் கல்வி, வாழ்வை இழந்த பரிதாபம் இன்று நேர்ந்திருக்கிறது.
இருமொழிக் கொள்கை: மொழிவழிச் சிந்தனையில் முன்னின்ற அறிஞர் அண்ணாவின் ‘இருமொழிக் கொள்கை’ இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் ஏற்றது என்பது வரலாறு கற்றுத்தரும் பாடம். ‘நவீன சிங்கப்பூரின் தந்தை’ லீ குவான் யூ, இருமொழிக் கொள்கையே சிறந்தது என்பதை உணர்ந்து செயல்படுத்தினார். 70% மேல் சீன மொழி பேசுவோர் இருந்தபோதும் சீனம், மலாய், தமிழ் என அவரவர் தாய்மொழியையும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் படிக்க வைத்தார். நான்கு மொழிகளுக்கும் சம உரிமை தந்ததால் அனைத்துத் துறையிலும் சிங்கப்பூர் முன்னேறியது. வட இந்திய மாநிலங்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்க மும்மொழித் திட்டம் ஒரு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் பாடநூல் நிறுவனமே இந்தியில் புத்தகங்களை அச்சிட்டு வழங்குகிறது. ‘மூன்றாவது மொழி’ கற்கும் வடஇந்திய மாநிலங்களில் எங்காவது தமிழ் கற்பிக்கப்படுகிறதா?
இந்தப் பின்னணியில், மொழிவழி நாட்டு முன்னேற்றம் பற்றி ஒரு சிறு ஒப்பீடு: (1) நிதி ஆணைய அறிக்கைப்படி இந்தியாவிலேயே பிஹார் மாநிலத்தில்தான் வறுமை அதிகமாக உள்ளது (59.91%); (2) கல்வி அறிவு நிலையிலும் பிஹார் மாநிலமே கடைசி நிலையில் உள்ளது; (3) பெருவாரி மக்கள் பேசிய உருது மொழிக்கு மாற்றாக, 1881ஆம் ஆண்டே இந்தியை ஆட்சி மொழியாக்கிய முதல் மாநிலமும் பிஹார்தான். மாறாக, இன்றுவரை இந்தியை ஏற்காமல், இருமொழிக் கொள்கையில் உறுதியோடு இருக்கும் தமிழ்நாடுதான் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர் விகிதத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. வறுமையற்ற மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம்.
பண்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிலும் சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் தாய்மொழிவழிக் கல்வி இன்றியமையாதது. தாய்மொழியுடன் ஆங்கிலம் எனும் இருமொழித் திட்டமே முன்னேறிய உலக நாடுகளில் உள்ளது. தமிழ்நாடும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இதைப் புரிந்துகொள்ளாவிடில் இந்தித் திணிப்பு, வடஇந்தியாவை முன்னேற வைக்காது என்பதே கசப்பான உண்மை. இதுவே மொழிவழி மாநிலங்கள் உருவான நாளில் நமக்கு முன்னிருக்கும் சிந்தனையாகும். - நா.முத்துநிலவன் ஆசிரியர், எழுத்தாளர், தொடர்புக்கு: muthunilavanpdk@gmail.com
“இமய மலை போலுயர்ந்த ஒரு நாடும்,
தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்” – பாரதிதாசன்
நவம்பர் 1: மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு உருவான நாள்