Last Updated : 07 Sep, 2022 06:50 AM

 

Published : 07 Sep 2022 06:50 AM
Last Updated : 07 Sep 2022 06:50 AM

சுதந்திரச் சுடர்கள் | ஆளுமை: மக்களின் தலைவர்!

பால கங்காதர திலகர்

‘சுயராஜ்யம் என் பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்ற முழக்கமே இன்றுவரை பால கங்காதர திலகரை, நம் கண்முன் நிறுத்துகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத் தலைவர்களில் முக்கியமானவராகவும் மக்களின் ஆதரவுபெற்ற தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

மகாராஷ்டிரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த திலகர், ஆங்கிலேய அரசு இந்தியர்களைக் காரணமின்றி சிறையில் தள்ளியதால், அவர்களுக்காக வாதாடுவதற்குச் சட்டம் படித்தார். இந்திய வளங்கள் ஆங்கிலேயரால் எப்படிச் சுரண்டப்படுகின்றன என்பதை விளக்கிய தாதாபாய் நெளரோஜியின் நூல், திலகரை விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தது.

நண்பர்களுடன் இணைந்து மராத்தியில் ‘கேசரி’, ஆங்கிலத்தில் ‘மராட்டா’ ஆகிய பத்திரிகைகளை 1881இல் ஆரம்பித்தார் திலகர். இரண்டு பத்திரிகைகளிலும் அவர் எழுதிய தலையங்கங்களும் கட்டுரைகளும் மக்களை விடுதலைப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக ஈடுபடவைத்தன. இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக ‘கேசரி’ மாறியது.

காங்கிரஸில் 1889இல் திலகர் இணைந்தார். விவேகானந்தருடன் நெருங்கிப் பழகியபோது ஆன்மிகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் அவரது கவனம் திரும்பியது. ஆங்கிலேயர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குக் காரணம் திலகர் எழுதிய தலையங்கங்கள்தாம் என்று கருதிய ஆங்கிலேய அரசு, அவரை 12 மாதங்கள் சிறையில் அடைத்தது. இதன் மூலம் மக்களிடம் திலகரின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்தது.

1905இல் வங்கத்தை இரண்டாகப் பிரிப்பதை திலகர் கடுமையாக எதிர்த்தார். பிரிவினையை எதிர்த்த விபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் ஆகியோருடன் சேர்ந்து போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது. திலகர் தீவிரமாகச் செயல்பட்டவர்களின் தலைவரானார்.

பிரபுல்ல சாக்கி, குதிராம் போஸ் ஆகியோரை ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியதற்காக,1908-1914 வரை 6 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார் திலகர். அன்னி பெசன்ட்டுடன் இணைந்து அகில இந்திய ஹோம் ரூல் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

ஒற்றுமையையும் தேசிய உணர்வையும் உருவாக்க நினைத்து, விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அவர் கோலாகலமாக நடத்தினார். இந்தச் செயல் மாற்று மதத்தினரை அவரிடமிருந்து அந்நியப்படுத்தியது. பெண்கள், சாதி போன்ற சமூகக் கருத்துகளில் பழமைவாதத்தையே திலகர் பிரதிபலித்தார்.

ஜலியான்வாலாபாக் படுகொலைகளால் திலகரின் மனமும் உடலும் பாதிப்படைந்தன. என்ன நடந்தாலும் போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திலகர், 1920இல் நிரந்தர ஓய்வு நிலைக்குச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x