

மலையாளக் கவிஞரும் போராளியுமான சுகதகுமாரி, பெண்களின் உரிமைக்காகவும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்தவர். 1970களில் நாடறிந்த ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ போராட்டத்தில் சுகதகுமாரியின் பங்கு முக்கியமானது.
இயற்கையையும் பெண்ணையும் ஒப்பிட்டு இவர் எழுதும் கவிதைகளிலும் முன்னெடுக்கும் போராட்டங்களிலும் சுற்றுச்சூழல் மீதான அக்கறை நிறைந்திருக்கும். அட்டப்பாடியில் தரிசு நிலத்தைக் காடாக்கும் முயற்சிக்காக நண்பர்களுடன் இணைந்து ‘கிருஷ்ணவனம்’ அமைப்பைத் தொடங்கினார்.
திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவந்த அரசு மனநலக் காப்பகத்தின் நிலை சுகதகுமாரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ‘அபயா’ என்கிற அமைப்பை 1985இல் நிறுவினார். ‘அபயா’ தொடங்கப்பட்ட பிறகே மனநலம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது. கேரள அரசு மனநல மருத்துவமனைக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. பிறகு, ஆதரவற்ற குழந்தைகளுக்கும் வீடற்ற பெண்களுக்கும் ‘அபயா’ ஆதரவுக்கரம் நீட்டியது.
1996இல் கேரள மாநில மகளிர் ஆணையம் தொடங்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக சுகதகுமாரி பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களில் பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ‘குடும்ப’ திட்டம் முக்கியமானது. களத்தில் மட்டுமல்லாமல் கவிதைகள் வழியாகவும் போராடினார் சுகதகுமாரி. வரதட்சிணை மரணங்கள், குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான வன்முறை போன்றவற்றைத் தன் கவிதைகள்வழி எதிர்த்தார். ‘சுகதா டீச்சர்’ என அன்போடு அழைக்கப்பட்ட இவர் கரோனோ தொற்று காரணமாக 2020 டிசம்பரில் மறைந்தார். மக்களுக்காக எழுதப்படுகிற படைப்புகளின் ஆன்மா அழிவதில்லை என்பதை இவரது கவிதைகள் உணர்த்துகின்றன.
- ப்ரதிமா