Published : 30 Aug 2022 06:30 AM
Last Updated : 30 Aug 2022 06:30 AM

சுதந்திரச் சுடர்கள் | நாடாளுமன்ற விவாதங்கள்: காணாமல் போன நெறிமுறைகள்

கே.கே. கத்யால்

தொடக்க காலத்தில் இருந்ததைப் போல நாடாளுமன்ற விவாதங்கள் சூடும் சுவையுமாக நல்ல தரத்தில் இல்லைதான். அதற்காக அன்றைய நாடாளு மன்றத்தையும் இன்றைய நாடாளுமன்றத்தையும் ஒப்பிட்டு மதிப்பிடுவது, பல காரணங்களுக்காக தவறான முடிவுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். முதலாவதாக, ‘அந்தக் காலத்திலே…’ என்று பேசத் தொடங்கினால் அப்போது எல்லாமே நன்றாக இருந்ததைப் போலவும், இப்போது எல்லாமே கெட்டுவிட்டதைப் போலவும் முடிவுக்கு வரத் தோன்றும். அது சரியல்ல.

இரண்டாவது, நாடு சுதந்திரம் அடைந்த முதல் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பலர் விடுதலைப் போராட்டத்திலும் கலந்துகொண்டவர்கள்.

அந்த வகையில் அவர்களைச் சுற்றி, தியாக ஒளிவட்டம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனாலேயே அவர்களுடைய செயல்கள் அனைத்தும் ஆக்கபூர்வமாகவும் நியாயமாகவும் அனை வராலும் பார்க்கப்பட்டன. மூன்றாவதாக, தொடக்க காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் பலர் வெளிநாடுகளின் பிரபலமான பல்கலைக் கழகங்களிலும் இந்தியாவின் உயர் கல்விநிலையங்களிலும் படித்தவர்கள் மேல்தட்டைச் சேர்ந்தவர்கள். விவாதங்களைத் தொடங்குவதிலும் தொடர்வதிலும் தனித்திறமை பெற்றிருந்தனர்.

அவர்களில் பலருடைய நுனி நாக்கு ஆங்கிலமும் தோரணையான உச்சரிப்பும் கேட்போரை மையல் கொள்ள வைத்தன. அவர்களில் பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழிலதிபர்களாகவும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தி யவர்கள். எனவே, அவர்களுடைய மிடுக்கான தோற்றமும் எழிலான பேச்சும் அனைவரையும் கவர்ந்தன. அறிவார்ந்த அவர்களால், மற்றவர்களுடைய பேச்சில் சமத்காரமாக குறுக்கிடவும், அனைவரும் பாராட்டும் வகையில் நகைச்சுவையாகப் பேசவும் முடிந்தது.

இன்றைய உறுப்பினர்கள்

இப்போது நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் வெவ்வேறு பிரதேசங்களையும் இனங்களையும் மொழிகளையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாட்டில் நிலவும் பன்மைத்துவத்துக்கு இவர்களே உண்மையான அடையாளங்கள், பிரதிநிதிகள்.

இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பகுதி அல்லது மக்களுடைய தேவைகளை, விருப்பங்களை, லட்சியங்களை நேரடியாகப் பேச வந்திருக்கின்றனர். கடந்த காலத்தில் இருந்த நவநாகரிக உறுப்பினர்களைப் போல இவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டாலும், அவரவர் மொழிகளில் மக்களுக்கானவற்றை நேரடியாகப் பேசப் பழகியவர்கள். இன்றைய இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகள் இவர்கள்தான். நாடாளுமன்றம் என்பது இந்தியாவை அப்படியே பிரதி எடுத்ததைப் போன்ற நுண்ணிய பிரதிபிம்பம்.

அரசியல் கட்சிகளிடையே கொள்கை, நோக்கம் அடிப்படையில் ஏகப்பட்ட பிரிவுகள் ஏற்படுமென்றால், நாடாளுமன்றம் அதற்கு விதிவிலக்காக பழையபடியே தொடர முடியாது. தொடக்க காலத்தில் பல பிரச்சினைகளுக்குக் கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டதால் நீண்ட விவாதமோ, நிறைய விவாதங்களோகூட தேவையில்லாமல் போயின. இப்போது நிலைமை அப்படியல்ல.

ஒவ்வொரு பிரச்சினையையும் பொருளாதார – சமூகக் கண்ணோட்டங்களுடன் பார்ப்பதுடன் நிலம், மதம், மொழி, இனம் ஆகிய பின்னணிகளோடும் பொருத்திப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. மக்களிடையே தங்களுடைய உரிமைகள், விருப்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துவருவதால் நாடாளுமன்ற உறுப்பினர் களும் அவற்றையெல்லாம் வலியுறுத்தியாக வேண்டியிருக்கிறது.

சகிப்புத்தன்மை போதவில்லை

முன்பிருந்த நாகரிகமான அணுகுமுறை இல்லையே என்று கவலைப்படுவதைவிட, ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்பதற்குக்கூட சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டதே என்றுதான் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. பழமையான அந்தப் பொற்காலத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பிரமுகரைக் கண்டித்து பிரதமர் நேருவால் பேச முடிந்தது.

பதிலுக்கு அவரும் பேசும் சுதந்திரத்தையும் உரிமையையும் பெற்றிருந்தார். “(மகாவீர்) தியாகி, கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் என்ற வகையில் கூறுகிறேன், கூட்டத்திலிருந்து வெளியேறுங்கள்” என்பார் நேரு. “உங்களைத் தலைவராக்கிய தொண்டன் என்ற முறையில் கூறுகிறேன், என்னைப் பேச அனுமதிக்க மறுக்கும் நீங்கள் வெளியேறுங்கள்” என்பார் தியாகி.

இருந்தும் இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் இம்மியளவும் குறையாது. நேருவும் தியாகியும் மோதிக் கொண்ட அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரான எஸ்.என். மிஸ்ரா அதைப் பற்றி மேலும் கூறுகிறார்: “இருவருக்குமான வாக்குவாதத்தில் நாடாளுமன்றத்தின் குவிமாடமே வெடித்து சுக்குநூறாகிவிடுமோ என்று நாங்கள் எல்லாம் பயந்தோம். அந்த விவாதத்துக்குப் பிறகு இருவரும் சிரித்துக்கொண்டே ஒருவரையொருவர் அணைத்தபடி பேசிக்கொண்டிருந்தனர். பிறகு மற்றவர்களைப் பார்த்து நேரு கூறினார், ‘நாங்களிருவரும் இன்று நேற்றல்ல, ஐம்பதாண்டுக் கால நண்பர்கள்’ என்று. சில வாரங்களுக்குள் தியாகியை மத்திய அமைச்சரவையிலும் நேரு சேர்த்துக்கொண்டார்” என்கிறார் மிஸ்ரா.

கல்வித் தகுதி அவசியமில்லையா?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்போது இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், ஆரம்ப கால உறுப்பினர்களைவிட கல்வியிலும் அறிவிலும் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். தற்போதைய நிலைமை பெருமளவு மாறியிருக்கிறது. அவை உறுப்பினர்கள் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்தால் உண்மைகள் தெரிகின்றன.

பள்ளியிறுதி வகுப்பைக்கூட முடிக்காமல் மக்களவை உறுப்பினர்களானவர்கள் எண்ணிக்கை (1991-96) இப்போது 3.57% முதலாவது மக்களவையில் இவர்களுடைய எண்ணிக்கை 23.2%, முதல் மக்களவையில், பள்ளியிறுதி வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை 18.4%, இப்போது அது அதில் பாதி மட்டுமே. பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் உள்ளிட்டவை பெற்றவர்கள் 1991-96-ல் 76.39%. முதலாவது மக்களவையில் 58.40% மட்டுமே.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட குறைந்தபட்சக் கல்வித் தகுதி வரையறுக்கப்படவில்லை. இது குறித்து அரசமைப்பு அவையிலும் (பூர்வாங்க நாடாளுமன்றம்) விவாதிக்கப்பட்டது. அப்படியொரு தகுதியை நிர்ணயிக்கத் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆகக் குறைந்தபட்ச கல்வித்தகுதி அவசியம் என்று அவைக்குத் தலைமை வகித்த பாபு ராஜேந்திர பிரசாத் விரும்பினார், ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் வேண்டாமென்று சொன்னதும் அதை ஏற்றார். “நாட்டின் நிர்வாகப் பதவிகளுக்கும் நீதி பரிபாலனத்துக்கும் குறைந்தபட்சம் இன்னின்ன படிப்புகள் படித்திருக்க வேண்டும் என்று நாம்தான் நிர்ணயிக்கிறோம், சட்டமியற்றும் நமக்கு அப்படியொரு குறைந்தபட்சத் தகுதி தேவையில்லை - தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்பது முரண்பாடாக இருக்கிறதே” என்றுகூட அவர் அங்கலாய்த்தார்.

நேருவின் அக்கறை

நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்படவும் ஆரோக்கியமான நல்ல முன்மாதிரிகள் ஏற்படவும் பிரதமர் ஜவாஹர்லால் நேரு எடுத்துக்கொண்ட பெரு முயற்சிகளையும் இடைவிடாமல் காட்டிய அக்கறையையும் குறிப்பிடாமல் போனால், அன்றைய நாடாளுமன்றத்தையும் இன்றைய நாடாளுமன்றத்தையும் ஒப்பிடும் பணி முழுமை பெறாது.

அவையில் சுதந்திரமாகவும் தடங்கல்கள் இன்றியும் விவாதங்கள் நடைபெற நேரு எடுத்துக்கொண்ட அக்கறை ஈடு இணையற்றது. அவை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் ஜனநாயகம் அவரிடம் இருந்தது. ‘தேசப் பாதுகாப்பு கருதி, இதையெல்லாம் சொல்ல முடியாது’ என்று எந்த விதிகளுக்குப் பின்னாலும் அவர் ஓடி ஒளிந்தவரல்ல. இரண்டு அவைகளிலும் முக்கிய விவாதங்கள் நடைபெறும்போது அவர் முழு நேரமும் அமர்ந்து கேட்பார். இப்போதோ, அந்தோ பரிதாபம்!

1997 ஆகஸ்ட் 15 ‘தி இந்து’ சுதந்திரப் பொன் விழா சிறப்பு மலரில் வெளியான கட்டுரை

கே.கே. கத்யால், ‘தி இந்து’ டெல்லி செய்திப் பிரிவு முன்னாள் தலைவர்

நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x