புரத உணவை மறுக்கும் தனியார் பள்ளிகள்

புரத உணவை மறுக்கும் தனியார் பள்ளிகள்
Updated on
2 min read

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களுக்கான மதிய உணவாக முட்டை, இறைச்சி ஆகியவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மருத்துவ அறிவியல் பார்வையில் இது ஆபத்தானது என்பது ஒருபுறம் இருப்பினும், இறைச்சி உணவின் மீதான சமூக அரசியலும் இந்தப் பிரச்சினையில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

புரதம் ஏன் அவசியம்?

தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு (NFHS) 2019-21 இன்படி இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 39.7% பேர் (தமிழ்நாடு 22%) வயதுக்கு ஏற்ற எடையுடன் இல்லை.

அதே போல ஊட்டச்சத்துக் குறைவால், இந்தியாவில் 39.7% குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டுடன் உள்ளனர் (தமிழ்நாடு 25%). இவ்வாறான ஊட்டச்சத்துக் குறைபாட்டில் புரதச்சத்துக் குறைபாடு முதன்மையானதாக உள்ளது.

புரதம் என்பது உடலின் ஒட்டுமொத்த அடிப்படைக் கட்டுமானத்துக்குப் பங்களிப்பதாகும். குழந்தைகளின் உடல், மூளை வளர்ச்சி என்பது அவர்களின் எதிர்காலத்தோடு நேரடியாகத் தொடர்புடையது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வளரும் ஒரு குழந்தைக்குத் தொற்றுநோய்கள் அதிகம் தாக்கும் சாத்தியம் உள்ளதோடு, அவர்கள் சரியான உடல் - மனநல வளர்ச்சி இல்லாமல் போவதால் கல்வியில் பின்தங்கி விடுவர்.

தோராயமாக மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றியபோது, பிற விலங்குகளைவிடப் பாரிய மூளைத் திறன் மனிதனுக்குக் கிடைத்ததற்குக் காரணம், இறைச்சிதான் என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். பிரிட்டனில் 1850 முதல் 1950 வரை 100 ஆண்டுகளில் மக்கள் இறைச்சி உணவு எடுத்துக்கொண்ட அளவு, அதனை ஒட்டிய நல்வாழ்வு குறித்து நடத்தப்பட்ட மாபெரும் ஆய்வு முடிவுகள் 2017இல் வெளியாகின.

அதில், இறைச்சி உணவு எடுத்துக்கொண்ட மக்கள், தாவர உணவு மட்டும் எடுத்துக்கொண்டோரைவிட அதிக உயரம் வளர்ந்துள்ளனர் என்பதோடு, அவர்கள் நோய்வாய்ப்படுவதும் குறைவாக இருந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல இறைச்சி உணவுப் பழக்கம் கொண்டோரை அக்கால ‘பிளேக் நோய்’ குறைவாகத் தாக்கியுள்ளது என்பதும் அந்த ஆய்வில் வெளிப்பட்டிருந்தது.

கடல் உணவு, இறைச்சி, ஈரல், முட்டை ஆகியவை ஊட்டச்சத்துக்களின் சுரங்கம். தாவர உணவு மட்டும் எடுத்துக்கொண்டோருக்கு உடலுக்குத் தேவையான B12 விட்டமினில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கின்றது. அதே போல மூளை வளர்ச்சிக்குத் தேவையான B2, B3, அயோடின், செலினியம் போன்றவையும் சரிவரக் கிடைப்பதில்லை.

பள்ளி எனும் சமூக அனுபவம்

இறைச்சியைத் தவிர்த்து தாவர உணவுகளிலேயே எல்லா சத்துகளையும் பெற்றுவிட இயலும் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், அவ்வாறான உணவுத் தேர்வு அனைவராலும் விலை கொடுத்து வாங்க இயலாததாகும். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு முட்டையில் கிடைக்கும் புரதத்தை பிராகலியில் (Broccoli) பெற 100 ரூபாய் செலவழிக்க வேண்டும்.

வளர்ச்சிக் குறியீடுகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ள ஸ்காண்டிநேவிய நாடுகள், அந்நாட்டு மக்களுக்கான உணவுப் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளன. அவற்றை நோக்கினால், நாம் வாரம் முன்று முறை கடல் உணவையும், வாரம் 500 கிராமுக்கு மிகாத இறைச்சியையும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதை அறிய முடிகிறது.

அறிவியல் உண்மைகள் இப்படியிருக்க, சமூக அரசியல் நோக்கில் இங்கு தனியார் பள்ளிகள் இறைச்சி, முட்டை, மீன் கொண்டுவரக் கூடாது என்று தடை விதித்துள்ளது நடைமுறைக்கு எதிரானது. தனியார் பள்ளிகளை நடத்துவோருக்குப் பல்வேறு நம்பிக்கைகள், கலாச்சாரம், உணவுப் பழக்கம் ஆகியவை இருக்கலாம்.

ஆனால், அவர்கள் அதனை அவர்களின் வீடுகளைத் தாண்டி பள்ளிக்குக் கொண்டுவருவது ஏற்புடையதல்ல. அரசமைப்புக்கு உட்பட்டே ஒரு நிறுவனம் செயல்பட வேண்டும். பள்ளி என்பது குழந்தைகளின் முதல் சமூக அனுபவமாகும். அந்த முதல் சமூக அனுபவத்திலேயே தாவர உணவு உண்போர் உயர்வானவர்கள் என்றும் இறைச்சி உண்பது உயர்வானதல்ல என்றும் கற்பிப்பது சமூக அநீதி ஆகும்.

வளரும் நாட்டின் குழந்தைகள்

இந்தியா ஒரு வளரும் நாடு. வறுமையிலிருந்தும், பசியிலிருந்தும், ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்தும் நாம் வேகமாக மீண்டுவருகிறோம். தமிழ்நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் கல்வியறிவைப் பெருக்கவும், பசியை ஒழிக்கவும் சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி, அதில் முட்டைகளை வழங்கி ஒரு தலைமுறையையே ஆரோக்கியமான சமூகமாக ஆக்கின.

ஆனால், இன்று உணவுரீதியிலான பாகுபாட்டைப் பல தனியார் பள்ளிகள் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் திணிப்பது வேதனையான ஒன்று. பல்வேறு கலாச்சாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றைக் கொண்டது நமது இந்தியா.

இவ்வாறான வேற்றுமைகளை மதித்து, ஒற்றுமையைப் பேணி, சகோதரத்துவத்தை வளரச் செய்வதைத்தான் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டுமே ஒழிய, கலாச்சாரத் திணிப்பைச் செய்யக் கூடாது. சத்தான உணவு அனைவருக்கும் சென்றுசேர்வதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

- சட்வா, மருத்துவர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in