Published : 17 Aug 2022 08:01 AM
Last Updated : 17 Aug 2022 08:01 AM

சுதந்திரச் சுடர்கள் | திரைத்துறை: இந்திய சினிமாவுக்குப் பிரபலம் தேடித்தந்தவர்

சுதந்திர இந்தியாவில் சினிமாவை அனைவருக்கும் கொண்டுசேர்த்தவர்களில் முதன்மையானவர் ராஜ் கபூர். நடிகர். தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிய ராஜ் கபூர், ’இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கலைஞர்’ (The Greatest Showman of India) என்று குறிப்பிடப்படும் அளவுக்குத் தன் திரை ஆளுமையால் ஒட்டுமொத்த இந்தியாவையும் வசீகரித்தார்.

1935 இல் வெளியான ‘இன்குலாப்’ இந்திப் படத்தில் சிறுவனாக நடித்ததன் மூலம் பாலிவுட்டில் ராஜ் கபூர் பிரவேசித்தார். நாடு விடுதலை பெற்ற ஆண்டில் ‘நீல் கமல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

24 வயதில் ஆர்.கே. ஃபிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவிட்ட ராஜ் கபூர், அந்த நிறுவனத்துக்காகத் தயாரித்த ‘ஆக்’ (1948) திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் பரிணமித்தார்.

இந்திய சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குநரானவர் என்னும் புகழைப் பெற்றார். தொடர்ந்து அவர் நடித்துவந்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

ராஜ் கபூர், சார்லி சாப்ளினை ஆதர்சமாகக் கொண்டிருந்தார். சில படங்களில் சாப்ளினின் புகழ்பெற்ற ‘தி ட்ராம்ப்’ கதாபாத்திரத்தின் சாயலைக் கொண்ட கதாபாத்திரங் களில் நடித்தார். ‘இந்தியாவின் சார்லி சாப்ளின்’ என்றும் புகழப்பட்டார். ‘பூட் பாலிஷ்’, ‘அப் தில்லி தூர் நஹி’ உள்ளிட்ட சமூக முக்கியத்துவம் வாய்ந்த சிறு முதலீட்டுப் படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.

சில தொடர் தோல்விகளுக்குப் பிறகு ராஜ் கபூர் தயாரித்து, இயக்கி, நடித்த ‘மேரா நாம் ஜோக்கர்’ வெளியான காலத்தில் படுதோல்வி அடைந்தாலும், பிற்காலத்தில் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றது. ராஜ் கபூர் படங்களுக்குத் தெற்காசிய நாடுகளிலும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளிலும், சீனா, சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிலும் பரவலான வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இந்திய சினிமாக்களுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் ராஜ் கபூர்.

- நந்தன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x