

சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கத்துக்கு அனைத்துத் துறைகளிலும் தமிழ் வளர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக 1946ஆம் ஆண்டில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலத்திலுள்ள Encyclopaedia போன்று தமிழிலும் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதையே இக்கழகம் முதன்மைப் பணியாக மேற்கொண்டது. இந்திய விடுதலை நாளில் (15.08.1947) இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்திற்கு 14 லட்சம் ரூபாய்செலவாகுமென மதிப்பிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எம்.அழகப்பர், எம்.ஏ.முத்தையா, கருமுத்து தியாகராயர் போன்றோர் நிதியுதவி அளிக்க முன்வந்தனர். தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பதி தேவஸ்தானம் போன்ற அமைப்புகளும் இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்தன. மத்திய நிதி அமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம், ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வீதம் நான்காண்டுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்தார்.
கலைக்களஞ்சியப் பணிகளுக்காகச் செயற்குழு, பதிப்பாளர் குழு, அலுவலர் குழு, பொருட்பட்டி அமைப்புக் குழு, ஆய்வுக் குழு, கலைச்சொல் குழு எனப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏ.எல்., மு.வரதராசனார், ரா.பி.சேது, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், டி.கே.சிதம்பரநாதர், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி எனப் பலர் இக்குழுக்களில் இடம்பெற்றனர். கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கு முன்பே அப்பணி குறித்த தெளிவான திட்டமிடல் இக்குழுவிடம் இருந்தது. பத்துத் தொகுதிகளாகக் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட வேண்டும்; ஒவ்வொரு தொகுதியும் ஏறக்குறைய 750 பக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்; பொது மக்களுக்கு நன்கு விளங்க வேண்டும் என்பதால் நான்கில் ஒரு பகுதி படங்கள் அமைய வேண்டும்; தேவையான இடங்களில் வண்ணப் படங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டனர். அச்சிடப்படும் தாளின் தரம், எழுத்துருக்கள், மொழிநடை, வாக்கிய அமைப்பு, கலைக்களஞ்சியத்தில் இடம்பெற வேண்டிய சொற்கள் என ஒவ்வொன்றையும் கூடுதல் கவனத்துடன் செய்தனர்.
கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி 1954ஆம் ஆண்டு 742 பக்கங்களுடன் வெளிவந்தது. அடுத்த ஆண்டே இதன் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. இதனிடையே, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராக இருந்த கல்கி உடல்நலக் குறைவின் காரணமாக (டிசம்பர் 5, 1954) இறந்துவிட்டார். அதனால் இரண்டாம் தொகுதி அவரது நினைவாக வெளியிடப்படுவதாக தி.சு.அவினாசிலிங்கம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 1956இல் அதற்கடுத்த இரு தொகுதிகளும் வெளியாயின. இப்படியாக, ஒன்பது தொகுதிகள் 1963ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்பட்டன. இதில் ஐந்தாம் தொகுதியை (1958) அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்துள்ளார்.
விலைவாசி ஏற்றம், காகிதப் பஞ்சம், ஊழியர்களின் உடல்நலக் குறைவு எனப் பல துயரங்களுக்கிடையேதான் இந்த அரும்பணி தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. கவனமாகத் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள், தேவையான படங்கள், உலகப் பண்பாட்டுச் சின்னங்கள், உலகத்திலுள்ள முக்கியமான இடங்கள், நில வரைபடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், உலகத்தின் வெவ்வேறு தாவர வகைகள், விலங்குகள், தாவர உறுப்புகள் என நுணுக்கமான தரவுகளும் படங்களும் இக்கலைக்களஞ்சியத்தின் சிறப்புகளாகும். இதில் எழுதியிருப்பவர்கள் அனைவருமே அந்தந்தத் துறைகளில் அனுபவமும் ஆழமான அறிவும் மிக்கவர்கள். பெ.தூரனும் அவரது குழுவும் பிரக்ஞையுடன் அறிஞர்களைத் தேர்வு செய்துள்ளனர். உதாரணமாக, புதுமைப்பித்தன் பற்றி மீ.ப.சோமசுந்தரம்; புத்தர் பற்றி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்; பாரதி பற்றி பி..ஆச்சார்யா; காந்தி பற்றி வெ.ராமலிங்கம் எனக் கட்டுரை எழுதுவதற்கான அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்ற தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
கலைக்களஞ்சியத்தின் பத்தாவது தொகுதி இணைப்புத் தொகுதியாக 1968இல் வெளிவந்துள்ளது. முதல் ஒன்பது தொகுதிகளில் விடுபட்ட சொற்கள், பத்து தொகுதிகளுக்குமான பொருட்குறிப்பு அகராதி ஆகியன இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பத்தாவது தொகுதி வெளிவரும்போது முதல் ஐந்து தொகுதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. சுமார் 7,500 பக்கங்களைக்கொண்ட கலைக்களஞ்சியத்தின் மொத்த விலை அன்றைய நாளில் 250 ரூபாய்; தனித் தொகுதி ஒவ்வொன்றும் 25 ரூபாய். இக்கலைக்களஞ்சிய உருவாக்கத்தின் நோக்கம் மக்களுக்குப் பயன்பட வேண்டும்; அனைவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு தொகுதியும் 3,000 பிரதிகள் வரை அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் தொகுதியின் முன்னுரையில், ‘இரண்டாம் பதிப்பில் கூடுதல் சொற்களைச் சேர்க்க வேண்டும். இளைஞர்கள் இப்பணிக்கு முன்வர வேண்டும்’ என்று தி.சு.அவினாசிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அவரது விருப்பம் இந்தக் கணம்வரை நிறைவேறவில்லை.
தமிழின் ஒப்பற்ற ஆக்கமான இக்கலைக்களஞ்சியம் ஏன் இதுவரை மறுபதிப்புகூடச் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்பதாம் தொகுதியில், இப்பணிக்குத் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து உழைத்த அனைவருக்கும் பெ.தூரன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்திற்கு உருக்கமான செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ‘கலைக்களஞ்சியம் ஒன்பது தொகுதிகளோடு முடிந்துவிடுவதில்லை. புதிய பொருட்கள் சேர்ந்துகொண்டே இருக்கும். தொகுதிகள் பலவாகப் பெருகும். பொருள்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைப் பிற்கால ஆராய்ச்சியால் கண்ட உண்மைகளைக் கொண்டு மாற்றியமைக்கவும் நேரும். இவ்வாறு கலைக்களஞ்சியம் வளர்ந்துகொண்டே செல்லும். அதற்கு எல்லோரும் நம்மால் இயன்ற உதவி புரியுமாறு வேண்டுகின்றேன்’ என்று எழுதியிருக்கிறார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கிய தி.சு.அவினாசிலிங்கமும் கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியருமான பெ.தூரனும் எதிர்காலத்தின்மீது நம்பிக்கை வைத்துக் கூறியவை, இன்றும் வெறும் நம்பிக்கையாக மட்டும் தொடர்வது தமிழ்ச் சமூகத்தின் மாறாத அவலங்களில் ஒன்று என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.-
-சுப்பிரமணி இரமேஷ், கலை இலக்கிய விமர்சகர் தொடர்புக்கு: ramesh5480@gmail.com