

நம் அண்டை நாடான இலங்கையின் இன்றைய நிலை பெருவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் என்ன? நேர்மையான நிர்வாகமும், மேலாண்மையும் இல்லாத நாடு எவ்வளவு வளங்களைப் பெற்றிருந்தாலும் அவ்ளவும் பயனற்றுப் போகும். இந்தக் கருத்தைக் கீழ்க்கண்ட குறள் எடுத்துரைக்கிறது:
ஆங்கமை வெய்திக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு
இந்தக் குறள் கூறுவதுபோல இலங்கை ஆட்சியாளர்களிடம் மேலாண்மைப் பண்பு இல்லாததே, அந்நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம்.
அதே நேரம், இந்தக் குறள் கூறுவதுபோல ஒரு நாட்டுக்கு நல்லரசன் – நல்ல ஆட்சியாளன் அமைந்தால் எவ்வாறு இருக்கும் என்பதற்கு உதாரணமாக, உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜோஸே முஜிகாவைக் கூறலாம். நேர்மையான நிர்வாகத்தை நடத்தி, தன்னுடைய பதவிக் காலத்தை அவர் நிறைவு செய்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் அவருக்குப் பிரியா விடை அளித்தனர்.
உலகத்திலேயே ஏழ்மையான அதிபர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார். ஏனெனில், அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையைப் புறக்கணித்துவிட்டு, எளிய வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். தன்னுடைய மாதச் சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கு வழங்கி, நேர்மையான நிர்வாகத்தை அளித்த அதிபர் என்கிற பெருமைக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார். ஒரு பேட்டியில் “மிகவும் ஏழை அதிபர் என்று என்னை அழைக்கின்றார்கள்.
ஆனால், என்னுடைய பார்வையின்படி நான் ஏழை அல்ல; வாழ்க்கையை செல்வச் செழிப்பாக, மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுத் தன்னிடம் உள்ளதை வைத்து வாழ முடியாமல், இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும் என்று அலைகிறவர்கள்தான் ஏழைகள்” எனக் கூறியுள்ளார்.
உருகுவே நாட்டின் சட்டத்தின்படி இரண்டாவது முறையாக யாரும் அதிபராக முடியாது. அப்படி இருக்கும்போதுகூட அதிபராக இருந்தபோது நேர்மையான நிர்வாகத்தை அவர் நடத்தியிருக்கிறார். அவருடைய மேலாண்மைப் பண்பு வேறு யாருக்கும் வராது என்று சொன்னால் மிகையில்லை.
எல்லாம் இருந்தாலும்… ஒரு நிர்வாகத்தில் ஆயிரம்பணியாளர்கள் இருந்தாலும், தேவையான அனைத்து வசதிகளும், செயல்பாடுகளும் இருந்தாலும் பணிபுரிபவர் களுக்குத் தேவையானவை எல்லாம் கிடைத்தாலும், இவற்றையெல்லாம் வழிநடத்த நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியாளர் இல்லையென்றால், மேற்சொன்ன யாவற்றாலும் பயனில்லை.
ஒரு அரசன் அல்லது ஆட்சியாளர் சரியாக அமையாவிட்டால், மக்கள் நம்பிக்கை இழந்து, நிம்மதியின்றிக் கவலைப்படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்பதையும் மேற்கண்ட குறள் சுட்டிக்காட்டுகிறது.
மேற்கண்ட குறளில் குறிப்பிடப்படும் ‘வேந்து அமைவு’ என்பது நிர்வாக ஆட்சியாளர் அல்லது நாட்டின் வேந்தன் மீது மக்களுக்கு நம்பிக்கையும், மாறாப் பற்றும், அன்பும் இருக்கும். அதேபோல் நிர்வாகம் செய்யும் அரசன் மக்கள் மீது காட்டும் அன்பும், மக்கள் நிம்மதியுடன் செயலாற்றத் தேவையான செயல்பாடுகளையும், பரிவையும் ‘வேந்து அமைவு’ என்கிற வார்த்தை எடுத்துக்காட்டுகிறது.
தக்காளி, வெங்காயத்தைப் போன்று அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை ஆண்டில் அடிக்கடி மாறிமாறி ஏற்றமடைந்து மக்களை வேதனைப்படுத்துகின்றன. இது போன்ற விலையுயர்வையும், மக்களின் மீது ஏற்றப்படும் சுமையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஒரு நல்ல அரசுக்கு உள்ளது என்பதையும் இந்தக் குறள் சுட்டிக்காட்டுகிறது.
விவசாயத்தின் மூலம் மக்கள் உருவாக்கும் பொருட்களை, அவர்கள் நினைக்கும் விலைக்கு விற்க முடியாத சூழல் உள்ளபோதும், எளிதாக வாங்க இயலாத சூழல் நிலவும்போதும் எப்படி நல்லாட்சி செய்தாலும், நாட்டு மக்களுக்கு வெறுப்பே உண்டாகும். காய்கறிகளின் விலை தாறுமாறாக உயரக் காரணம் என்ன? குளிர்பதனக் கிடங்கு அமைத்துப் பொருள் உற்பத்தி அதிகமாகும்போது பதப்படுத்தத் தவறிவிடுகிறோம்.
பொருளுக்கான இயல்பான தேவை இருக்கும்போது, பதுக்கப்பட்ட பொருளைக் கள்ளச் சந்தையில் விற்க ஆரம்பிக்கும்போது விலை ஏற்றத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். செல்வச் செழிப்போடு இயற்கை வளங்கள் உள்ள ஒரு நாடு, நல்லரசன் இல்லாத சூழலில் பயனற்றுப் போகும் என்பதை இந்த இரண்டு வரிகளில் வள்ளுவர் உணர்த்தியுள்ளார்.
மக்கள் மீது பரிவும் அன்பும் காட்டும் நல்லரசன் கிடைக்க மாட்டாரா என ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படாமல், ‘வேந்து அமைவு’ இருக்க வேண்டும். எல்லா வளங்களையும் ஒரு நாடு பெற்றிருந்தாலும் முறையான நிர்வாகம் இல்லாமலும் மேலாண்மைப் பண்பு இல்லாமலும் மக்கள் மீது அடக்குமுறையைக் கையாளுகின்ற அரசன் அமைந்தால் எல்லாமே வீணாகிவிடும்.
- பா.சிதம்பரராஜன், முதல்வர், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி; க.சண்முகம், உதவிப் பேராசிரியர், கணினி அறிவியல் துறை. தொடர்புக்கு: shanmugamk.cse@valliammai.co.in