அறிவியல் அறிவோம்: சூரியன் குழந்தையாக இருந்தபோது...

அறிவியல் அறிவோம்: சூரியன் குழந்தையாக இருந்தபோது...
Updated on
1 min read

எப்படி இருக்கிறது இன்றைய சூரியனின் பிரகாசம்! ஆனால் பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வளவு பிரகாசம் இருந்திருக்கவில்லை. அதனால் என்ன என்கிறீர்களா? ஆனால், பூமி உறைந்துபோகவில்லை. அதில் திரவ நீர் நிறைந்து உயிர்க்கோளமாக இருந்தது. இது புதிர் தானே?

சூரியனும் அதன் கோள்களும் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவை. சுமார் 380 கோடி ஆண்டுகள் முன்பு சூரியனின் குழந்தைப் பருவம். இன்றைய பிரகாசத்தில் 70% தான் அன்றைய சூரியனிடமிருந்து வெளியானது. அந்தளவு குறைவு என்றால் பூமியின் சராசரி வெப்பம் மைனஸ் 4 டிகிரி ஆக இருந்திருக்கும். இந்த உறைகுளிர்நிலையில் பூமியே பனிக்கட்டி கிரகமாக ஆகியிருக்கவேண்டும்.

ஆனால், 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. பூமியில் கடல்கள் திரவநிலையில் இருந்தன என்று இதற்கு அர்த்தம். ஆரம்பகால ஒரு செல் உயிரிகள் திரவ நீர் நிலைகளில் வாழ்ந்தவை. கடலடியில் எரிமலை வெடிக்கும்போது உருவான 420 கோடி ஆண்டுகள் பழமையான தொல்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, அன்று பூமியில் கடல்கள் இருந்தன என்பது உறுதி.

எது பூமியை இளஞ்சூட்டில் வைத்திருந்தது என்பது இன்றும் ஒரு புதிர்.

கார்பன் டை ஆக்ஸ்சைடு, மீத்தேன் ஆகிய பசுமைக்கூட வாயுக்கள் இன்றுள்ளதைவிட அன்று வளிமண்டத்தில் கூடுதல் செறிவாக இருந்திருக்கலாம். அதனால் பூமி சூடாகியிருக்கலாம் என்பது ஒரு வாதம். அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில் தொல்பனிக்கட்டிகளை எடுத்து ஆராய்ந்தார்கள். அதில் எதிர்பார்த்த வாயுக்கள் இருந்த அடையாளம் இல்லை.

அக்பர், பீர்பால் தொடர்பான ஒரு கதை உண்டு. குடிமகன் ஒருவர் குளிர்காலத்தில் யமுனை நதியில் ஒருநாள் இரவு முழுவதும் இருக்கிற சவாலை ஏற்பார். அதை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பார். இது எப்படிச் சாத்தியம் என்று அக்பர் கேட்பார். தொலைவில் தெரிகிற அரண்மனையில் நீங்கள் ஏற்றி வைத்திருந்த விளக்கிலிருந்து வந்த வெப்பத்தை உணர்ந்து குளிரை ஜெயித்தேன் என்பார் அவர்.

1972- கார்ல் சாகன் மற்றும் ஜார்ஜ் முல்லர் எனும் இரண்டு விஞ்ஞானிகள்தான் இந்த மர்மத்தை முதலில் சுட்டிக்காட்டினர். அரண்மனை விளக்குபோல தொலைவில் மங்கலாக பிரகாசித்த சூரியனைப் பார்த்தபடி, கடலும் ஏரிகளும் நுண்ணுயிரிகளும் வாழ்வதற்குத் தேவையான இளஞ்சூட்டை பூமியும் பெற்றுக்கொண்டதோ நமக்கு இன்னும் தெரியாது. இதை ‘இளம் சூரிய புதிர்’ என்கிறார்கள்.

- த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in