

நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு, பயனாளிகளிடையே அச்சத்தை உருவாக்கியது. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் நியாயமானதா? இந்த நிலைக்கு நாம் ஏன் தள்ளப்பட்டுள்ளோம்?
1980–களிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக நிலத்தடி நீர்ப் பயன்பாடு இந்தியாவில் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலகில் மிக அதிகமாக நிலத்தடி நீரைச் சுரண்டும் நாடான இந்தியாவில், 2020-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி வருடாந்திர நிலத்தடி நீர் சுரண்டலானது 245 பிசிஎம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது மொத்த நிலத்தடி நீரின் அளவில் (398 பிசிஎம்) 64%. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத் போன்ற 6 மாநிலங்கள் மட்டும் சுமார் 144 பிசிஎம் (59%) நிலத்தடி நீரைச் சுரண்டுகின்றன. நிலத்தடி நீரில் 89% பாசனத்துக்காகப் பயன்படுத்தப்படுவதால் கிடைக்கும் நிகர பாசனப் பரப்பளவு 1960-61-ல் 7.30 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 2018-19-ல் 48 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீரின் நன்மைகள் மிகப் பெரிதாக இருந்தாலும் அதன் தொடர்ச்சியான சுரண்டல் பல எதிர்மறையான விளைவுகளை, விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. நாசா (2009) நடத்திய ஓர் ஆய்வில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு மீட்டர் குறைந்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், 2002-க்கும் 2008-க்கும் இடையில், நீர்ச் சுரண்டல் காரணமாக இம்மாநிலங்களிலிருந்து சுமார் 109 கன கி.மீ. நிலத்தடி நீர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் நிலத்தடி நீர்ச் சுரண்டல் அதிகரித்துவருவதால், நீரின் தரம் மோசமடைவது மட்டுமல்லாமல், அதிகமாக நீர் சுரண்டப்படும் வட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, பாதுகாப்பானவை (safe blocks) எனக் குறிப்பிடப்பட்டவை தவிர, 'மற்றவை' என வகைப்படுத்தப்பட்டுள்ள வட்டங்களின் எண்ணிக்கை 2004-ல் 1,645-லிருந்து 2020-ல் 2,538 ஆக அதிகரித்துள்ளது. நீர் அதிகப்படியாகச் சுரண்டப்படும் வட்டங்கள் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும் அமைந்துள்ளன.
இதே காலகட்டத்தில், உப்பு நீர் என வகைப்படுத்தப்பட்ட மொத்த வட்டங்களின் எண்ணிக்கையும் 30-லிருந்து 100 ஆக அதிகரித்துள்ளது. முக்கியமாக, உலக வங்கி வெளியிட்டுள்ள இந்தியாவில் நிலத்தடி நீர்ச் சுரண்டல் பற்றிய ஆய்வறிக்கை (2010), 2032-க்குள் 60% நிலத்தடி நீர்நிலைகள் (aquifers) மிகவும் மோசமான கட்டத்தை எட்டிவிடும் என்று எச்சரித்துள்ளது. இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாம் புறக்கணிக்க முடியுமா?
தவறான மின்சார கட்டணக் கொள்கை
பசுமைப் புரட்சிக்குப் பிறகு நிலத்தடி நீர்ச் சுரண்டல் அதிகரித்து வருகின்றபோதிலும், பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றிவரும் தவறான மின் கட்டணக் கொள்கைகளே நிலத்தடி நீர் அதிகமாகச் சுரண்டப்படுவதற்கு முக்கியக் காரணம். குறைந்த விலை, இலவச மின்சாரம் போன்றவை பயனாளர்களை (விவசாயிகளை மட்டுமல்ல) அதிக நிலத்தடி நீரைச் சுரண்ட ஊக்குவிக்கிறது.
ஏனெனில், குறைந்த விலை மின்சாரம் மூலம் நீரை எடுப்பதற்கான அடக்கச் செலவு மிகவும் குறைவு. பஞ்சாப், ஹரியாணா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாசனத்துக்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.
இதன் காரணமாக, இம்மூன்று மாநிலங்களில் நிலத்தடி நீர்ச் சுரண்டலின் சராசரி அளவு 127% ஆக உள்ளது; இந்தியாவின் சராசரி அளவோ 61.60% தான். பொறுப்பற்ற முறையில் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது விவசாயத் துறையைப் பாதிக்காதா?
அனைத்து விவசாயிகளுக்கும் கொடுக்கப்படும் இலவச மின்சாரம், குறிப்பாக ஆழம் குறைந்த குழாய்க் கிணறுகளைக் கொண்ட விவசாயிகளுக்கு நன்மையைவிட அதிகத் தீங்கையே விளைவிக்கிறது. ஆழ்துளைக் கிணறுகள் அதிக நிலத்தடி நீரைச் சுரண்டுவதால், ஆழமற்ற கிணறுகளில் தண்ணீர் குறைந்து, பின்னர் அவை பயனற்றுப்போய்விடுகின்றன. நீர்மட்டம் குறைவதால் கிணறுகளின் ஆயுள்காலமும் குறைகிறது.
இது பெரிய குதிரைத்திறன் பம்புசெட்களைக் கொண்ட ஆழ்துளைக் கிணறுகளை நிறுவ முடியாத, வளம் குறைந்த விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 5-வது (2017) சிறு - குறுநீர்ப் பாசனக் கணக்கெடுப்பின்படி, 2006-07 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் மொத்தம் 4.14 லட்சம் திறந்தவெளிக் கிணறுகள் செயலிழந்துள்ளன.
கட்டணம் மட்டும் போதாது
அதிகரித்துவரும் நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் கருத்தில்கொண்டு, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்குப் பதிவுக் கட்டணம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் கட்டுப்படுத்த இது போதுமா? பெயரளவிலான இந்தக் கட்டணம் நிலத்தடி நீரைப் பெருமளவில் பயன்படுத்துவோர் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அனைத்துப் பயனாளிகளுக்கும் ஒரே மாதிரி கட்டணத்துக்குப் பதிலாக, விவசாயம், தொழில்துறை - வீட்டு உபயோகம் போன்றவற்றுக்கு, அவர்களின் கட்டணம் செலுத்தும் திறனைக் கருத்தில்கொண்டு மாறுபட்ட கட்டண வீதத்தை நிர்ணயிக்கலாம்.
விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு, நீர்ச் சுரண்டலின் அளவு, கிணற்றின் ஆழம், பம்புசெட்டின் குதிரைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கலாம். விவசாயத்துக்கான கட்டணத்தை, நில அளவு, பம்புசெட்டின் குதிரைத்திறன் / மின் நுகர்வு அடிப்படையில் நிர்ணயிக்கலாம்.
எவ்வாறாயினும், நிலத்தடி நீரின் அதிகப்படியான சுரண்டலைக் கட்டுப்படுத்தக் கட்டண நிர்ணயிப்பு மட்டும் போதுமானதாக இருக்காது. பாசன பம்புசெட்டுகளுக்கு மின்சாரத்தை இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது நிலத்தடி நீர் அதிகமாகச் சுரண்டப்படுகிறது. எனவே, மின் கட்டணக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஐந்து குதிரைத்திறனுக்குக் குறைவான பம்புசெட் வைத்திருக்கும் குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படலாம். மற்ற அனைத்து விவசாயிகளுக்கும் மின்சார உபயோகத்தின் அடிப்படையில் (kWh based pricing) விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இதன் மூலம், அதிக நீரைப் பயன்படுத்தும் பயிர்களைச் சாகுபடி செய்பவர்கள் நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டுவதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
சூரிய சக்தியில் இயங்கும் பம்புகள் நிலத்தடி நீர் சுரண்டுவதைக் குறைக்க உதவுவதுடன், மின்சாரத்துக்குக் கொடுக்கப்படும் மானியத்தைக் குறைக்க உதவுவதாக ஆரம்ப ஆய்வுகள் காட்டுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்புகளை அதிகப்படுத்தும் நோக்கில், விவசாயிகளுக்கு மானியத்துடன், பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மஹாபியன் (PM-KUSUM) என்ற திட்டம் ரூ.34,422 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் நிலத்தடி நீரைப் பொறுப்பற்ற முறையில் சுரண்டுவதைக் கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் பெரும்பாலான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
- அ.நாராயணமூர்த்தி, மூத்த பேராசிரியர், தொடர்புக்கு: narayana64@gmail.com