அஞ்சலி: அச்சுதன் கூடலூர் | உள்ளுணர்வின் வெளிச்சத்தில் ஓவியப் பயணம்

அஞ்சலி: அச்சுதன் கூடலூர் | உள்ளுணர்வின் வெளிச்சத்தில் ஓவியப் பயணம்
Updated on
2 min read

ஓவியர் அச்சுதன் கூடலூர், தனது 77-வது வயதில் மறைந்த செய்தி மனதை வதைக்கிறது. இவர் இந்தியா முழுவதும் 23 தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியவர். நவீன அரூப ஓவியங்களைத் தீட்டுவதில் தனக்கென ஒரு சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். கேரளத்தில் பாரதப்புழா ஆற்றங்கரையில் வளர்ந்தவர். மலையாள இலக்கிய ஜாம்பவான் எம்.டி.வாசுதேவன் நாயர் இவரது தாய்மாமன் என்பதால், நான் இவரோடு முதன்முதலாகப் பழகியபோதே இவரைப் பிடித்துப்போயிற்று. மலையாள எழுத்து, தமிழ் எழுத்து ஆகிய இரண்டோடும் நெருக்கம் கொண்ட ஓர் ஓவியர். ஆங்கில நாளேடுகளில் ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களைப் பார்த்திருக்கிறேன்.

காது மறைத்து வளர்ந்த சிகை, அடர்ந்த தாடி, மீசை, உள்ளுக்குள் ஏதோ ஒரு கேள்வியோடு பார்க்கும் பார்வை, மிருதுவாக வெளிவரும் வார்த்தைகள், தரைக்கு வலிக்காமல் ஒரு நடை என்று வாழ்ந்த அச்சுதன் கூடலூர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல தொலைக்காட்சி விளம்பரத்தில் ஓவியராகவே தோன்றியதன் காரணமாக, ‘ஓவியர்’ என்றால் அவர் அச்சுதன் கூடலூர் போன்ற தோற்றத்தில்தான் இருப்பார் என்று மக்கள் மனத்தில் நினைக்கக்கூடிய அளவுக்குப் பிரபலமாக இருந்தார்.

தேசிய அளவில் அங்கீகாரம்

அச்சுதன் என்ற கலைஞரைப் பற்றி, ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் சொல்வதென்றால், ‘ஓவியர் அச்சுதன் உள்ளுணர்வின் தீபத்தைக் கையிலேந்திப் பயணித்தவர்’ என்று சொல்வேன். காரணம், அவர் எந்தக் கலைப் பள்ளியிலும் முறையாக ஓவியம் பயின்றவர் அல்ல என்பது மட்டுமல்ல... எண்பதுகளில் ‘மதராஸ் ஆர்ட் கிளப்’ உருவாக்கப்பட்டு, அதில் எனது நண்பர்களான ஏ.வி.இளங்கோ, அச்சுதன் கூடலூர், ‘மெயில்’ ஜெயராமன், விட்டல்ராவ் போன்றவர்கள் இருந்தார்கள். சந்தானராஜ், அந்தோணிதாஸ் போன்ற மிகச் சிறந்த ஓவியர்கள் இந்த மதராஸ் ஆர்ட் கிளப்பில் ஆசிரியர்களாக இருந்தார்கள். அப்போது அச்சுதன் கூடலூர் சர்வே இலாகாவில் டிராப்ட்ஸ்மேனாக அரசு ஊழியத்தில் இருந்தது எனக்குத் தெரியும். ஒரு கட்டத்தில், அச்சுதன் தனது அரசுப் பணியிலிருந்து விலகி முழுநேர ஓவியரானார். அவர் எல்லாரிடமும் சற்று விலகியே இருக்கக்கூடிய ஒரு தனிமை விரும்பிதான். ஆனால், சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்தார்.

சுயாதீனமாக ஓவியம் கற்றவர்களை ஓவியர்களாகவே கருதாத மதராஸ் ஓவிய உலகில், அச்சுதன் கூடலூர் தனது திறமையால் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றவர். சர்வதேச அளவில் விமர்சகர்கள் இவரைப் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். பிரபஞ்சன் தங்கியிருந்த விடுதி அறையில் தோழராக இருந்தவர் அச்சுதன். ‘பிரபஞ்சன் சிறுகதைகள்’ நூலை அன்னம் பதிப்பகம் மூலம் கவிஞர் மீரா 1983இல் வெளியிட்டபோது, அதற்கான அட்டைப்படத்தை அச்சுதன் கூடலூரிடம் நான்தான் வாங்கினேன். முழுக்கமுழுக்க அரூப ஓவியராகத் திகழ்ந்த அச்சுதன், பிரபஞ்சன் நூலுக்கு அரை அரூப நிலையிலான காக்கைப் படம் ஒன்றை தீட்டி அட்டைப்படத்துக்குக் கொடுத்தார்.

ஓவிய உலகத்துக்கு இழப்பு

அச்சுதன் இலக்கியத்தோடு தொடர்புள்ளவர் என்றபோதிலும், அவரது ஓவியப் படைப்புகள் இசையோடுதான் அதிகத் தொடர்புகொண்டவை என்றே எனக்குத் தோன்றுகிறது. ‘எல்லாக் கலைகளும் இசையாகவே மாற முயல்கின்றன’ என்று ஜெர்மானியத் தத்துவஞானி ஆர்தர் ஷோபன்ஹவர் சொன்னது அச்சுதன் கூடலூரின் ஓவியங்களுக்கு மிகவும் பொருந்தும். இசைக் கலைஞர் ஒருவர் ராகங்களை வைத்துக் கலந்து இசைத் தொகுப்பை உருவாக்குவதுபோல் தனது மனோலயத்தின் அலைவரிசைகளுக்கு ஏற்பத் தனது அரூப ஓவியங்களை உருவாக்குவதாக அச்சுதன் ஒருமுறை என்னிடம் சொன்னார். திருமணம் செய்துகொள்ளாமல் தனியராக வாழ்ந்த அவர், இறுதிக் காலத்தில் சென்னை சோழமண்டல ஓவியர் கிராமத்துக்குப் பக்கத்தில் நீலாங்கரையில்தான் வாழ்ந்தார். ‘கலைஞனுக்கு என்று தமிழ்ச் சமூகத்தில் பிரத்யேகமான ஓர் இடம் கிடையாது’ என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். ஆனால், இந்தச் சமூகத்தில் ஓவியராகவே வாழ வேண்டும் எனும் பிடிவாதத்துடன் அவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளி, தேசிய அளவில் அறியப்பட்ட ஓவியராகப் புகழுடன் வாழ்ந்தார். சென்னையின் ஓவிய அடையாளமாகத் திகழ்ந்த அச்சுதன் கூடலூரின் மறைவு, சென்னை ஓவிய உலகத்துக்கு இழப்பு.

- இந்திரன், கவிஞர், கலை இலக்கிய விமர்சகர்

தொடர்புக்கு: poetindran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in