தமிழ்ப் பாடவேளை குறைக்கப்படலாமா?

தமிழ்ப் பாடவேளை குறைக்கப்படலாமா?
Updated on
3 min read

புதிய கல்வியாண்டு பிறந்ததும், பாடவேளைகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மொழிப்பாடத்துக்கான பாடவேளைகள் வாரத்துக்கு ஏழாக இருந்ததை மாற்றி, ஆறு பாடவேளைகள் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானபோது, ‘தமிழ்ப் பாடத் தேர்வில் நாற்பத்தேழாயிரம் மாணவர்கள் தோல்வி’ என்ற செய்தி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நேரத்தில் - இதற்கு மாற்றாக, அரசு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் - இப்படி ஒரு தீர்வு!

தேவை நேரடிப் பயிற்சி

பொதுவாக, 10 ஆம் வகுப்பு முடித்து வெளிவரும் மாணவர்கள், தமிழ்ப் பெருங்கவிகளாக வந்துவிடுவார்கள் எனும் எதிர்பார்ப்பு யாருக்கும் இருப்பதில்லை. பிழையின்றி எழுதும் திறனும், தெளிவான உச்சரிப்புடன் பேசும் திறனும் இருந்தாலே போதும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு மொழிப்பாடத்தில் கூடுதலான எழுத்துப் பயிற்சியும், பேச்சு – உச்சரிப்புப் பயிற்சியும் தேவைப்படும். இதற்கு, நான் படித்த காலத்திலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்திலும், வகுப்பில் நடத்தி முடித்த பாடத்தை ஒவ்வொருவராகச் சத்தம் போட்டு வாய்விட்டுப் படிக்கவைத்துப் பயிற்சி எடுக்கச் சொல்வது வழக்கம்.

அல்லது மாணவர்களுக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு உரிய பதில்களைச் சொல்லச் சொல்வோம். இதற்கு நல்ல வரவேற்பும் உரிய பயனும் கிடைத்தது.

தனியார் - உரைநூல்களை மாணவர்கள் வைத்திருந்தால் அதை வகுப்பிலேயே கிழித்துப்போடுவது வழக்கம். கொஞ்சம் முரட்டுத்தனமாகத் தெரிந்தாலும் சிலநேரம் அதுவும் தேவைப்படுகிறது என்பதை ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்று வள்ளுவரும் சொல்லியிருக்கிறாரே! மாறாக, உரைநடை - செய்யுள் பகுதிக்கு, வகுப்பிலேயே கேள்வி-பதில் பாணியில் ஆசிரியர்களே சொல்லி, மாணவர்களை எழுதச் செய்வோம் (டிக்டேஷன்). இப்படி என் பேராசிரியர் தி.வே.கோபாலன் கற்றுத் தந்ததையே நான் பின்பற்றிவந்தேன். திரை, விளையாட்டு நாயகரின் படம்போட்ட மாணவர் குறிப்பேடுகள், தனியார் உரைநூல்களைத் தடைசெய்து, தேவையெனில் அரசே அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் உதவியோடு குறிப்பேடுகளை வழங்க வேண்டும்.

ஊக்கமாத்திரை தந்தால் போதும்

தமிழைப் பிழையின்றியும் அழகாகவும் எழுதிவரும் மாணவர் ஏடுகளில் ‘நன்று’ என்று எழுதிக் கையொப்பமிட்டால் போதும். அது மாணவர் படிப்பில் மிகப்பெரிய உற்சாகத்தை நிகழ்த்துவதைக் கண்கூடாகக் காணலாம். அதன் பிறகு, அந்த ஒன்றை - நன்றைக் காப்பாற்றிக்கொள்ள, தேவையான பயிற்சியை மாணவர்களே மேற்கொள்வார்கள்.

அவர்களே இன்னும் சிறப்பாக எழுதிவரும்போது ‘மிக நன்று’ எனும் ஊக்கமாத்திரை போதும். அது வாழ்நாள் முழுவதும் தமிழைப் பிழையின்றி எழுத வைத்துவிடும் என்பது எனது 34 ஆண்டுத் தமிழாசிரியர் பணி அனுபவம்.

இப்படிப் பாடம் நடத்தி, கேள்வி-பதில் உரையும் தந்து, மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சியும் தருவதற்கு ஆசிரியர்களுக்கு ஆர்வம் மட்டுமல்ல, நேரமும் அதிகம் தேவைப்படும். கட்டுரை ஏடுகள் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் சுமையன்று, அவைதான் எழுத்துக் களம்! மாணவரின் சொல், பொருள் ஆற்றல் வளரவும் சிந்தனைக்கு வித்திடும் மொழிக் களமாக இருப்பதும் அதுதான்.

ஏராளமான எழுத்தாளர்கள், தலைவர்களின் வளர்ச்சியை இதற்கு உதாரணம் காட்ட முடியும். இதற்கு மொழிப் பாடவேளைகள் சற்றுக் கூடுதலாகத் தேவைப்படும்போது, கட்டுரைகளைக் குறைப்பதும் பாடவேளையைக் குறைப்பதும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஆசிரியர்க்குத் தேவை பயிற்சி

இலக்கணப் பகுதியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எட்டிக்காயாகவே இன்னும் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இலக்கணம் மாறக் கூடாது என்னும் ‘கெட்டி தட்டிப்போன’ நினைப்பே. நன்னூல் இலக்கணத்தின் கடைசி நூற்பாவே, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்று தெளிவாகச் சொல்லியும், இந்தப் போக்கு மாறவே இல்லை.

இப்படியெல்லாம் நமது மொழி கட்டுக்கோப்பாக இருந்தது என்பதை உணர்த்தி, இனி இப்படியும் இருக்கலாம் எனச் சொல்வதுதான் இலக்கணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, உதாரணச் சொல்லுக்குத் தமிழில் ‘போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன என்பவும் பிறவும் உவமத்து உருபே’ என்பது நன்னூல் இலக்கணம் (நூற்பா-367) இந்தப் பன்னிரண்டு சொற்களில் ஒரு சொல்கூட இப்போது வழக்கில் இல்லை. மட்டுமல்ல, இப்போது புழங்கிவரும் ‘மாதிரி, ஆட்டம், கணக்கு’ முதலான சொற்களை மாணவர்க்கு அறிமுகப்படுத்த முதலில் ஆசிரியர்க்குப் பயிற்சி வேண்டுமே.

இப்படி, இலக்கணத்தைக் கற்பிக்க ஆசிரியர்க்கே புதிய பயிற்சி தேவைப்படும்போது, மாணவர்க்கு அறிமுகப்படுத்த எவ்வளவு உழைப்பும் மாணவரோடு செலவிடும் நேரமும் தேவைப்படும் எனச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்துப் பிழைகளைக் களையும் பயிற்சியை இலக்கண வகுப்புப் பயிற்சியாக நினைக்காமல், உரைநடை இடையிலேயே வருமாறு செய்யலாம் என்று, பாடநூல் எழுதும் குழுவிலிருந்தபோது முயன்றும் அது நடைமுறைக்கு வரவில்லை.

இதற்குத்தான் அதிக நேரம் தேவைப்படும். ஆனால், இதற்குத்தான் நேரம் கிடைப்பதில் சிக்கலும் நீடிக்கிறது. எந்திரகதியாகப் பாடத்தை நடத்தி முடிக்க, நேரத்தில் சிக்கல் வரும்போது எழுத்துப் பிழையைக் களையும் முயற்சி எப்படி நடக்கும்?

வழிகாட்டும் மொழி

மற்ற பாடங்கள் எல்லாம் வேலைவாய்ப்புக்கானவை என்று சொன்னால், தமிழ்மொழிப் பாட வகுப்பு அதையும் தாண்டி வாழ்நாள் முழுவதும் (“வையகம் காப்பவரேனும், சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும்” என்கிறார் பாரதி) வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதும், பிழைப்பைத் தாண்டிய சமூக உணர்வோடு இருக்க வழிகாட்டுவதும் பண்பாட்டுப் படிப்புதான் என்பதைப் புரிந்துகொண்டால் மொழிப் பாடத்தின் அருமை புரியும்.

எழுத்துப் பிழை மட்டுமல்ல, அதைக்கூடச் சரிசெய்துவிடலாம். அதையும் தாண்டிய வாழ்க்கை பற்றிய கருத்துப் பிழைகளோடு மாணவர்கள் வெளிவந்தால், அது படிப்பு சார்ந்த பண்பாட்டில் நேர்ந்த பிழையன்றி வேறென்ன? சொல் வளமும் சிந்தனை வளமும் தாய்மொழிப் பாடத்தின் வழியாக மட்டுமே சாத்தியமாகும் என்பதே நிதர்சனம்.

இதனை நன்கு புரிந்துகொண்டால், தாய்மொழிப் பாடம் வெற்றுப் பெருமைக்காக அல்ல, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அவசியமானது என்பது புரியும். அதற்குத் திட்டமிடுவதே இப்போதைய பள்ளிக் கல்விக்கு முதன்மைத் தேவை.

- நா.முத்துநிலவன், ஓய்வுபெற்ற தமிழாசிரியர், ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in