இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம்

இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம்
Updated on
3 min read

பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது இன்று பேசுபொருளாகியிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்தப் பள்ளியில் படித்த மாணவன், ஒன்பதாம் வகுப்பில் வன்முறையில் ஈடுபடுகிறான். அவனை உருவாக்கியதில் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பங்கும் பொறுப்பும் இல்லையா? இது நம் சமுதாயத்தின், நமது காலகட்டத்தின் மிகப் பெரிய சோகம்; நமக்கெல்லாம் ஒரு பெரிய சவால்; இளைஞர்கள் நம் சமுதாயத்தில், பெரியவர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதன் குறியீடு.

வளரிளம் பருவத்தில்தான் (adolescence) மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த மாணவப் பருவம் அனைத்து உலக நாடுகளிலும் சவாலான காலகட்டமாகத்தான் பார்க்கப்படுகிறது. இக்கட்டத்தில் மாணவர்கள், பாலினப் பாகுபாடின்றி, பெருமளவில் மன உளைச்சலுக்குள்ளாவது உண்மை. வளரிளம் பருவம் அன்புக்காக, புரிதலுக்காக, அரவணைப்புக்காக, உதவிக்காகத் தவிக்கும் பருவம். சில கட்டுப்பாடுகளால், கலாச்சாரக் காரணங்களால், நம் சமுதாயத்தில் பெண் குழந்தைகள் வன்முறைகளில் அதிகமாக ஈடுபடாவிட்டாலும், அவர்களுக்கும் இதுபோன்ற உளவியல் சிக்கல்கள் ஏராளமாக இருக்கின்றன.

வன்முறைகளில் ஈடுபடும் அல்லது அதில் தள்ளப்படும் குழந்தைகளின் சூழலைப் புரிந்துகொள்ளும் நிலை பள்ளிகளில் இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளிகள் சமுதாயத்திலிருந்து முழுக்க விலகிக் கிடக்கின்றன; அந்நியப்பட்டுக் கிடக்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று சொன்னால், அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய சமூக, பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருகிறார்கள்? ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்துதான் அரசுப் பள்ளிக்கு வருகின்றனர். அப்படி என்றால், ஏழைக் குழந்தைகள்தான் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்களா? வசதி படைத்த மாணவர்கள் ஈடுபடுவது இல்லையா?

இவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களுக்குப் பங்கு இல்லையா என்று கேட்கப்படுகிறது. பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு. ஆனால், அரசுப் பள்ளிக்கு வரக்கூடிய பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறையாக உயர் நிலைப் பள்ளிகளில் கற்பவர்கள். பெற்றோர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலை செய்து, வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களிடமிருந்துதான் உதவி வர வேண்டும் என்று சொன்னால், அதற்கான நேரமோ, புரிதலோ, சூழலோ பெற்றோர்களுக்குக் கிடையாது.

இன்றைய அரசுப் பள்ளிப் பெற்றோர்கள், அவர்கள் வளர்ந்த காலத்துக்கும், இன்று தங்கள் வளரிளம் பருவக் குழந்தைகள் வாழும் உலகத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியாது. தங்கள் குழந்தைகள் வாழும் காலத்தின், கவர்ச்சிகளைக் கடைவிரித்துச் சுண்டி இழுக்கும் உலகத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அதையும் புரியவைக்கும் முயற்சியைப் பள்ளிகளும் ஆசிரியர்களும்தான் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர் சமுதாயத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் வாழ்விடத்திலிருந்து பள்ளிக்கு நீண்ட தூரம் பயணம் செய்து வருகிறார்கள்.

குழந்தைகளின் வாழிடங்களை நேரில் சென்று பெரும்பாலான ஆசிரியர்கள் பார்த்ததே கிடையாது. குழந்தைகள் அவர்களுடன் பேசுவதற்கு, அவர்கள் மனதை உலுக்கிக்கொண்டிருக்கும் கேள்விகளைக் கேட்பதற்கு நேரமே இல்லை. அந்த அளவுக்கு ஆசிரியர்-மாணவர் உறவும் இல்லை. விதிவிலக்காகச் சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பாகப் பழகுகின்றனர். அதுபோன்ற ஆசிரியர்களிடம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பதில்லை. ஆசிரியரை அடிப்பது, அவதூறாகப் பேசுவது போன்றவை நடப்பதில்லை. ஏன் அனைத்து ஆசிரியர்களும் அவ்வாறு இருப்பதில்லை?

நாற்பது - ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆசிரியர்கள் அதே கிராமத்தில் தங்கியிருப்பார்கள். மாலை நேரத்தில் மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் பேசுவார்கள். இன்று அந்த உறவு உடைந்தே விட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான பெரும் வர்க்க வேறுபாடு; அது உருவாக்கும் வர்க்க மனநிலையே அனைத்துக்கும் காரணம்.

மாணவர்களைப் பற்றி விசாரிக்கப் பெற்றோர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றால், எவ்வாறு வர முடியும்? நான்கு மணிக்கெல்லாம் ஆசிரியர்கள் வீட்டிற்குச் சென்றுவிடும் நிலையில், பெற்றோர்கள் ஒரு நாள் கூலியை இழந்துதான் ஆசிரியரைப் பார்க்க வர வேண்டும். ஆகவே, பெற்றோர்களைத் தேடிச் சென்று ஆசிரியர்கள்தான் பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் தவறு செய்யும் மாணவர்களை இழிவுபடுத்தாமல், பலர் முன்னிலையில் அவமானப்படுத்தாமல், தனியே அழைத்துப் பேசி, அவர்களின் பிரச்சினையை அறிந்துகொள்ள முயல வேண்டும். “ஏம்பா இப்படி நடந்துகிட்ட? என்ன காரணம்?” என்று கனிவுடன் பேச ஆரம்பித்தால், இந்த இடைவெளி பெரிய அளவில் தவிர்க்கப்படும்.

கரோனா காலகட்டத்தில் பல மாணவர்கள் பட்டினி கிடந்தார்கள். எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் நேரிலோ கைபேசியிலோ பேசினார்கள்? “ஏம்பா, சாப்பிட்டியா?” என்று ஒரு வார்த்தை கேட்டார்களா? அவ்வாறு பேசியிருந்தால் குழந்தைகள் ஆசிரியர்களுடன் ஒட்டிக்கொள்வார்கள். பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். தேர்வு வைக்க வேண்டும். குறைவான மதிப்பெண்கள் வாங்கினால், குறைகூறத்தான் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். இதுதான் நிலை. ஒரு மாணவரின் தலைமுடியை ஆசிரியர் வகுப்பறையிலேயே வெட்டியதாக ஒரு செய்தி. வளரிளம் பருவக் காலகட்டத்தில் ஒரு மாணவனை இதைவிட மோசமாகக் குத்திக் கிழித்து அவமானப்படுத்த முடியாது. ஒரு ஆசிரியர் இதை எப்படிச் செய்ய முடியும்?

நமது பள்ளிகளில் குழந்தைகளின் உளவியல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு, அதற்கான உளவியல் ஆலோசனை கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எங்கே இருக்கிறார்கள் இந்த உளவியல் ஆலோசகர்கள்? இந்தியாவில் தற்போது உளவியல் ஆலோசனை கொடுப்பவர்கள் மிகவும் குறைவு. அதுவும் கிராமப்புறத்தில் வறுமையிலும் சாதிய ஒடுக்குமுறைகளிலும் ஆழ்ந்து கிடக்கும் மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு ஆலோசனை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

ஆசிரியர்கள்தான் ஆலோசகர்களாக, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது நான்கு மணிக்கு மேல் இருந்து மாணவர்களிடம் பேச வேண்டும். தன்னுடைய கைபேசி எண்ணை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களிடம் கொடுக்க வேண்டும். ‘உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்னிடம் கேட்கலாம்’ என்ற நம்பிக்கையை அவர்களிடம் உருவாக்க வேண்டும். மாணவர்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கு, கேள்வி கேட்பதற்கு, விமர்சிப்பதற்கு, உரையாடுவதற்கு வகுப்பறையிலோ பள்ளி வளாகத்திலோ இடம் இல்லை.

பெரும்பாலான மாணவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள்தான் ‘ரோல் மாடல்’ என்று சொல்லப்படுகிறது. சினிமாவில் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்தான் நாயகர்கள். சரி; இவர்களுக்கான மாற்று யார்? ஆசிரியர்கள் பல்வேறுபட்ட முன்னுதாரண மனிதர்களைப் பற்றித் தொடர்ந்து பேச வேண்டும். ஒரு அப்துல் கலாம் பற்றி மட்டும் அல்ல. சாதாரண மனிதர்கள் சிலரின் முன்னுதாரணச் செயல்கள் பற்றியும் பேச வேண்டும். ஒரு சமூகப் பிரச்சினையில் ஆசிரியர் தலையிட்டு, அதைச் சரிசெய்ய முயல்வதை மாணவர்கள் பார்க்கும்போது, நிச்சயம் ஆசிரியர்களை மாணவர்கள் முன்மாதிரியாக நினைப்பார்கள். தவறு செய்யும் மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும்; அப்போதுதான் அவன் திருந்துவான் என்ற வாதங்களைக் கேட்கிறோம். மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்தால் அவனைக் கிட்டத்தட்ட குற்றவாளி ஆக்கிவிடுவோம்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்களை வேறு ஏதாவது ஒன்றில் ஈடுபட ஆர்வத்தைத் தூண்டலாம். அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் விளையாட்டுகளில் மிகச் சிறப்பாக இருப்பார்கள். உடல் உழைப்பில் ஈடுபடும் சமூகங்களிலிருந்து வந்தவர்களாதலால், வலிமையான உடல் கட்டமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ், (N.S.S.), சமூக சேவை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

கல்வித் துறை முதலாவதாக, பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்களுக்காவது ஆலோசகர் பயிற்சி அளித்து, மாணவர்கள் நெருங்கிப் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். பள்ளிக்கும் சமூகத்துக்குமான விரிசலைப் போக்க வேண்டும். பள்ளியில் கனிவும் பரிவும் நம்பிக்கையும் கொண்ட ஒரு சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். தவறினால், இந்தத் தலைமுறை மாணவர்களை நாம் இழந்துவிடுவோம்.

- வே.வசந்தி தேவி, தலைவர், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in