Published : 04 Jan 2022 08:37 AM
Last Updated : 04 Jan 2022 08:37 AM

வேளாண் விளைபொருள் பட்டியலிலிருந்து பருத்தி நீக்கம்

சீனி. கலியபெருமாள்

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறைச் சட்டம்-1987-ல் அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்கள் பட்டியல் தொகுப்பிலிருந்து பருத்தியைத் தமிழ்நாடு அரசு நீக்கம் செய்து சந்தைக் கட்டண விலக்கு அளித்துள்ளது. இது தொடக்கத்தில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் நன்மை தருவதுபோல் இருப்பினும் நாளடைவில் மத்திய, மாநில அரசின் நிதியை அரசுச் சந்தைகள் எதிர்நோக்கும் கட்டாயம் ஏற்படும்.

தனது சுயநிதி (சந்தைக் கட்டண நிதி) மூலம் விவசாயிகளுக்கு எவ்வித சந்தை மேம்பாட்டுப் பணியையும் செய்ய இயலாமல் நலிவடைந்துவிடும். மத்திய வேளாண் சட்டங்களால் வேளாண் சந்தை அமைப்புகள் அழிந்துவிடும் என்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. அது போலத்தான் வேளாண் விளைபொருள் பட்டியலிலிருந்து பருத்தியையும் அடுத்தடுத்த விளைபொருட்களையும் நீக்கினால், ஒழுங்குமுறை வேளாண் சந்தை அமைப்புகள் வலுவிழந்துபோய்விடும். அரசு சார்ந்த சந்தை அமைப்புகள் வலுவிழந்த நிலையில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

வணிகர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் விவசாயிகள் வர வேண்டிய நிலை ஏற்படும். இடைத்தரகர்கள் மீண்டும் வருவார்கள். அரசு சார்ந்த சந்தை அமைப்புகள் வலுவிழந்த நிலையில், அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வது சாத்தியமில்லா நிலை ஏற்படும். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலைகூடக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகக்கூடும். பருத்தி போன்ற விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும், இந்தியப் பருத்திக் கழகம் கொள்முதல் செய்ய இடைத்தரகர்களையும் வணிகர்களையும் நாட வேண்டிய நிலை வரும்.

என்னதான் வேளாண் சந்தைகளுக்கு அரசு நிதி வழங்கினாலும், அது சுயமாக நிதி ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளும் நிலையில் இருந்தால்தான் அமைப்பு வலுப்பெறும். சந்தை அமைப்புகள் வலுவாக இருந்தால்தான், அதன் மூலம் வேளாண் கொள்முதல், விற்பனை ஆகியவற்றை அரசு கண்காணித்துக் கட்டுப்படுத்த இயலும். சந்தைக் கட்டண விலக்கு அளிப்பதால், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதற்கோ, நுகர்வோருக்குக் குறைந்த விலை கிடைக்கும் என்பதற்கோ எந்தவித ஆராய்ச்சித் தரவுகளும் இல்லை.

ஆகவே, சந்தைக்குள் நடக்கும் பரிவர்த்தனைக்கு மட்டும் சந்தைக் கட்டணம் விலக்கு அளித்துவிட்டு, வெளிப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தால் நிறைய வணிகர்கள் சந்தை அமைப்புக்குள் கொள்முதல் செய்யப் போட்டி போடும் நிலை வரும். விவசாயிகளுக்கும் போட்டி விலை கிடைக்கும். ஆகவே, பருத்தி போன்ற வேளாண் விளைபொருட்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதும், முழுமையாகச் சந்தைக் கட்டண விலக்கு அளிப்பதையும் அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், 100 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வேளாண் விற்பனைச் சந்தைகளை உருவாக்கினால், சந்தை அமைப்பு மேம்படும். நல்ல விலை கிடைக்கும்போது உற்பத்தி தானாகப் பெருகும்.

- சீனி.கலியபெருமாள், செயலாளர் (ஓய்வு), விற்பனைக் குழு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை. தொடர்புக்கு: kalia1951@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x