Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

நாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்

சி.பேசில் சேவியர்

மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் ஒருமுறை ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறுவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். ஒரு கூடை நிறைய மிட்டாய்களை வைத்தார். “யார் அதை முதலில் அடைகிறாரோ, அவருக்கே அந்த மிட்டாய்கள் அனைத்தும்” என்றார். அனைத்துச் சிறுவர்களும் கைகோத்தார்கள், இணைந்து ஓடிக் கூடையை அடைந்தார்கள், இனிப்புகளைப் பகிர்ந்து உண்டார்கள். ஆச்சரியப்பட்ட ஆய்வாளர் கேட்டார், “தனியாக ஜெயித்திருந்தால், கூடை முழுவதும் தனி ஆளுக்குக் கிடைத்திருக்குமே?” அதற்கு ஒரு சிறுமி, “பாண்டு” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு ஓடினாள். அதன் அர்த்தம், “எல்லாரும் வருத்தமாக இருக்கும்போது, எப்படி ஒருவர் மட்டும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்?”

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நமக்குள் எழும் வினாவும் இதுதான். நம் வீட்டில் உள்ளோரும், அருகில் உள்ளோரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, ஏன் அவர்களில் சிலர் இறக்கும்போதும், நான் மட்டும் எப்படி மகிழ்ந்திருக்க முடியும்? இந்தக் காலத்தில்தான் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை நாம் அதிகம் உணர்கிறோம். ஒருபுறம் சக மனிதர் குறித்த அச்சம் இருந்தாலும், மறுபக்கம் உணவு முதல் மருத்துவமனைகளுக்குத் தேவையானவற்றை வழங்குதல் வரை சாதி, மதம், தேசம் கடந்த மனிதநேயச் செயல்பாடுகளும் அன்றாடம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ‘பிறர்’ பற்றிய தத்துவங்களினூடே பயணித்தால்தான், ஆப்பிரிக்க பாண்டு தத்துவத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு பாராட்ட முடியும்.

பிறர் குறித்த தத்துவம்

மேற்கத்தியத் தத்துவ வரலாற்றில், சாக்ரடீஸின் “உன்னையே நீ அறிவாய்” மிகவும் புகழ்பெற்றது. மனிதர்கள் தத்துவக் கேள்விகளை எழுப்பத் தொடங்கியபோது, தன்னைப் பற்றியே அதிகம் சிந்தித்தார்கள். பிரான்ஸ் நாட்டுத் தத்துவவியலாளர் ரெனே தெகார்தேவின் புகழ்பெற்ற வாக்கு “நான் சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன்!” இந்தச் சிந்தனை மேலைநாட்டுத் தத்துவத்தில் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும் செல்வாக்கு செலுத்திவருகிறது. தெகார்தேவை விமர்சனப் பார்வையோடு நோக்கும்போது, அவரின் கருத்து தன்னை முன்னிலைப்படுத்துகிற பார்வை; பிறரை ஒதுக்குகிற கருத்தியல்.

பிறர் பற்றிய இருத்தலியல் பார்வை: சார்த்ர் மற்றும் புபேர்

தற்காலத் தத்துவ மரபில், இருத்தலியல் தத்துவவியலாளர்கள் பிறர் பற்றி அதிகம் பேசியிருக்கிறார்கள். அவர்கள் இரு நேரெதிர் பார்வைகளை முன்வைத்தனர். சார்த்ர், ஆல்பெர் காம்யு போன்றோர் முதல் வகை. இவர்கள் மனித உறவு நிலைகளின் எதிர்மறையான பரிமாணத்தைச் சுட்டிக்காட்டினார்கள். தத்துவவியலாளர் சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்தில் வரும் மிகப் புகழ் பெற்ற மேற்கோள் “நரகமே பிறர்”. ஒவ்வொரு மனித உறவும் ஆதிக்க வகை சார்ந்தது. இதுதான் சார்த்ரின் இருத்தலியக் கொள்கை!

மார்டின் ஹைடகர், கேப்ரியல் மார்சல், மார்டின் புபேர் போன்ற சிந்தனையாளர்கள் மனித இருப்பு மற்றும் மனித உறவு நிலைகளின் நேர்மறையான பார்வையை முன்வைக்கின்றனர். மார்டின் புபேர் ‘நான்-அது’ என்பதற்கு மாறாக ‘நான்-நீங்கள்’ என்ற உறவு நிலை பற்றிப் பேசுகிறார். முதலாவது நிலையில்தான் ஆதிக்கம் இருக்கும்; ‘மனிதர்-பொருள்’ மனநிலை இது. இங்கு மனிதர் ‘பொருளாக’ பயன்படுத்தப்படுகின்றனர். நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள் ‘அன்பு’ செய்யப்படுகின்றன எனலாம். ‘நான்-நீங்கள்’ மனநிலை இதற்கு முற்றிலும் வேறுபட்டது. இங்கு அன்பு இருக்கும்; மனிதர் ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை. இங்குதான் முழு மனித நிறைவு இருக்கும். பிறர் மூலமே நாம் நாமாகிறோம். பிறரின்றி மனித வாழ்வின் முழுமையை அடைய முடியாது என்பது புபேரின் நிலைப்பாடு.

பிறரும் பின்நவீனத்துவமும்: லெவினாஸ்

நவீன அறிவொளிக் காலத்தை விமர்சித்த பின்நவீனத்துவமானது வேறுபாடுகளையும் பிறர்மையையும் கொண்டாடுகிறது. பின்நவீனத்துவ ஓர்மை என்பது வேறுபட்ட பண்பாடுகள், சமயங்கள், அறநெறி மரபுகள், சிறுபான்மைக் குழுக்கள் போன்றவற்றில் காணப்படும் பிறர் மீது அக்கறை காட்டுகிறது. பிறர்மையை எந்த அளவுக்கு ஒரு பன்மைத்துவச் சமூகம் அனுமதிக்கிறது என்பதில்தான் அதன் முதிர்ச்சி வெளிப்படும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. உதாரணமாக, பிரான்ஸ் நாட்டு பின்நவீனத்துவச் சிந்தனையாளர் இம்மேனுவேல் லெவினாஸ் மனிதர்களை ‘பிறருக்குப்-பொறுப்பாக-இருக்கும்-உயிரி’ என்றே வரையறுக்கிறார். இவரின் பிறர் பற்றிய தத்துவம் புகழ்பெற்றது. பிறரில் இருக்கும் பிறர்மையை எண்ணிப் பார்த்து அதற்குப் பொறுப்பாக இருக்கும் அறநெறியை வெவினாஸ் தொடர்ந்து அழுத்தமாக வலியுறுத்தினார். “நீ இருப்பதாலேயே, நான் இருக்கிறேன்” என்ற புரட்சிகரமான சிந்தனையே இது.

ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நெடிய மேற்கத்திய தத்துவப் பயணத்தின் இறுதி எல்லையை, ஆப்பிரிக்கப் பழங்குடியினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அடைந்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. பாண்டு தத்துவத்தைச் சுருக்கமாக, “நாம் இருப்பதாலேயே, நான் இருக்கிறேன்” என்று சொல்லலாம். ‘நான்-நீ’ கடந்த ‘நாம்’ எனும் சிந்தனை இது. நெல்சன் மண்டேலா சொல்கிறார், “ஆப்பிரிக்காவில் பயணிப்பவர் அங்கு ஒரு கிராமத்தில் நின்று, தண்ணீரும் உணவும் கேட்கத் தேவையில்லை. அவர் நின்றாலே மக்கள் உணவு கொடுத்து உபசரிப்பார்கள். இது பாண்டு சிந்தனையின் ஓர் அம்சம்.” நோபல் பரிசு பெற்ற கறுப்பினச் செயல்பாட்டாளர் டெஸ்மண்ட் டூட்டூ இன்னும் விரிவாக விளக்குகிறார். “ஒரு மனிதர் பிற மனிதரோடு கூடி வாழ்வதாலேயே மனிதராகிறார். கூடி வாழும் குழும வாழ்வில்தான் மனிதர் முழுமையாகிறார். பாண்டு தத்துவத்தோடு வாழும் நபர், பிறருக்கு எப்போதும் திறந்த மனதுடன், அவரை மதிப்பவராகவும், அவருக்கு உதவுபவராகவும் விளங்குகிறார். ஏனெனில், பிறர் என்பவர் பெரிய முழுமையின் ஒரு பகுதி. தனிநபர் பாதிக்கப்படும்போது குழுமமும் பாதிக்கப்படுகிறது.”

அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளே கரோனா பெருந்தொற்றைக் கையாளத் திணறியபோது, ஆப்பிரிக்க நாடுகள் வெகு சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்தன. அதற்கான பல காரணங்களில் ஒன்றாக அவர்களின் இந்த ‘பாண்டு’ தத்துவத்தையும் கருதலாம்!

- சி.பேசில் சேவியர், ‘பிலாசபி ஆஃப் மார்ஜின்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: basilxavier@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x