

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்துக்கு 1952-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்குமே ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 375. அதிகபட்சமாக காங்கிரஸ் 152 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இரண்டாம் இடத்தில் 62 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றிருந்தது. 62 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தார்கள். விவசாயத் தொழிலாளர் மக்கள் கட்சி 35 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அரசியலில் கிட்டத்தட்ட ஓய்வுபெற்றிருந்த ராஜாஜியை காங்கிரஸ் தலைமை மீண்டும் களத்துக்குக் கொண்டுவந்தது. உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி, சில சுயேச்சைகள் போன்றோரின் ஆதரவுடன் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இவற்றில் உழைப்பாளர் கட்சிக்கும் காமன்வீல் கட்சிக்கும் தேர்தலின்போது அண்ணா ஆதரவு தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.