Published : 22 Nov 2015 01:25 PM
Last Updated : 22 Nov 2015 01:25 PM

ஐஎஸ்ஸை ஒழிக்க என்ன வழி?

புஷ் வழி எடுபடாது ஐஎஸ் ஒழிப்புக்கு

தியாகு

பாரிஸ் அழுகிறது, பாரிஸுக்காக உலகமே அழுகிறது! பாரிஸ் உலகின் மிக அழகிய நகரம். புரட்சிகளின் தலைநகரம். வரலாற்றின் முதல் ஜனநாயகப் புரட்சி - பிரெஞ்சுப் புரட்சி, 1789 - பாஸ்தில் சிறையுடைப்பிலிருந்து வெடித்துக் கிளம்பியது இங்கேதான். உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கொம்யூன் 1881 - வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்ததும் இங்கேதான்.

உலக வரலாற்றில் பாரிஸ் நகருக்குள்ள பங்குபற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். இப்போது அதற்கு இடமில்லை. ஆனால், இன்றைக்கு உலகம் அச்சத்தின் விழிகளினூடே பாரிஸைப் பார்க்கிறது. ஐஎஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், அரசுக் கணக்கின்படி, 129 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய அரசு நோக்கமும் வழியும்

பாரிஸ் 13/11 தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ் என்பது இஸ்லாமிய அரசு என்பதன் சுருக்கம். முழுப் பெயர் ‘இராக்-சிரியா இஸ்லாமிய அரசு’ அல்லது ‘இராக்-லெபனான் இஸ்லாமிய அரசு’. சிரியாவிலும் இராக்கிலும் சேர்த்து ஒரு பெரும் பரப்பை இந்த அமைப்பு தன் ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தேச எல்லைகளைக் கடந்த அனைத்துலக இஸ்லாமிய அரசு அமைப்பதுதான் ஐஎஸ் குறிக்கோள். இதற்காக அது திரட்டும் படையில் ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்தும் இஸ்லாமிய இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். சிரியாவில் உள்ள ராக்கா நகரம் இஸ்லாமிய அரசின் தலைநகரமாக இருந்துவருகிறது.

எந்தக் குறிக்கோளுக்காகவும் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுதான் ஒரு குறிக்கோளை அடைய முடியும் என்றால் அது நல்ல குறிக்கோளாக இருக்கவும் முடியாது. மேலும், எந்த மதத்தின் அடிப்படையில் ஆனாலும் சரி, சமயஞ்சார்ந்த அரசு காணும் முயற்சி மனிதகுல வரலாற்றின் முற்போக்குத் திசைவழிக்கு எதிரானது என்பதே வரலாற்றுப் பாடம்.

பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசும், அதிலிருந்து விடுபட்ட வங்க தேசத்தின் மதச் சார்பற்ற அரசும் சிங்கள பௌத்த சிறிலங்காவும் சமயச் சார்பற்ற தமிழீழ விடுதலைப் போராட்டமும் நேபாளத்தில் நடந்துவந்த இந்து தத்துவ மன்னராட்சியும், இப்போது மலர்ந்துள்ள மதச் சார்பற்ற மக்களாட்சியும் இஸ்ரேலின் யூதவெறி அரசும், அதிலிருந்து தாயக மீட்புக்காகப் போராடும் மதங்கடந்த பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் முன்னாளைய யூகோஸ்லாவியா உடைந்து உருவாகியுள்ள தேசிய அரசுகளும்... இவையெல்லாம் சமயஞ்சார்ந்த தேசியங்களின் பிற்போக்குக்கும் மொழியினம் சார்ந்த தேசியங்களின் முற்போக்குக்கும் நம் காலத்திய கண்கூடான சான்றுகள்.

சிலுவைப் போர்?

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கண்களை மறைக்கும் பழைமைத் திரை அவர்களை வரலாற்றுப் போக்குக்கு எதிராக நிறுத்தியுள்ளது. அவர்கள் இன்னமும் பதினொன்றாம், பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட மத்திய காலத்தின் சிலுவைப் போர்க் காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பதை அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் உணர்த்துகின்றன. பாலஸ்தீனம், குர்து, காஷ்மீர் உள்ளிட்ட தேசங்களின் மக்கள்தொகை பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பினும், இந்தத் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை ஏற்க ஐஎஸ்ஸுக்கு மனமில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்கங்களை (ஏகாதிபத்தியங்களை) எதிர்ப்பதாக ஐஎஸ் பயங்கரவாதிகள் சொல்லிக்கொண்டாலும், தேசிய விடுதலைப் போராட்டங்களை எதிர்ப்பதிலும் சிதைப்பதிலும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ வல்லாதிக்கங்களின் கைக்கருவிகளாகச் செயல்படுவதை அக்கறையுள்ள எந்த அரசியல் மாணவரும் எளிதில் உய்த்துணரலாம்.

ஐஎஸ்ஸுக்கு எதிராக குர்திய விடுதலைப் படை

ஐஎஸ் பயங்கரவாதிகளைக் களத்தில் எதிர்த்து நிற்பது குர்திய விடுதலை இயக்கப் படைகளே தவிர, அமெரிக்காவோ பிரித்தானியாவோ பிரான்ஸோ இஸ்ரேலோ அல்ல. சிரியா, லெபனான், இராக் ஆகிய அரபு நாடுகளின் பிற்போக்கு அரசுகள் தங்கள் ஆட்சிப்புலத்தில் பெரும் பரப்பை ஐஎஸ் வசம் இழந்து பரிதாபமாய் நிற்கின்றன. இந்த அரசுகள் பிழைத்துக் கிடக்கவே வல்லாதிக்க அரசுகளின் வான் குண்டு வீச்சைத்தான் நம்பியுள்ளன. ஐஎஸ்ஸிடமிருந்து கொபானே நகரை மீட்க குர்திஷ் விடுதலைப் படை நடத்திய வெற்றிகரமான வீரப் போர்தான் ஐஎஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஐஎஸ் எதிரணியினருக்குத் தந்தது. இப்போதும் துருக்கிக்குள் ஊடுருவ முடியாமல் சிரியா எல்லையில் ஐஎஸ் படையைத் தடுத்து நிற்பது குர்திஷ் விடுதலை வீரர்கள்தாம்.

அல் கொய்தா வழியில் ஐஎஸ்

கோட்பாட்டிலும் செயற்பாட்டிலும், ஒசாமா பின் லேடன் நிறுவிய அல் கொய்தாவின் தொடர்ச்சிதான் ஐஎஸ். ஐஎஸ் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பயங்கரவாத ஆற்றலாக வளர்ந்ததன் வரலாற்றுக் காரணிகள் ஆழ்ந்து விரிந்த ஆய்வுக்குரியன. அரசியல்-வரலாற்று மாணவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தைக் குறிப்பிடலாம்.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததிலிருந்து மத்திய கிழக்கு அல்லது மேற்காசியா எனப்படும் இந்தப் பூபாகம் ஒரு வெப்பப் புள்ளியாகவே இருந்துவருவதற்கு அடிப்படைக் காரணம் இப்பகுதியின் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளம். சயோனிச இஸ்ரேலிய அரசை ஏற்படுத்தியதும், பாலஸ்தீனர்களைத் தாயகம் விட்டுத் துரத்தியதும், இராக் மீது படையெடுத்ததும், அரபு நாடுகளில் பிற்போக்கு மன்னராட்சிகளுக்கும் கொடுங்கோலாட்சி களுக்கும் முட்டுக்கொடுத்துவருவதும், இறுதியாகப் பார்த்தால், மேலை வல்லாதிக்கங்களின் எண்ணெய்வளக் கொள்ளைக்காகவேதான். பாலஸ்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்கங்கள் தோண்டிய பெட்ரோலிய கிணற்றிலிருந்துதான் அல் கொய்தா, ஐஎஸ் போன்ற பூதங்கள் கிளம்பின. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னுங்கூடக் கிளம்பப் போகின்றன.

தீர்வு என்ன?

இப்போதும்கூட பாலஸ்தீனம், குர்து உள்ளிட்ட தேசிய விடுதலைப் போராட்டங்களின் வளர்ச்சியும், அரபு நாடுகளின் ஜனநாயக மலர்ச்சியும்தான் அல் கொய்தா, ஐஎஸ் பயங்கரவாதத்தை வேரறுத்து வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை. மதவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் சரியான மாற்று, மொழிவழித் தேசியமும் முழுமையான ஜனநாயமும்தான் என்ப தற்கு ஐரோப்பிய வரலாறும், குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறுமே போதிய சான்றுகள்.

ஆனால், இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசிய அதே அடாவடி மொழியில்தான் இப்போது பிரெஞ்சு அதிபர் ஒல்லாந்தும் பேசிக்கொண்டிருக்கிறார். புகை போட்டுப் பிடிப்பதும்... துரத்தித் துரத்தி வேட்டையாடுவதும்... சட்டங் கருதாமல் தீர்த்துக் கட்டுவதும்! இவை பயங்கரவாதிகளுக்குப் பிடித்தமான சொற்றொடர்கள், நினைவிருக்கட்டும்! பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கு இவையும் ஒரு காரணம் என்பது நினைவிருக்கட்டும்!

- தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தொடர்புக்கு: thozharthiagu@gmail.com

இஸ்லாம் மீதான ஐஎஸ்ஸின் யுத்தம்

வி.எஸ்.முஹம்மது அமீன்

துருக்கியில் அக்டோபரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்த பயங்கரவாதிகள் அடுத்து பிரான்ஸில் நவம்பரில் தம் ரத்த வேட்டையை அரங்கேற்றி இருக்கின்றனர். ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான கொடூரமான அமைப்பாக உருவெடுத்திருக்கிறது ஐஎஸ். உலகம் இன்றைக்கு எப்படி ஐஎஸ் அமைப்பை அச்சுறுத்தலோடு பார்க்கிறதோ, அதே அச்சுறுத்தலோடும் இன்னும் கூடுதல் சங்கடத்துடனும் பார்க்கிறது இஸ்லாமியச் சமூகம்.

இவர்கள் எந்த இஸ்லாமின் பெயரைத் தங்கள் அமைப்புக்குச் சூட்டியிருக்கிறார்களோ, அந்த இஸ்லாமிற்கும் இவர்களுக்கும் எள் முனையளவும் தொடர்பு இல்லை. உண்மையில் இஸ்லாமின் அடிப்படைகளுடனே முரண்பட்டு நிற்கிறது ஐஎஸ்.

இஸ்லாம் சொல்வது என்ன?

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு ஓரிறைத் தத்துவம். திருக்குர்ஆனும், நபிகள் வழியுமே இஸ்லாத்தின் ஆதாரச் சுருதிகள். திருக்குர்ஆனிலும் சரி, நபிகள் காட்டும் வழிகளிலும் சரி, பயங்கரவாதத்துக்குத் துளியும் இடம் இல்லை. “எவர் ஒருவர் அநியாயமாக ஒருவரைக் கொல்கிறாரோ, அவர் மனித இனம் முழுவதையும் கொன்றவரைப் போன்றவர் ஆவார்” என்பதே இஸ்லாம் போதிக்கும் இறைவனின் கட்டளை.

போரில்கூட எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்துள்ளது. போரில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், துறவிகள் கொல்லப்படக் கூடாது. விளைநிலங்கள் அழிக்கப்படக் கூடாது என்பது இஸ்லாத் சொல்லும் முக்கிய விதிகளில் ஒன்று. லட்சம் படை வீரர்களுடன் மெக்காவை வென்று அதன் ஆட்சியாளராக நகருக்குள் நுழைந்ததுமே நபிகள் வெளியிட்ட முதல் அறிவிப்பு, “போரில் நேர் நின்று நம்மைக் கொன்றுக் குவித்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று பொது மன்னிப்பு” என்பதுதான். நபிகள் நாயகம் உருவாக்கிய மதீனா அரசு இஸ்லாமிய அரசின் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்திக் காட்டியது. நபிகள் அமைத்த இஸ்லாமிய அரசான மதீனாவில் யூதர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுடனான ஒப்பந்த விதிகள் மனித உரிமை சாசனமாக இன்றும் போற்றப்படுகிறது. அன்பும் சகோதரத்துவமுமே இஸ்லாமின் அடிப்படை.

இஸ்லாம் மீதான போர்

உண்மையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலும் இஸ்லாம் மீதான அடையாள தாக்குதலாகவே அமைகிறது. அப்பாவிகளைக் கொன்று குவிப்பதும், முகமூடி அணிந்து கழுத்தை அறுப்பதும், பத்திரிகையாளர்களைக் கடத்தி தீயிட்டுக் கொளுத்துவதும், இந்தக் கொடூரங்களையெல்லாம் படம் பிடித்து உலகிற்குக் காட்டுவதும் இஸ்லாமிய அறநெறிகளுக்கு எதிரான தாக்குதல்கள்தான். ஐஎஸ் பயங்கரவாதிகள் கிலாஃபத், ஜிஹாத், கலீஃபா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்துக் கூவுவதனாலேயே அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட முடியாது. உலகின் முக்கியமான மார்க்க மேதைகள் யாவரும் ஐஎஸ்க்கு எதிரான மார்க்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது இங்கே குறிப்பிட வேண்டியது. மனித குலத்துக்கு எதிரான ஐஎஸ் அழிக்கப்பட வேண்டியது, முற்றிலுமாக!

- வி.எஸ்.முஹம்மது அமீன், ஊடகவியலாளர், தொடர்புக்கு: vsmdameen@gmail.com

முதலில் ஐஎஸ்ஸை ஒழிப்போம் அப்புறம் பின்னணி பேசுவோம்

பி.ஏ.கிருஷ்ணன்

பாரிஸ் படுகொலைகளுக்குப் பின் ஐஎஸ் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அதை எப்படி இயங்காமல் செய்யலாம் என்பதைவிட அது எப்படித் தோன்றியது என்பதைப் பற்றிய விவாதங்களே நமது ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்கு முக்கியக் காரணம் அமெரிக்கா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, இராக்கில் இருந்த புக்கா சிறையில் பல ஆண்டுகள் கைதியாக இருந்தவர். அவரை விடுவித்திருக்காவிட்டால் இந்த இயக்கம் தோன்றியே இருக்காது என்று சொல்பவர்களும் உண்டு.

எவ்வாறு இயங்குகிறது?

நாம் ஐஎஸ் பற்றிப் பேசும்போது, அது பிரிட்டனைவிடப் பெரிய பரப்பளவை தன் கட்டுப்பாடில் வைத்திருக்கிறது என்பதையும், 80 லட்சத்திற்கும் மேலாக மக்கள் இந்தப் பரப்பில் வசிக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடுகிறோம். ஜூன் 2015 வரை. அதன் கீழ் 3 லட்சம் சதுர கி.மீ. இருந்தது என்று அல் ஜசீரா பதிவு ஒன்று சொல்கிறது. அது லஷ்கர் போலவோ, ஜைஷ்-இ-முஹம்மது போலவோ அரசு மேற்பார்வையில் இயங்கும் பயங்கரவாத அமைப்பு அல்ல. அதுவே ஒரு அரசை தனது மேற்பார்வையின் கீழ் இயக்குகிறது; விடுதலைப் புலிகள் இயக்கியதைப் போல. ஆனால், புலிகள் கையில் இருந்ததைவிட 20 மடங்கிற்கும் மேலான நிலம் அதன் கையில் இருக்கிறது.

ஐஎஸ் அமைப்பின் கீழ் இயங்கும் உலகம் நமது சிறிய ஊர்களில் எவ்வாறு இயங்குமோ அவ்வாறு இயங்குகிறது. மக்கள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குகிறார்கள். தினமும் சமையலறையில் அடுப்பு எரிகிறது. இந்தப் பொருளாதாரம் இயங்க வேண்டும் என்றால், இங்குள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால், அவர்களோடு வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த வியாபாரத்தை வெளியுலகம் நிறுத்திவிட்டால், அப்பாவி மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

உலகத்திற்கு எதிரிகள் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அல்ல. உலகத்திற்கு எதிரிகள் அதன் தலைவர்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணுவமும். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கணக்கின்படி சென்ற வருடம் சுமார் 30,000 பேர் இயக்கத்தின் தலைமையில் போர் புரிந்தார்கள். 50,000 பேர் என்று வைத்துக் கொண்டாலும் உலகம் அடக்க வேண்டியது இவர்களைத்தான்.

எண்ணெயும் ஆயுதங்களும்

இயக்கத்திற்குப் பணம் எண்ணெய் வியாபாரத்திலிருந்து கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டாலர்களிலிருந்து இரண்டு மில்லியன் டாலர்கள் வரை எண்ணெய் வியாபாரம் நடக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து கணிசமான தொகை ஐஎஸ்க்குக் கிடைக்கிறது. ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியின் எல்லைகளில் கணக்கிலடங்காத எண்ணெய் டேங்கர்கள் வரிசையில் நிற்கின்றன என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர தனி மனிதர்கள் மூலம் எண்ணெய் கடத்தல் நடக்கிறது. 25 லிட்டர் எண்ணெய்க்குப் பண்டமாற்று சுமார் 25 கிலோ கோதுமை மாவு. மேலும், ஐஎஸ் பல அரபுப் பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் வாங்குகிறது. தாமாகவே முன்வந்து பணம் அளிப்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டுதான் அது ஆயுதங்களை வாங்கிறது.

வாங்கும் ஆயுதங்களைப் பற்றிப் பேசும் முன் அதற்குக் கிடைத்த ஆயுதங்களைப் பற்றிப் பேச வேண்டும். லிபியா போர் முடிந்தவுடன் அங்கு இருந்த ஆயுதங்கள் பல ஈராக் மற்றும் சிரியாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டன. அமெரிக்கா ஈராக் போர் வீர்ர்களுக்கு கொடுத்த ஆயதங்களும் ஐஎஸ்க்குக் கிடைத்தன. 40 ஆப்ராம்ஸ் டேங்குகள் உட்பட 220 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்கள் ஐஎஸ் கைவசம் இருக்கின்றன என்று ‘சிஎன்பிசி’ சொல்கிறது. ஆனால் அதன் கையில் இருக்கும் 35 வகைகள் ஆயுதங்களில் 19 வகைகள் ரஷியாவைச் சேர்ந்தவை. முக்கியமாக கஜகிஸ்தான் வழியாக கடத்தப்பட்ட ஆயுதங்கள்.

எது முக்கியம்?

இன்று ஐஎஸ் குலமுறை எப்படி ஆரம்பித்தது என்று ஆராய்வது முக்கியம் அல்ல. அதை எப்படி ஒழிப்பது என்பதே முக்கியம். ஹிட்லர் சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியபோது, நாஜி கட்சி எப்படிப் பிறந்தது என்பதில் ஸ்டாலின் நேரத்தைச் செலவிடவில்லை. இன்னொன்றையும் முக்கியமாகச் சொல்ல வேண்டும். ஐஎஸ் பிறப்பதற்கு அமெரிக்கா உதவி செய்தது என்றாலும் அது பிறந்த வயிறு தீவிர இஸ்லாமிய மதவாதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் - சவுதி அரேபியாவின் கிரேண்ட் மஃப்டி உட்பட - ஐஎஸ் உலகத்தின் முதல் எதிரி, இஸ்லாமின் மிகப் பெரிய எதிரி என்று சொன்னாலும்கூட ஷாரியா சட்டங்களை கூறியது கூறியபடிச் செயல்படுத்துபவர்கள் நாங்கள்தான் என்று அதன் தலைவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை வலியுறுத்தும் வகையில் அவர்களால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் பல்லாயிரக் கணக்கில் இருப்பார்கள். எனவே இஸ்லாமியருக்கு முதல் எதிரி ஐஎஸ்.

இந்துக்களும் ஷியா, அகமதியா முதலானவர்களும், கிறிஸ்தவர்களும், பௌத்த, ஜைன, சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களும், கம்யூனிஸ்ட்டுகளைப் போல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஐஎஸ் பின்பற்றும் மதத்திற்கு மாற்றத்தக்கவர்கள் அல்லது இந்த உலகத்திலிருந்து துரத்தப்பட்டு நரகத்தில் வேகத்தக்கவர்கள் என்று ஐஎஸ் உறுதியாக நம்புகிறது. அடிமை வியாபாரத்தை அது அனுமதிக்கிறது. யெஸ்தி பெண்களுக்கு நடந்தது நமது பெண்களுக்கு நடக்காது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே ஐஎஸ் பிறப்பிற்கு யார் காரணம் என்ற ஆராய்ச்சியை ஐஎஸ் இறப்பிற்குப் பின் பார்த்துக்கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான எண்ணம்.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x