Last Updated : 16 Sep, 2020 07:33 AM

 

Published : 16 Sep 2020 07:33 AM
Last Updated : 16 Sep 2020 07:33 AM

கி.ரா.வின் முதல் எழுத்து

கி.ரா.வின் முதல் கதையை (‘சொந்தச் சீப்பு’) கண்டெடுத்து ‘காலச்சுவடு’ இதழ் வெளியிட்டது. 1948-ல் வந்த கதை அது. கதையைப் படித்துவிட்டு கி.ரா.வை அழைத்துப் பேசினேன். “அந்தக் கதையின் உயிர், அந்த அறையில் தங்கியிருந்த நான்கு பேரும் ‘உபாத்தியாயர்கள்’ என்பதில்தான் இருக்கு. தாங்கள் சீவுகிற சீப்பில் இருக்கிற அழுக்குகளைக்கூட சுத்தப்படுத்தாமல் ஒவ்வொருத்தரும் அழுக்கோடேயே சீவிச் செல்லும் காட்சி மூலமாக, இவர்களா மாணவர்களின் மனசில் இருக்கும் அழுக்குகளை அகற்றிவிடப் போகிறார்கள். பேரு மட்டும்தான் ஆசு இரியர் – அழுக்கை அகற்றுபவர்கள் – ஆனால், அழுக்குகளின் குவியல் இந்த ஆசிரியர்கள்தான் என்கிற உங்கள் விமர்சனத்தைக் கதைக்குள் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்” என்றேன்.

“நா அப்படியெல்லாம் யோசிச்சு வாத்தியார்ன்னு போடல. அப்ப தலைமறைவு வாழ்க்கையில ஊர் ஊராப் போய்க்கிட்டு இருந்தேன். வீர.வேலுசாமி விருதுநகர்ல்ல செளராஷ்டிரா பள்ளிக்கூடம்ன்னு ஒரு பள்ளிக்கூடத்தில வேலை பாத்தார். வேலுசாமிதான் கூப்பிட்டார். ‘நாங்க நாலு வாத்தியாருக ரூம் எடுத்துத் தங்கியிருக்கோம். எங்ககூட வந்து தங்குங்களேன். பாதுகாப்பாகவும் இருக்கும்’ என்றார். அப்படித்தான் அந்த ரூம்க்குப் போயிச் சேந்தேன். நாலு பேரும் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிப் போயிருவாங்க. நா மட்டும் அந்த ரூம்ல தனியா கிடக்கணும். வெளியகூட எட்டிப்பாக்க முடியாது. அப்ப அடஞ்ச ஒரு அனுபவத்தைத்தான் கதையா எழுதினேன். நீங்க சொல்ற மாதிரிலாம் யோசிச்சு எழுதல” என்றார்.

அவர் வாத்தியார்களைப் பற்றி எந்த உள்நோக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். ஆனால், அந்தக் காட்சிக்குள் தானாக அர்த்தம் கூடி வந்துசேர்கிறது. தனக்குச் சொந்தமான சீப்பையும் கண்ணாடியையும் இப்படி அழுக்கு படப் பயன்படுத்துகிறார்களே இந்த அறை நண்பர்கள் என்று கவலைப்பட்ட கோபாலன், வேறொன்றும் செய்ய முடியாத நிலையில், “நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்று எல்லோருக்கும் பொதுவாக்கிவிடுகிறான். இறுதியாகக் கதை இவ்வாறு முடிகிறது: “கோபாலன் இப்போதெல்லாம் பழைய சீப்பை வைத்தே சீவிக்கொள்கிறான். நண்பர்களும் அதையே உபயோகிக்கிறார்கள். அந்த அறைக்கு வருகிறவர்கள் போகிறவர்கள்கூட உபயோகிக்கிறார்கள். கோபாலன் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அவன் மனசு இப்போது கொஞ்சங்கூட கஷ்டப்படுவது கிடையாது. அந்தச் சீப்பும் கண்ணாடியும் இப்போது அவனுக்குச் சொந்தமில்லை என்பதினாலோ என்னவோ?”

உடைமை உணர்வுதான் மனிதத் துன்பத்துக்குக் காரணம். தனி உடைமைகளைப் பொதுவில் வைத்துவிட்டால் துன்பத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடும் என்ற பொதுவுடைமைச் சித்தாந்தத்தைப் புலப்படுத்தத்தான் இந்தக் கதையைத் திட்டமிட்டுப் புனைந்துள்ளார். “இப்படியொரு நோக்கில்தான் எழுதினீர்களா?” என்று மீண்டும் கி.ரா.வை அழைத்துக் கேட்டேன். “ஆமாம், பஞ்சு. அப்போ அந்தக் கட்சியில இருந்தேன்ல்லியா?” என்றார்.

“ஆனா பொதுவில் வச்சா ஒருத்தனும் அதப் பேண மாட்டானுக; அழுக்கடைஞ்சி வீணாப் போயிடும். இப்படி எதிர்மாறாகப் பொருள் கொள்ளும்படியாவும் கதை அமைஞ்சிருக்கே.”

“ஆமா, அதையும் சொல்லணும்ல்ல. பொதுவாகிவிட்ட பொருள ஒழுங்காப் பேண வேண்டும் என்று மட்டும் நடந்திருந்தா இன்னைக்கு இந்த கம்யூனிஸ்ட் அகிலம் இப்படிச் செதஞ்சு சீரழிஞ்சுப் போயிருக்காதில்ல. இத அன்னைக்கே சொல்லி எச்சரிக்கிறேன்.”

“அது சரி! இந்த மனுசங்கள அப்படி மாத்திட முடியுமா?”

“முடியும்.”

“எனக்கென்னமோ அப்படியெல்லாம் மாத்திடலாம்னு நினைக்க முடியல. இப்ப ஒங்க கதைய எடுத்துக்கங்க... தன் சீப்புனு இருக்கிற வரைக்கும் அழுக்க துடைச்சி சுத்தப்படுத்தி வச்சான். இப்போ அது பொதுவாகிட்ட பிறகு முன்ன மாதிரி துடைப்பானா அந்த கோபாலன்?”

“துடைப்பான். அதுல என்ன சந்தேகம்? அவனால துடைக்காம சீப்பத் தலைக்குப் பக்கத்தில கொண்டுபோக முடியாது. ஒண்ண நினைவுல வச்சிக்கங்க. இந்த மனுசங்களப் பிசஞ்சு என்ன மாதிரியாகவும் மாத்திப் படைக்கலாம். ஜீவாவ எடுத்துக்கங்க, காந்தியப் பாருங்க... பொதுச் சொத்த எப்படிக் கையாண்டாங்க. அடே அப்பா! சிறுவாரியா இருக்கிற இப்படிப்பட்டவங்கள பெருவாரியா மாத்தணும். முடியாதுனுலாம் இல்ல. மனுசன் தொடங்கின காலத்திலருந்து இன்னைக்கு வரைக்குமான வரலாற்றை நினைச்சுப் பாருங்க. ஒங்களுக்கும் நம்பிக்கை வரும்!”

- க.பஞ்சாங்கம், பேராசிரியர்.

தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in

செப்டம்பர் 16: கி.ரா.வின் 98-வது பிறந்த தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x