Last Updated : 06 Mar, 2020 09:19 AM

 

Published : 06 Mar 2020 09:19 AM
Last Updated : 06 Mar 2020 09:19 AM

‘கோவிட்-19’: சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய போர்த் தந்திரங்கள்!

‘கோவிட்-19’ தொடங்கிய இடம் சீனா. அதிகம் பாதிப்புக்குள்ளான இடமும் சீனாதான். ஜனவரி 23 அன்று வூகான் நகரத்தைத் தனிமைப்படுத்தியது சீனா. அதைத் தொடர்ந்து ஹூபை மாநிலத்தின் ஏழு கோடி மக்கள்திரள் அடங்கிய பெரும் பகுதியையும் தனிமைப்படுத்தியது. சரியாக ஒரு மாதத்துக்குப் பிறகு, பிப்ரவரி 23 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் குறையத் தொடங்கியது. இந்தப் பேரிடரை சீனா எங்ஙனம் எதிர்கொள்கிறது என்பதில் உலக நாடுகளுக்குப் பல பாடங்கள் உள்ளன. சில பின்பற்றுவதற்கானவை. சில புறக்கணிக்க வேண்டியவை.

சீன நகரங்களை உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு பார்வையிட்டது. நோயை சீனா எதிர்கொண்ட விதத்தை அக்குழு பாராட்டியிருக்கிறது. 10 நாட்களில் 2 பிரம்மாண்ட மருத்துவமனைகளைக் கட்டி முடித்தது. இந்த அபூர்வ முன்னெடுப்புகள் ஊடகங்களில் வெளியாயின. முகம் தெரியாத எதிரியோடு சீனர்கள் நிகழ்த்திவரும் யுத்தம் இன்னும் பல களங்களைக் கொண்டது.

மருத்துவத் துறையின் தைரியம்

50,000 பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்பது ஒரு சராசரி மருத்துவத் துறைக் கணக்கு. வூகான் நகரில் இரண்டு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ்தான் இருந்தது. ஒருகட்டத்தில், ஒவ்வொரு ஆம்புலன்ஸுக்கும் 275 நோயாளிகள் காத்திருந்தனர். ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்ததும் ஆம்புலன்ஸ் சுத்திகரிக்கப்பட வேண்டும். இதற்கு ஒரு மணி நேரம் எடுக்கும். பின்னரே, அடுத்த நோயாளியை அழைத்து வர முடியும்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தாதியர்கள், ஊழியர்கள், மருத்துவர்களெல்லாம் பகலிரவாகப் போராடிவருகிறார்கள். நோயாளிகளின் நாசிகளில் நுழைந்த வைரஸ், அவர்களது நுரையீரலைத் தின்றுவிடாமல் பாதுகாக்க சகல முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சிகிச்சையின் போது மருத்துவத் துறையினரும் பாதிக்கப்பட்டார்கள். பிப்ரவரி 15 அன்று வெளியான செய்திக் குறிப்பின்படி, பாதிக்கப்பட்டவர்களில் 1,716 பேர் மருத்துவத் துறைப் பணியாளர்கள். அன்றைய தேதியில் மரணத்தைத் தழுவியவர்களில் ஆறு பேர் மருத்துவத் துறையினர். இதெல்லாம் அவர்களை அதைரியப்படுத்தவில்லை. நாடெங்கிலுமிருந்து 33,000 மருத்துவப் பணியாளர்கள் ஹூபை மாநிலத்துக்கு வந்தனர். பல கல்வி நிலையங்களும் சமூக நலக் கூடங்களும் தற்காலிக மருத்துவமனைகள் ஆயின.

ட்ரோன்களும் ரோபோக்களும்

தொழில்நுட்பத்தையும் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டது சீனா. இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். ஒன்று ட்ரோன். வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறதா என்று அறிவது எப்படி? ஆகாயத்தில் பறந்துவரும் ட்ரோன், ஒவ்வொரு வீட்டின் ஜன்னல் அருகிலும் தாழ்வாகப் பறக்கும். வீட்டில் உள்ளவர்களின் வெப்ப நிலையைக் கண்டறிந்து தெரிவிக்கும். இந்த வெப்பமானி ட்ரோன்கள் உபரியாக வேறொரு வேலையும் செய்தன. மக்கள் எத்தனை காலம்தான் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பார்கள்? சீனாவின் புகழ் பெற்ற உள்ளரங்க விளையாட்டு மாஜோங். சீட்டாட்டத்தில் ரம்மியோடு ஒப்பிடலாம். ஆனால், சீட்டுகளுக்குப் பதில் சீன எழுத்துகளையும் சித்திரங்களையும் தாங்கிய சதுரக் காய்கள் இருக்கும். அயல்வாசிகள் சிலர் ஒன்றுகூடி மாஜோங் விளையாடினர். மக்கள் கூடுவதைத் தடைசெய்வதுதானே தனிமைப்படுத்தலின் நோக்கம்? இப்படியான ஒன்றுகூடல்கள் அந்த நோக்கத்துக்கு ஊறு விளைவிக்கும். வெப்பமானி ட்ரோன்கள் மக்களில் சிலர் மாஜோங் விளையாடுவதைக் கண்டறிந்தன. உடன் நகராட்சி அவரவர் வீடுகளுக்குப் பிரிந்து போகுமாறு பணித்தது. வீதிகளில் கிருமி நாசினிகளைத் தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த யுத்தத்தில் சீனர்கள் சிறப்பாகப் பயன்படுத்திவருகிற இன்னொரு தொழில்நுட்பம் ரோபோ. மருந்து, உடை, போர்வை, உணவு முதலான பொருட்களை மருத்துவமனைக்குள் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்துக்கு மனிதக் கரங்கள் தீண்டாமல் கொண்டுபோய்ச் சேர்த்தன ரோபோக்கள். அழுக்குத் துணிகளை அகற்றவும் குப்பைக் கூளங்களைக் களையவும் அதற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் ஓசையின்றி இயங்கிக்கொண்டே இருந்தன.

நவீன மருத்துவச் சோதனைகள்

மருத்துவச் சோதனைகளிலும் சிகிச்சை முறைகளிலும் பல நவீன உத்திகளை சீனா பயன்படுத்தியது. சீனாவைத் தவிர, வேறு எந்த நாட்டாலும் இத்தனை குறுகிய காலத்தில் அறிவியலையும் வளங்களையும் மனித சக்தியையும் இவ்வளவு சிறப்பாக ஒன்றிணைத்திருக்க முடியாது என்று எழுதியது உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘லான்செட்’. இதற்கெல்லாம் பலன் இருந்தது. இது போன்ற தொற்றுநோய்கள் பரவும்போது எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போய் உச்சத்தை எட்டும். அதற்குப் பிறகு, இறங்குமுகமாக இருக்கும். ஒருகட்டத்தில், தேய்ந்து காணாமல்போகும். ‘கோவிட்-19’ பாதிப்பு சீனாவைப் பொறுத்தமட்டில் உச்சத்தை எட்டிவிட்டது. பிப்ரவரி 23-லிருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சீனாவில்தான் பாதிப்பு குறைந்திருக்கிறதே தவிர, வேறு பல நாடுகளில் அதிகமாகியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக ‘கோவிட்-19’ஆல் அதிக மரணம் நிகழ்ந்திருப்பது ஈரானில். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளானது தென் கொரியா. ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பாதிப்புக்குள்ளானது இத்தாலி. சீனாவுக்கு வெளியே சுமார் 50 நாடுகள் சிறிதும் பெரிதுமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

சீனாவின் அபாரமான செயல்திறன், ‘கோவிட்-19’ பாதிப்பைக் குறைத்திருக்கிறது என்பது உண்மைதான். அதேவேளையில், நோயை எதிர்கொள்வதில் சீனா தொடக்கத்தில் காட்டிய சுணக்கம், அதன் அதிகாரக் கட்டமைப்பின் குறைபாடுகளை உணர்த்துவதாக அமைந்துவிட்டது.

மையத்தில் குவிந்திருக்கும் அதிகாரம்

கடந்த டிசம்பர் மாதம் எப்போதும்போல் நல்ல குளிருடன்தான் தொடங்கியது. வறட்டு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகளுடன் டிசம்பர் மத்தியில் நோயாளிகள் வந்தபோது, மருத்துவர்கள் குளிர்க்காய்ச்சல் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், சோதனைகளின்போது சிலருக்கு நுரையீரல் வீக்கம் இருப்பது தெரிந்தது. அவை வழமையான மருந்துகளுக்குக் கட்டுப்படவும் இல்லை. 2003-ல் சீனாவையும் ஹாங்காங்கையும் உலுக்கிய சார்ஸ் நோய்க்கு நிகரான அடையாளங்கள் இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். டிசம்பர் இறுதியில் அவர்கள் சிவப்புக் கொடிகளை உயர்த்தினர். ஜனவரி முதல் நாள் தொற்றுக்குக் காரணமெனக் கருதப்படும் மீன்-விலங்குச் சந்தை மூடப்பட்டது. உள்ளூர் நிர்வாகம் அடக்கி வாசிக்க விரும்பியது. ஒரு கட்சி ஆட்சியும் மையத்தில் அதிகாரக் குவியல் உள்ள அரசமைப்பையும் கொண்ட சீனாவில், வூகான் மாநகராட்சியும் ஹூபை மாநில நிர்வாகமும் பெய்ஜிங்கிலிருந்து ஆணைகளுக்காகக் காத்திருந்தன.

இந்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றாது என்று சொல்லிவந்தன. ஜனவரி 20-ல்தான் இந்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றக்கூடியது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. திசை வழியைத் தீர்மானிப்பதில் மூன்று வாரத் தாமதம் நேர்ந்தது. இதற்கு சீனா கொடுத்த விலை அதிகம். தீவிரம் புரிந்ததும் அது செயலாற்றிய வேகமும் அதிகம். உலக நாடுகள் அனைத்தும் இந்த யுத்தத்தின் போர்த் தந்திரங்களைச் சீனாவிடமிருந்து திறந்த மனதுடன் கற்றுக்கொள்ள வேண்டும். சீனா தனது இரும்புத் திரை நிர்வாக அமைப்பை மறுபரிசீலிக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சீனா உட்பட எல்லா அரசாங்கங்களும் ஒன்றிணைந்து, இந்த வைரஸுக்கான முறிவைக் கண்டடைய வேண்டும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x