Published : 04 Feb 2020 07:12 AM
Last Updated : 04 Feb 2020 07:12 AM

ஐந்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏற்படுத்தப்போகும் கொடுமைகள் என்ன?

மாதவன்

தமிழ்நாடு அரசின் கல்வித் துறையில் 2008-ம் ஆண்டையொட்டி, செயல்வழிக்கற்றல் போன்ற கற்பித்தல் முறைகள் சிறப்பாய் நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்போது, பள்ளிகளில் குழந்தைகள் வாசிப்பதற்கான வாய்ப்புகள், ‘புத்தகப் பூங்கொத்து’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கேற்ற சிறு சிறு புத்தகங்கள் தயாரிக்கும் பொறுப்பை ஆசிரியர்களில் சிலர் ஒருங்கிணைத்தோம். அவ்வாறு சுமார் 40 புத்தகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்துமே களப்பரிசோதனை செய்யப்பட்டன.

‘பயம்’ என்ற தலைப்பில் வார்த்தைகளே இல்லாத படங்களுடன் கூடிய புத்தகம் ஒன்றும் தயாரானது. அந்த நூலில் ஒருபக்கம் எலி, மறுபக்கம் பூனை. ஒருபக்கம் பூனை, மறுபக்கம் நாய். ஒருபக்கம் செவிலியர் கையில் ஊசி, மறுபக்கம் குழந்தை. ஒரு பக்கம் புழு, மறுபக்கம் கத்திரிக்காய். இப்படியான வரைவுகளை எடுத்துவைத்துக்கொண்டு அவர்கள் பார்வையில் எவ்வாறு பார்க்கிறார்கள் என அறிய குழந்தைகளிடம் சென்றோம். வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பகுதியில் இரண்டாம் வகுப்பு குழந்தை, பூனையைப் பார்த்தால் எலிக்குப் பயம், ஊசியைப் பார்த்தால் குழந்தைக்குப் பயம் என்று சொல்லிக்கொண்டே வந்தார். ‘கத்திரிக்காயைப் பார்த்தால் புழுவுக்குப் பயம்’ என்றார். எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. விவரம் கேட்டோம். அவர் சொன்னார். ‘உங்களுக்கு விஷயம் தெரியாதா? புழு கத்திரிக்காயிடம் சென்றால் கத்திரிக்காய் அதை விழுங்கிவிடும். வேண்டுமானால் அரிந்து பாருங்கள் கத்திரிக்காய் வயிற்றில் புழு இருக்கும்’ என்றார்.

அதற்கு மேல் தேவையான விளக்கங்களை அக்குழந்தைகளுக்கு அளித்துவிட்டுப் புறப்பட்டோம். குழந்தைகளிடம் இப்படியான புரிதலுக்கும் கோணத்துக்கும் வாய்ப்பு உள்ளது என அதுவரை நாங்கள் எண்ணவில்லை. அதுதான் குழந்தைமை. சரி... தவறு என்று பார்க்காது மனதில் பட்டதைச் சொல்வார்கள். குழந்தைகளின் அடைவுத் திறனில் ஏற்றம் காண வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. எண்களை வைத்துத்தான் மாணவர்களை மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது என்ற வருத்தம் ஒரு நீண்ட நெடிய வரலாறுடையது.

அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நாடாளுமன்ற உரை

எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் மாநிலங்களவையில் 1989- ல் பேசிய பேச்சு நாட்டை அதிரவைத்தது. மாணவர்கள் புரியாமையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஏராளமானவை கற்பிக்கப்படுகின்றன. ஆனால், சிறிதளவே அவர்கள் கற்கின்றனர் என்றார் நாராயணன். பல வாரியங்களின் பாட நூல்களை எடை போட்டு சுமார் 6 முதல் 8 கிலோ வரையிலான பாடநூல்களையும் குறிப்பேடுகளையும் சுமப்பதாக விமர்சித்தார். அவர் புத்தகங்களின் உள்ளடக்கமும் சரி, மொழியும் சரி; குழந்தைமைக்கு ஏற்றதாக அமைய வேண்டும் என்றார். இதன் தொடர்ச்சியாகவே பேராசிரியர் யஷ்பால் தலைமையில் சுமையற்ற கற்றல் குழு அமைக்கப்பட்டு, பொருள் பொதிந்த சிறு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

யஷ்பால் குழுவின் (1993) வழிகாட்டலின்படியே தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதலில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர், அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் படிப்படியாக நடைமுறைக்கு வந்தது. இதில் 40% மதிப்பெண்களுக்கு மாணவர்களின் பல்வேறு தனித்திறன்களும் அவ்வப்போது நடத்தப்படும் தேர்வுகளின் தொகுப்பும் கணக்கில் கொள்ளப்பட்டன. 60% மதிப்பெண்களுக்கு பருவந்தோறும் நடைபெறும் தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. முதலில் இது ஆசிரியர்களுக்குப் பிடிபடவில்லை. இதன் நன்மைகளை உணர்ந்த பின்னரே அவர்கள் இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் ஆர்வம்காட்டத் தொடங்கினர்.

தரமான கல்வியில் சமரசம் இல்லை

கல்வி உரிமைச்சட்டம் - 2009, ‘எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும்’ என்று கூறியதே தவிர, மாணவர்களின் திறனடைவில் எவ்விதமான சமரசத்துக்கும் இடமளிக்கவில்லை. வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கும்போதுகூட, அந்த வயதுக்கான திறன்களைப் போதிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. கல்வி முறையில் இத்தகைய ஆரோக்கியமான மாற்றங்களை முழுவதுமாக நடைமுறைப்படுத்தச் சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும்.

10, 12 வகுப்புகளைப் போலவே 5, 8 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசின் முடிவு குழந்தைகளுக்குப் பெரிய பாரமாகவே இருக்கும். கற்றலில் அச்சத்தைக் கூட்டும். இடைநிற்றலை அதிகரிக்கும். சமூகத்தில் பல்வேறு பின்புலங்களிலிருந்து வரும் குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரேவிதமான திறனடைவுகளை அடைய வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு குழந்தைகளின் உரிமைக்கு ஆதரவான செயலாக இருக்கும்?

குழந்தைகள் அனைவரும் அவரவர்களின் கற்றல் வேகத்துக்கு ஏற்பவே கற்க இயலும். அவர்கள் பள்ளிக்கு வருவது பாடம் சார்ந்த திறன்களோடு சமூகத்தில் பழகும் திறன்களையும் கற்றுக்கொள்ளத்தான். இவ்வாறான பன்முகத் திறன்கள் வளர வேண்டிய பருவத்தில் அதற்கு மாற்றாக மனப்பாடக் கல்விக்கும் அச்சுறுத்தும் தேர்வு முறைக்கும் இட்டுச் செல்வது ஒரே வகையான ரோபோக்களை உருவாக்கும் முயற்சி இல்லாமல் வேறு என்ன?

ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வினாத்தாள்

2008-ல், தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரித்தளிக்கும் முறை பல மாவட்டங்களில் நடைமுறையில் இருந்தது. அப்போது, மேனாள் ஆட்சிப்பணி அதிகாரி ம.ப. விஜயகுமாரிடம் ‘மாவட்ட அளவை விட்டுவிட்டு ஒன்றிய அளவுக்காவது பொதுவான வினாத்தாள் தயாரித்து அளிக்கலாமே’ என்றேன். அவரோ, ‘நான் பள்ளி அளவில் ஒரே வினாத்தாளையே ஒப்புக்கொள்ள மாட்டேன். தொடக்கநிலைகளில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக வினாத்தாள்கள் தயாரிப்பதுதான் சரியான தேர்வு முறையாக இருக்க முடியும்’ என்றார்.

பொதுத் தேர்வுகளைப் பற்றி விவாதிக்கிற இந்நேரத்தில் விஜயகுமாரின் வார்த்தைகள்தான் எனக்கு நினைவில் வருகின்றன. குழந்தைகளை அவரவர் போக்கில் விட்டுவிட வேண்டும். மதிப்பீடு செய்யவே வேண்டாம். இதற்கு, ஆசிரியர்களை எதற்கும் பொறுப்பாக்கக் கூடாது என்று பொருள் அல்ல. கள யதார்த்தத்தை மனதில் கொண்டு குழந்தைமையைப் போற்றி வளர்க்க வேண்டிய பொறுப்பினை ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆசிரியர்களைக் கூடுதலாக மேலாண்மை செய்து அவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொணர்ந்து பள்ளிக்கூடத்தைக் குழந்தைகள் விரும்பும் இடமாக மாற்ற வேண்டும்.

அதை விடுத்து, தேர்வினை மட்டுமே மையமாகக் கொண்டு பள்ளிகள் செயல்படத் தொடங்கினால் அதன் விளைவு ஒருபோதும் ஆரோக்கியமானதாக இருக்காது. நாம் ஒரு பெரும் கொடுமைக்குத் தயாராகிவிட்டிருக்கிறோம்; குழந்தைகளைக் கொடுமைக்குள்ளாக்கும்போது பல தலைமுறைகளுக்கு நீடிக்கும் கொடுமையாக அது மாறிவிடும் என்ற எச்சரிக்கையுணர்வு நமக்கு வேண்டும்!

- என். மாதவன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தொடர்புக்கு thulirmadhavan@gmail.comஎன்.

சமமான தரமுள்ள பள்ளிகளில் படித்தாலும் ஓர் ஏழைக் குழந்தை பணக்காரக் குழந்தையை எட்டிப்பிடிக்க முடியாது. சமமான நிலையிலுள்ள பள்ளிகளில் படித்தாலும், ஒரே வயதில் கல்வியைத் தொடங்கினாலும், ஏழைக் குழந்தைகளுக்கு மத்திய தரக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்காது. மத்திய தரக் குழந்தைகளுக்கு என்ன வசதிகள் கிடைக்கும்? வீட்டில் உரையாடல், வீட்டிலுள்ள நூல்கள், விடுமுறைக் காலப் பயணம் முதலியன ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைக்காது. பள்ளியிலும் வெளியிலும் தன்னைப் பற்றிய மதிப்பீடும் வேறுபடும். எனவே, ஏழைக் குழந்தை தனது முன்னேற்றத்துக்கும் கற்றலுக்கும் பள்ளியையே நம்பியிருந்தால் பின்தங்கியே இருக்க வேண்டியதிருக்கும்.

- இவான் இல்லிச்,உலகப் புகழ்பெற்ற கல்விச் சிந்தனையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x